நிகும்பலை

bookmark


விடிந்து வெகு நேரமாகிவிட்டது.

அந்த அறையில் மட்டும் சூரியனது திருஷ்டி செல்லவில்லை.

எதிரிலிருந்த மங்கிப் புகையடைந்த மண்எண்ணெய் விளக்கருகில் ஓர் மாணவன் கையிலிருந்த புத்தகத்தில் ஏகாக்கிர சிந்தையாக இருந்தான்.

அன்று இரவு அவனுக்குச் சிவராத்திரி; பரீட்சை நெருங்கினால் பின் மாணவர்களுக்குச் சிவராத்திரி ஏன் வராது?

வெளியே தடதடவென்று கதவைத் தட்டும் சப்தம் அவனது யோகத்தைக் கலைத்தது.

"மிஸ்டர் ராமசாமி! மிஸ்டர் ராமசாமி!" என்று அவன் நண்பனின் குரல்.

கதவைத் திறக்கிறான்.

"என்னவே! நீரெல்லாம் இப்படி `ஸ்டடி` செய்தால் பரீட்சை தாங்குமா? `கிளாஸ்` தான்!" என்று வந்தவன் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான்.

"ஏது, ரொம்ப நேரமாகிவிட்டது போலிருக்கே? நீர் உள்ளேயிரும்; நிமிஷத்தில் ஜோலியை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்; `இண்டியன் ஹிஸ்ட்ரி`யை முடித்துவிடலாம். `எ மினிட்` " என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஓடினான்.

"உம்ம படிப்புக்கு நான் எங்கே?" என்றார் வந்தவர்.


இருவரும் பி.ஏ. பரீட்சைக்குப் பணம் கட்டியிருக்கிறார்கள். உள்ளே தங்கியவர் பெயர் நடேசன். இல்லை, மிஸ்டர் நடேசன்.

"என்னவே! அதுக்குள்ளையா குளித்துச் சாப்பிட்டு விட்டீர்?"

"ஆமாம், ஆமாம்!" என்று ஈரம் சொட்டிக் கொண்டிருந்த தலையைத் துடைத்துக்கொண்டே வின்சென்ட் ஸ்மித் என்பார் எழுதிய இந்திய சரித்திரத்தை எடுத்துப் புரட்டினான்.

`அடிமை அரசர்களினால் உண்டான நன்மைகள்` என்ற பகுதியைத் திருப்பி வைத்துக்கொண்டு நாலாயிரப் பிரபந்தத்திற்காகத் தொன்று தொட்டு ஏற்பட்ட ராகத்தில் வாசிக்க ஆரம்பித்தான்.

மிஸ்டர் நடேசனும் தனது மூளைக்குப் பக்கபலமாக ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு இருந்தவர், இரண்டு மூன்று நிமிஷம் கழித்து, "இதெல்லாம் `எக்ஸாமினேஷனு` க்கு வராதுவே; வந்தாலும் ஜமாய்த்துவிடலாம். நம்ப புரொபெஸர் கொடுத்த நோட்ஸை எடுத்து நல்ல `டாப்பிக்கலா` இரண்டு `சப்ஜெக்ட்ஸ்` வாசியும்!` என்றார்.

இருவரும் ஐந்து நிமிஷமாகத் தேடினார்கள். அட்டைகள் இரண்டும் அந்தர்த்யானமாகி, பக்கங்கள் ஒன்றோடொன்று ஒத்துழையாமை செய்து கொண்டிருந்த ஒரு காகிதக் குப்பையை எடுத்தார்கள். அதை நோட்டுப் புஸ்தகம் என்பது உயர்வு நவிற்சி. எழுத்துக்கள் பிரம்மலிபி; ஆதியும் அந்தமும் இல்லாத சிவனார் போல் விளங்கியது.

இவ்வளவு அனந்த கல்யாண குணங்களும் நிறைந்த அந்த `நோட்டுப் புஸ்தகத்தை`ப் பலவிதமாகப் புரட்டி, ஒரு மாதிரித் திருப்தியடைந்தவன்போல்`பர்மிய யுத்தங்களின் சுருக்கம்` என்ற பகுதியைப் படிக்க ஆரம்பித்தான்.


"என்ன மிஸ்டர் இதைப் படிக்கிறீர்? போன ஸெப்டம்பருக்கு கேட்டாச்சே. மேலும், இந்த `லெவன்த் அவரில் தரோ ஸ்டடி` முடியுமா? `வார்ஸ்` வந்த காரணங்களைப் படியும். `ஈவண்ட்ஸ்` விட்டுவிடும்; `எப்பெக்டஸ்` படியும். `பிரிப்பேர்` பண்ணவே தெரியலையே" என்று கடிந்து, சுருக்க வழி சொல்லித் தந்த மிஸ்டர் நடேசன் அதற்குள் அணைந்துபோன சிகரெட்டைப் பற்றவைத்துக் கும்பரேசக பூர்வமாக பிரம்ம பத்திரத்தின் சூக்ஷ்ம சக்தியை வெகு சுவாரஸ்யமாக ஆகர்ஷித்துக்கொண்டு இருந்தார்.

பரீட்சைப் பாராயணம் நடந்தது.

"என்ன மிஸ்டர்! மணி `ஒன்` ஆகிவிட்டது போலிருக்கே! மத்தியானம் வந்து முடித்துவிடுவோமே!" என்றார் மிஸ்டர் நடேசன்.

"சரி."


மத்தியானம்.

அகோரமான வெயில்.

"இந்த `ஹாட் ஸ்ன்`லே வந்தது ரொம்ப `டயர்டா`க இருக்கு!" என்று சொல்லிக்கொண்டு உள்ளே நுழைந்த நடேசன், ஒரு பாயை விரித்துக் கொண்டு சாய்ந்தான்.

"எனக்கும் `டயர்டா`த்தான் இருக்கிறது. ஆனால் முடியுமா? சாயங்காலத்திற்குள்ளாவது `இண்டியன் ஹிஸ்டிரி`யை முடித்துக்கொண்டு`பாலிட்டிக்ஸ்` ஆரம்பித்து விடலாம்!" என்றார் மிஸ்டர் ராமசாமி.

"ஸ்! இந்த `ஹெவி ஸ்ன்`லே `சப்ஜெக்ட`ஸா? ஏதாவது `லைட்`டா `நான் டீட்டெயி`லை எடுத்துப் படி."

ஒரு மேல்நாட்டு நாவலாசிரியர் எழுதிய நாவல் ஒன்றை எடுத்து முதலிலிருந்து ஆரம்பித்தான்.

"என்ன மிஸ்டர் உமக்குச் சொன்னாலும் தெரியவில்லையே. சட்டர்ஜி `நோட்ஸ்`எடுத்துப் படியும். இதில் மூன்று `டாபிக்ஸ்`. அதை அவன் நல்லா `டீல்`பண்ணியிருக்கிறான்."

படிக்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் மிஸ்டர் நடேசன் பரீட்சையை மறந்தார். இருவரும் சுவாரஸ்யமாகக் குறட்டைவிட்டார்கள்.

"`ஹால் டிக்கட்ஸ்` வந்துவிட்டதாம்!" என்று இரைந்து கொண்டே உள்ளே வந்தார் ஒரு மாணவர்.

"என்ன தூக்கம்? `ஹால் டிக்கட்ஸ்` வந்துவிட்டதாம் ஸார்" என்று மறுபடியும் சொல்லி எழுப்பினான் வந்தவன்.

"எப்போ? எப்போ?" என்று எழுந்திருந்தார்கள் இருவரும்.

"`மார்னிங்`தான் வந்ததாம்; போய் வாங்கிக் கொண்டு வந்துவிடுவோமே" என்றார் வந்தவர்.

"புறப்படுவோம், `எ மினிட்`..." என்று சொல்லிக்கொண்டு இருவரும் மேல்சட்டையைப் போட்டுக்கொண்டார்கள்.


"என்ன மிஸ்டர் சண்முகம்? `சப்ஜெக்ட்` எல்லாம் முடிச்சாச்சா?" என்று கேட்டான் ராமசாமி.

"என்ன பிரதர், `சப்ஜெக்ட்ஸ்` எல்லாம் அப்படியே இருக்கு; இங்கிலீஷைத் தொடவே இல்லை. நீங்கள் எதுவரைக்கும் முடித்திருக்கிறீர்கள்?" என்றார் சண்முகம்.

"என்ன `பிரதர்?` அன்னிக்கே நீங்க `ஹிஸ்டரி`யை எல்லாம் முடித்தாய்விட்டது என்றீர்களே!" என்று சிரித்தான் நடேசன்.

"ஒரு தடவை `டச்` பண்ணா போதுமா? `ஸ்டடி` பண்ண வேண்டாமா?" என்றார் சண்முகம்.

"எங்களுக்கு ஒரு தடவை `ரிவைஸ்` பண்ணவே `டயம்` இல்லையே. பிரதர்! கொஞ்சம் ஒங்க `எக்கனாமிக்ஸ்` நோட்டைக் கொடுங்கள். `மார்னிங்` தந்துவிடுகிறேன்" என்றான் ராமசாமி.

"இல்லை `பிரதர்`; அதைத்தான் இப்போ நான் `ஸ்டடி` பண்றேன். நாளைக்குக் கொண்டுவாரேனே!"

"ஏன் பிரதர், நீங்களும் நம்ப ரூமிற்கு வந்தால் ராத்திரியிலேயே எல்லோரும் `ஸ்டடி` செய்துவிடலாமே, எப்படி?" என்றான் நடேசன்.

"சரி."

"இப்படி ஹோட்டலுக்குப் போவோம். `டய`மாகி விட்டது!" என்றான் ராமசாமி.


மூவரும் கலாசாலையை நெருங்கினார்கள். அப்பொழுதுதான் கலாசாலை ரைட்டர் தனது அறையைச் சாத்திப் பூட்ட எத்தனித்தார்.

"பிரதர், கொஞ்சம் தயவு செய்யணும்!" என்று சண்முகம் ஓடிப்போய்க் கையைப் பிடித்தான்.

"ஏன் சார், `ஆபீஸ் அவர்`ஸில் வரக்கூடாது? எனக்குக் கொஞ்சம் `பிஸினெஸ்`இருக்கிறது. சார்" என்று பிரமாதப் படுத்திக்கொண்டார் ரைட்டர் அனந்தராம் அய்யர்.

சண்முகத்தின் கையிலிருந்த ஏதோ ஒரு சிறிய விஷயம், ரைட்டர் பையில் `கிளிங்`என்ற சப்தத்துடன் விழுந்தது. வேதாரண்யத்தில் கதவைத் திறக்கச் செய்யும்படி பாடினார்களாமே, அந்தப் பாட்டைவிடப் பன்மடங்கு சக்தி வாய்ந்தது! உடனே ரைட்டர் முகம் மலர்ந்து உபசரிக்க வேண்டுமென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

மூவரும் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வந்தனர்.

எதிரே இவர்களுடைய சரித்திர ஆசிரியர் வந்தார். இவர் மூளையில் இல்லாதது சரித்திரம் சம்பந்தப்பட்ட மட்டில் பரீட்சைக்கு அவசியமில்லாதது என்று சொல்லிவிடலாம். அட்சரம் பிசகாமல் அவர் படித்த புத்தகங்களின் கதம்பமாக இருக்கும் அவர் பிரசங்கங்கள், சரித்திரங்களை யூனிவர்சிட்டி கேள்விகளின் விடைகளாக மாற்றிக் கற்றுக்கொடுப்பதில் நிபுணர்; பரீட்சையில் மாணவர்கள் தோற்காதபடி பார்த்துக் கொள்வதிலும் நிபுணர்.


இவர்களைக் கண்டதும், "என்னடே! `ஸ்ப்ஜெக்ட்ஸ்` எல்லாம் ஆகிவிட்டதா? `இண்டியன் ஹிஸ்டரி` முடித்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

"ஆம் சார்" என்றான் நடேசன்.

"இந்த மார்ச்சில், `டல்ஹௌ`ஸியில் ஒரு கேள்வி வருமப்பா. படித்தாகிவிட்டதா?" என்றார்.

"`பாலிஸி ஆப் லாப்ஸ்` தான் சார் அதில் முக்கியம்!" என்றான் நடேசன்.

"அதைச் சொல்லு பார்ப்போம்" என்றார் புரொபெஸர்.

நடேசன் தனது சொந்த இங்கிலீஷில் சொல்லிக்கொண்டு வந்தான்.

புரொபெஸர் இடைமறித்து, "இப்படி எழுதினால் உனக்குச் சுன்னம்தான். நீ என்`நோட்ஸை`ப் படித்தாயா?" என்று கேட்டுவிட்டு, "ராமசாமி, நீ சொல்லு பார்ப்போம்" என்றார்.

ராமசாமி பிளேட் வைத்தான். இடையில் ஒரு வார்த்தை திக்கிற்று; புரொபெஸர் அதைத் தொடர்ந்தே பாராயணம் பண்ணி முடித்தார். "கேர்புல்லாகப் படியுங்க. இன்னும் ஒரு வாரந்தான் இருக்கிறது" என்று புரொபெஸர் விடைபெற்றுக் கொண்டார்.


"ராமசாமிக்குக் `கிளாஸ்`தான்!" என்று சிரித்தான் நடேசன்.

"இதைத் தவிர தெரியாதே. நீயாவது சொந்தமா ஏதும் அடிச்சு விடுவாய்" என்றான் ராமசாமி.

"மிஸ்டர், ஒங்க நம்பர் என்ன?" என்றான் நடேசன்.

"உம்முடையதைச் சொல்லுமேன்" என்றார் சண்முகம்.

"நமக்கு கோளாத்தான்!" என்றான் நடேசன்.

"அதென்ன ஜோஸியம்?" என்றான் ராமசாமி.

"நம்பரில் உள்ள எண்களைக் கூட்டினால் ஒற்றை நம்பராக 1, 3, 5 உள்ளதாக வந்தால் பாஸ். இல்லாவிட்டால் கோளா?"

"என்னுடையது 8700" என்றான் ராமசாமி.

"கொளுத்திவிட்டீர். `கிளாஸ்` தான். அப்பவே சொன்னேனே!" என்றார் நடேசன்

"என் நம்பர் 7743" என்றார் சண்முகம்.

"உமக்குப் பாஸ்தான், சந்தேகமா?"

"மிஸ்டர் நடேசன், உம்ம நம்பர் என்ன?"

"அப்பவே சொன்னேனே கோளா என்று."

"சொல்லுமையா. எங்கே இங்கு கொடும்" என்று ஹால் டிக்கெட்டைப் பிடுங்கிப் பார்த்தார்கள்.

நடேசன் நம்பர் 7744.

மூவரும் ஹோட்டலுக்குள் சென்றார்கள்.


ஒரு வாரம் கழித்து.

பரீட்சை தினம். பட்டம் பெறுவதற்கோ அல்லது திரும்பப் பணங்கட்டி அதிர்ஷ்ட தேவதையை வரிக்க முயலுவதற்கோ ஏற்பட்ட திருநாள். கிண்டிக்கும் சர்வகலாசாலைக்கும் ஒரே விதமான நியாயம், ஒரே விதமான போட்டி ஜயிக்கும்வரை அல்லது பணம் இருக்கும்வரை, வரையாது கொடுக்கும் வள்ளல்களாக இருக்க வேண்டும். அதுவும் தினம் சராசரி வருமானம் 0.1.3வாக இருக்கும் இந்தியப் பெற்றோரின் குழந்தைகள்.

நடேசன் கோஷ்டியார் வாசித்துவந்த கலாசாலையில் காலை எட்டு மணியிலிருந்தே ஆர்ப்பாட்டம். உண்மையில் கலாசாலை மைதானத்திலும் வராந்தாவிலுமே இந்த அமளி, இரைச்சல்.

உள்ளே பரீட்சைப் புலியைப் பத்து மணிக்கு மாணவர்களுக்காகத் திறந்துவிடுவதற்காகவோ என்று எண்ணும்படி, கதவுகள் சிக்கென்று அடைக்கப்பட்டிருந்தன. கலாசாலை வேலைக்காரன் பொன்னுசாமி - வேலைக்காரன் என்றால் பொன்னுசாமிக்குக் கோபம் வந்துவிடும்! `பியூன்` என்று சொல்லவேண்டும் - ரைட்டர் அய்யரைப் பின்பற்றி ஒரு பெரிய காகித மூட்டையை எடுத்துச் செல்லுகிறான். உள்ளே எட்டிப் பார்க்க ஆசைப்பட்டு இரண்டு மூன்று மாணவர்கள் தொடருகிறார்கள். அந்தச் சிதம்பர ரகஸியம் லேசாகக் கிடைத்துவிடுமா? மூக்குத்தான் தட்டையாகிறது.

10 
இன்று தான் மாணவர்கள் வெகு கோலாஹலமாக உடுத்தியிருக்கிறார்கள். அதில் இரண்டு மூன்று முழுத் துரைகளையும் (உடுப்புவரைதான்) காணலாம். ஒவ்வொருவர் கையிலும் கத்தைப் புஸ்தகங்கள். இதில் சிலர், `எப்பொழுதும்போல் இருப்பேன் இன்னும் பராபரமே!" என்பவர் போல் கவலையற்ற உடையுடன் வந்திருக்கிறார்கள். இந்த ரகம் மாணவர்கள்தான் அதிகப் படிப்பு. சிலர் `என்ன வரும்` என்ற தர்க்கம்; `வந்தால் என்ன எழுதுவது` என்ற பிரசங்கம். சிலர் புரொபெஸர்களை வளைத்துக் கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைக்கெடியாரம். ஒரு மாணவன் பிக்-பென் (Big-Ben)னையே தூக்கிக்கொண்டு வந்து விட்டான். ஒவ்வொருவர் வசத்திலும் குறைந்தது இரண்டு பௌண்டன் பேனாக்கள்; சிலரிடம் ஒரு பெரிய ஸ்வான் இங்க் புட்டி. மாணவர்களிலும் சில அபூர்வ பிரகிருதிகள் உண்டு. அவை, டார்வின் கூற்றுக்கு உதாரணமாக, மோட்டுக் கிளைகளில் உட்கார்ந்து புஸ்தகத்தை ஆழமதியுடனே படிப்பதைக் காணலாம்.

நடேசன் கோஷ்டியும் அதோ வருகிறார்கள்.

11 
கலாசாலை மணி.

பரீட்சை ஆரம்பமாகிவிட்டது!

சாயங்காலம் மணி ஐந்து; கலாசாலை மணியும், `போர் முடிந்தது. இன்று போய் நாளை வா!` என்பது போல் தொனித்தது. ஒவ்வொரு ஹாலிலும், "ஸ்டாப் பிளீஸ்" என்று காவலிருந்த புரொபெஸர்கள் கூவினார்கள். அதையும் கவனிக்காமல் மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வார்த்தை அதிகமாக எழுதிவிட்டால் பாஸாகிவிடும் என்ற நம்பிக்கை, ஒரு பையனைப் பண்டிதர் இழுப்பிற்கும் விடாமல் எழுதச் செய்கிறது.

சிலர் தங்கள் நம்பர்களைப் போட மறந்துவிட்டு வெளியேறி விடுவார்கள். ரைட்டர் அய்யர், பொன்னுசமி முதலியோர் அவனைக் கண்டுபிடித்து நம்பரைப் போடச் செய்யுமுன் மூளை கலங்கிவிடும். இப்படி வெளியேறியவர் ஒருவர் இருவர் தாங்களே வந்து போட்டுவிட்டு, கலாசாலைத் தொழிலாளிகளின் வசைமொழி பெற்றுத் திரும்புவார்கள்.

நடேசன் கோஷ்டியும் வெளியே வந்தார்கள். ஆனால் உற்சாகமில்லை. ஒரு வேளை களைப்பாகவும் இருக்கலாம். "எல்லாம் `டவுட் புல்` லாக இருக்கிறது!" என்று பேசிக் கொண்டார்கள். அவர்களுக்குள் ஒரு கேள்விக்கு எப்படி விடை எழுதுவது என்ற தர்க்கம்.

இப்படித்தான் மற்ற நாட்களும்.

பரீட்சை ரிஸல்ட் வந்துவிட்டது. மூவரும் தேறி விட்டார்கள்.

இப்பொழுது செர்விஸ் கமிஷன் பரீட்சை எழுதுவதாகத் தீர்மானம். அதிலும் தேறிவிடுவார்கள்.

(முற்றும்)