நூற்பரப்பு

bookmark

ஒரு பாஷையின் நூற்பரப்பு அதன் முதிர்ச்சிக்கும் அதனைப் பயில்வாரது நாகரிக விருத்திக்குந் தக்கபடி வேறுபடுமென்பது யாவரு முணர்ந்த விஷயம். நூற்செல்வமுடைய பாஷைகளுக்குள்ள கௌரவமுஞ் சிறப்பும் அளவிட்டுரைக்க முடியா. இப்போதுள்ள பாஷைகளுலெல்லாம் மிக்க நூற்செல்வ வாய்ப்புடையது 'ஆங்கில பாஷை'யாம். 'ஜெர்மானியம்', 'பிரெஞ்சு' முதலியன ஆங்கிலத்திற்கு அடுத்தபடியில் நிற்கத் தக்கனவெனக் கூறலாம்.

தமிழ்மொழியை இவ்விஷயத்தில் இவற்றோ டொப்பிட்டுப் பார்ப்போம். தமிழிலுள்ள நூல்களெல்லாம் அறம் பொரு ளின்ப வீடுகளாகிய நான்கு புருஷார்த்தங்களையே கூறுவனவாம். சிறுபான்மையான வைத்திய நூல்களுஞ் சோதிட நூல்களுமாம். மற்றுப் 'பௌமிய நூல்', 'வான நூல்', 'மனிதநூல்', 'விலங்கியனூல்', 'மனிதசமூகநூல்', 'உள நூல்', 'உயிர் நூல்', 'உடனூல்', 'பொருள்வலி நூல்', 'பொருட்டிரிவு நூல்' முதலிய பல சாஸ்திரங்களின் உண்மைகள் தெரிப்பனதமிழின்கட் கிடையா. ஆங்கில பாஷையிற் புதிது புதிதாக வெளிப்படும் விநோத நூல்கள் போன்றன நந் தமிழின்கட் காண்டலரிது. ஆங்கிலத்தில் இக்காலப் பாவலர் பாடல்கள் விசேடமான கௌரவமுடையன. தமிழிலோ இக்காலப் பாவலர் பாடல்கட்கு விசேட மதிப்பில்லை. தமிழ்மொழிக்குள்ள கௌரவ மெல்லாம் பூர்வகாலத்து நூல்களிலேயே யன்றிப் பிற்காலத்து நூல்களிலே யென்னப்படாது.

இனி (I).ஆதிகாலம்: (II) இடைக்காலம்: (1) முற்பகுதி (2)பிற்பகுதி: (III). பிற்காலம் என வெவ்வேறு பாகுபாடு செய்துகொண்டு தமிழ் நூற் பரப்பை ஓராற்றான் ஆராய்வாம்.

(I). ஆதிகாலம்: கி.பி. 100--க்கு முற்பட்டகாலம்
(II). இடைக்காலம் (1) முற்பகுதி: கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ள காலம்.; 
(2) பிற்பகுதி; கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ள காலம்.
(III). பிற்காலம்: கி.பி. 1400 முதல் இற்றை நாள் வரையிலுள்ள காலம்.
 
(I) ஆதிகாலம்; கி.பி. 100--க்கு முற்பட்டகாலம்.

ஆதிகாலமென்பது சரித்திர வாராய்ச்சிக்கு வாராத முற்காலம். முச்சங்கங்களிலே தலைச்சங்கத்தின் காலமும் இடைச் சங்கத்தின் காலமும், கடைச் சங்க காலத்தின் முற்பகுதியும் இவ் வாதிகாலத்தின் கண்ணேயடங்கும். இம்முச் சங்கங்களையும் பற்றி 'இறையனாரகப்பொருளுரை' யின்கட் கூறப்பட்டிருப்பதே மிகப்பழமையான சரிதம். அதன்கண்ணே, "தலைச்சங்க மிகுந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனுமென இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பதொன்பதின்மர் என்பது. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்பது. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ 'பரிபாட'லும், 'முதுநாரை'யும் 'முதுகுருகு'ங் 'களரியாவிரை'யும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்பது. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோளீறாக எண்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங் கேறினார் எழுவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் 'அகத்தியம்' என்ப" எனத் தலைச்சங்கத்தைப்பற்றியும், " இனி இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழி மோசியும் வெள்ளூர்க் காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திறையன் மாறனும் துவரைக்கோமானும் கீரந்தையுமென இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்மதின்மரென்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்தெழு நூற்றுவர் பாடினாரென்ப. அவரகளாற் பாடப்பெற்றன 'கலி'யும் 'குருகு'ம் 'வெண்டாளி'யும் 'வியாழ மாலையகவ' லுமென இத்தொடக்கத்தனவென்ப. அவர்க்கு நூல் 'அகத்திய'மும் 'தொல்காப்பிய'மும் 'மாபுராண'மும் 'இசை நுணுக்க'மும் 'பூதபுராண'முமென இவை. அவர் மூவாயிரத் தெழுநூற்றியாண்டு சங்க மிருந்தாரென்ப. அவரைச்சங்கம் இரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறனீறாக ஐம்பத்தொன்பதினமரென்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது 'கபாட புர'த்தென்பது. அக்காலத்துப் போலும் பாண்டியநாட்டைக் கடல் கொண்டது என இடைச் சங்கத்தைப் பற்றியும் கூறப்பட்டுள.

இக்கூற்றுக்களை யாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து, தலைச்சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய ஐம்பதைம்ப தாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டு மென்பதும், இடைச்சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய அறுபத்துமூன் றறுபத்து மூன்றாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டுமென்பதும் போதருகின்றன. இச் சங்கங்க ளிரண்டும் நீடித்தகாலம் நடந்து வந்திருக்க வேண்டு மென்பதிலும் பல நூல்களியற்றப்பட்டன வென்பதிலும், பாவலர் பலர் சங்கத்தை யொட்டி வாழ்ந்தன ரென்பதிலும், சங்கமிரண்டும் முறையே யிருந்த மதுரையும் கபாடபுரமுங் கடல் கொள்ளப் பட்டனவென்பதிலும், அது காரணமாகப் பல அரிய தமிழ் நூல்கள் அழிந்து பட்டன வென்பதிலும் ஐயப்பாடில்லை யென்னலாம். மற்றுப் பாண்டியரசர்கள் முறையே ஐம்பதாண்டும் அறுபத்து மூன்றாண்டுமாக ஆண்டு வந்தன ரென்றுரைத்தல் ஐயுறற்பாலதே. ஆயினும், பாண்டியர் எண்பத்தொன்பதினமரும் பாண்டியர் ஐம்பத்தொந்பதின்மரும் ஒரே தொடர்ச்சியாக ஆண்டு வந்தன ரென்று கருதாது, நடுவில் இடையீடுபட்டு அரசின்றிக் கழிந்த ஆண்டுகளும் இவ்வாண்டுகளுடன் கூட்டிக் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டுமென்று கருதுக. இவ்வாறு தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டில் இடையீடுபட்டுக் கழிந்தன எத்துணை யாண்டுகளோ? இடைச்சங்கமிருந்த மூவாயிரத் தெழுநூற்றியாண்டில் இடையீடுபட்டுக் கழிந்தன எத்துணையோ? இவற்றுக்கும் ஒருவாறு உத்தேச வகையால் தக்க கணக்கிட்டுக்கொள்ளின் மேற்கூறிய பாண்டியர் எண்பத்தொன்பதின்மரும் பாண்டியர் ஐம்பத்தொன்பதின்மரும் ஆண்ட காலத்தின் அளவு குறைந்து நம்புதற் பாலதாகுமென்க. இத்துணை யுய்த்துணரமாட்டாத சிலர் வேறுபடக் கூறுவர்.

களவியற் பொருள்கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனாரினின்றும் பத்தாந் தலைமுறை யாளராகிய நீலகண்டனார் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார். சிறுமேதாவியரும் சேந்தம் பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங் குன்றூர்க்கிழாரும் இளந்திருமாறனும் மதுரையாசிரியர் நல்லுந்துவனாரும் மருதனிள நாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருமென இத்தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்ம ரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்றும் 'குறுந்தொகை நானூறு'ம் 'நற்றிணை நானூறு'ம் 'ஐங்குறுநூறு'ம் 'பதிற்றுப்பத்து'ம் 'நூற்றைம்பதுகலி'யும் 'எழுபது பரிபாட'லும் 'கூத்து'ம் 'வரி'யும் 'பேரிசை'யும், 'சிற்றிசை'யுமென்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் 'அகத்திய'முந் 'தொல்காப்பிய'முமென்ப. அவர் சங்கமிருந்து தமிழா ராய்ந்தது ** ஆயிரத் தெண்ணூற்றைம்பதிற் றியாண்டென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயனார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதியீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது 'உத்தரமதுரை' யென்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியரென்ப" - என்று கடைச் சங்கத்தைப் பற்றிக் கூறுகின்றனர்.
------
** ஆயிரத்துத் தொள்ளாயிரத் தைம்ப தென்பாரு முளர்.

இக்கூற்றை யாராயு மிடத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மரும் ஆண்டகாலம் இடையீடுபட்டுக் கழிந்த காலத்தொடுங் கூடி ஆயிரத் தெண்ணூற்றைம் பதிற்றியாண்டாகின்றது. பாண்டிய ரொவ்வொருவரும் (இடையீட்டிக் காலத் தொடுங்கூட்டி) முப்பத் தெட்டாண்டுகள் அரசாட்சி செய்தவராகின்றனர். இது நம்புதற் பாற்றே. இனித் தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பது வருஷங்களும் இடைச்சங்கமிருந்த மூவாயிரத் தெழு நூறு வருஷங்களும், கடைச்சங்கமிருந்த ஆயிரத் தெண்ணூற் றைம்பது வருஷங்களுமாகக் கூடி ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு வருஷங்களாகின்றன. இதனைக் கிபி நூற்றிலிருந்து பிற்கணக்கிட்டுச் சென்றால் தலைச்சங்கம் கி.மு. ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு வருஷங்கட்கு முன்னர்த் தாபிக்கப் பட்டிருத்தல் வேண்டும். தமிழ் மொழியின் தொன்மை மாட்சிகூறிவந்தவிடத்துக் கி.மு. 8000 ஆண்டுகட்கு முற்பட்ட எழுத்துச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள வென்றமையால் அதனினும் ஏறக்குறையப் பத்தொன்பது நூற்றாண்டுகள் முன்னரே தலைச் சங்க மேற்பட்டுவிட்ட தென்றன் சாலாதென வாதித்தற்கும் இடமுண்டு. எனினும் காலாந்தரத்தில் ஆராய்ச்சிகளால் இவ்விடர்ப்பாடு களையப்பட்டு உண்மை வெளிப்பட்டு மேற்கூறிய கூற்றுக்கள் வலியுறலும் உறலாம்.

இவ்வாதி காலத்து நூல்களுட் கடல்கொண்டழிந்தனவும் இன்னுங் கண்டுபிடிக்கப் படாதனவும் போக, இப்போழ்தத்துக் கிடைப்பன தலைச் சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட 'அகத்தியம்' என்ற நூலின்கட் சில சூத்திரங்களும், இடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட 'தொல்காப்பியம்' என்ற இலக்கணநூலும் கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட 'எட்டுத் தொகை' என்ற நூற்றொகையுளடங்கிய எட்டு நூல்களும் 'பத்துப்பாட்டும்' 'பதினெண் கீழ்க்கணக்கு'மாம். எட்டுத்தொகை நூல்களைப் பின்வரும் பாட்டாலுணர்க:

"நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் சொல்லுங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த வெட்டுத்தொகை"
இவ்வெட்டுத் தொகையுட் கலித்தொகை ஐங்குறு நூறு புறநானூறு என்ற மூன்று நூல்களும் அச்சாகி வெளிப்போந்தன. இம்மூன்றனுள் முன்னைய இரண்டும் அகப்பொருளும் பின்னைய தொன்று புறப்பொருளுள் கூறுவனவாம். 'பத்துப்பாட்டு' வெளியாகிவிட்டது. இது பெரும்பாலும் அரசர்களைச் சிறப்பித்துக் கூறுவது; இதன்கண் 'திருமுருகாற்றுப்படை' என்ற முதற்பாட்டு மட்டில் முருகக் கடவுளைப் புகழ்வது. பத்துப்பாட்டு நூல்களை யிவ்வெண்பாவா னுணர்க:

"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினி
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து."
மற்றுப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பின்வரும் வெண்பாவா னுணர்க:

"நாலடி நான்மணி நானாற்ப தைந்தைணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் 
இன்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே 
கைந்நிலையொ டாங்கீழ்க் கணக்கு.
இனி இவற்றுளடங்கியதாய்ச் சங்கத்தாராற் செய்யப்படாது, திருவள்ளுவனாராற் செய்யப்பட்டுச் சங்கத்தாரான் அங்கீகரிக்கப்பெற்ற 'திருக்குறள்' என்ற அரிய நூலும் இவ்வாதிகாலத்ததாம். இந்நூல் மக்களுறுதிப் பொருள்களாகிய 'அறம்பொருள் இன்பம் வீடு' என்ற நான்கனுள் முதல்மூன்றையும் பற்றிப் பொதுவகையால் யாவருமொப்ப விரித்துக்கூறும் 1330 குறள் வெண்பாக்களாலாயது. இதனை மேற்கொள்ளாத நூலும் புகழாத மாந்தருமில்லை. திருவள்ளுவனாரது சகோதரியாரெனக் கூறப்படும் ஔவையார் செய்தருளிய 'ஆத்திசூடி; 'கொன்றை வேந்தன்,' 'மூதுரை' என்ற நூல்களெல்லாம் இக்காலத்தனவாம். இனி கடைச்சங்கப் பிற்காலத்தைப்பற்றிப் பேசப் புகுவாம்.
 
II. இடைக்காலம்
(1) முற்பகுதி
இது கடைச்சங்கப் பிற்காலமாம்; கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ளது. இக்காலத்திலே தான் ஐம்பெருங் காப்பியங்களு மெழுந்தன. அவைதாம் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டல கேசி என்பனவாம். இவற்றுட் சிலப்பதிகார மணிமேகலைகள் சிந்தாமணிக்கு முன்னரே யாக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வைந்தனுள் முதல் மூன்றும் அச்சேறிவிட்டன. 'நீலகேசி, சூளாமணி, யசோதாகாவியம், நாககுநமார காவியம், உதயணன் கதை' என்ற ஐந்து சிறு காப்பியங்களும் இக்காலத்தனவாம்.

இவற்றுட் 'சூளாமணி' ஒன்றே வெளிவந்துளது. இப்பதின் காப்பியங்களும் நவரசங்களோடு கூடிய கற்பனாலங்காரங்களும் அரியபெரிய நீதிகளும் இனிது காட்டி விளங்குவனவாம். பேரின்பக்கடலுள் திளைந்து விளையாடிய மணிவாசகப் பெருமான் வாய் மலர்ந்தருளிய 'திருவாசகம்' என்ற உயரிய நூலும் இக் காலத்தததே. இது பத்திச் சுவை யொழுகசி சிவபெருமானைப்பாடியதோரரிய நூலாம். இவர் செய்தருளிய திருச்சிற்றம்பலக்கோவையார் என்னும் திவ்யப் பிரபந்தம் அகப் பொருட்டுறைகளா லமைந்ததெனப் புறத்தே தோன்றினும், அது சிற்றின்பக் கருத்தும் பேரின்பப்பொருளும் ஒருங்கே பயப்பதாம்.

"அரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்
காரணங் காணென்பர் காமுகர் காமநன்னூல தென்பர்
ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுந்தென்ப ரின்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே."
'மேருமந்தர புராணம்' என்ற சைன நூலும் இக்காலத்ததே. 'திவாகரம்,' 'பிங்கலம்', என்ற நிகண்டுகளும் அணியியல் என்ற அலங்காரநூலும் இக்காலத்திற் செய்யப்பட்டனவே. சேரசோழ பாண்டியர் மூவரையுந் தனித்தனி தொள்ளாயிரம் பாடல்களாற் சிறப்பித்துக்கூறும் 'முத்தொள்ளாயிரம்' என்ற நூலும் இக்காலத்திலே தான் யாக்கப்பட்டிருத்தல்வேண்டும். இதிற் சிற்சில பகுதிகள் காணப்படுகின்ற அத்துணையல்லது நூல் முழுதுங் காணப்பட வில்லை. ஆழ்வார்களுட் சிலர் இக்காலத்திருந்திருக்கலாம். ஆகவே யன்னாரது பிரபந்தங்களுட் சில இக்காலத்தன வாகலாம். இதுகாறுங் கடைச்சங்கப் பிற்காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இனி இடைக்காலத்தின் பிற்பகுதியைப்பற்றிப் பேசலாம்.

2ம் பிற்பகுதி இது கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ளது. இவ்விடைக் காலத்திலேதான் சமய சாஸ்திர நூல்களெழுந்தன. சைனர் பௌத்தர் முதலாயினார் மிக்கிருந்தமைபற்றியும் சாமானிய ஜனங்கள் அன்னார் வயப்படுகின்றமை பற்றியும் சைவ சமயத்திலும் வைணவ சமயத்திலும் முறையே நாயன்மார்களும் ஆழ்வார்களுந் தோன்றித் தத்தம் சமயஸ்தாபனஞ் செய்தனர். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் இவ்விருவரும் ஒரே காலத்தினர். சுந்தரமூர்த்திநாயனார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினிறுதியிலிருந்தவர். இம்மூவரும் பாடிய 'தேவாரப்பதிகங்கள்' கணக்கில. இத்தேவாரப் பதிகங்களெல்லாம் இசைத்தமி ழிலக்கியங்களாமாறு காண்க. வேத சாரத்தைத் தொகுத்து தேவாரக்கலத்திலே பெய்துவைத் திருக்கின்றனர் மூவருமென்பதே ஆன்றோர் துணிபு. இனி வைணவ சமயகுரவர்களான ஆழ்வார்களுட் பலர் அருமையான திவ்யப் பிரபந்தங்கள் யாத்தனர். சைவர்கள் தமது சமயநூல்களைப் பன்னிரண்டு திருமுறைகளாக வகுத்தனர்.. வைணவர்கள் தம்முடைய சமயநூலகளை நாலாயிரப் பிரபந்தம் எனத் தொகுத்தனர்.

ஏறக்குறையக் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் எழுந்து விளங்குவதாயிற்று ஓர் அரிய நூல். அது 'கல்லாடம்' என்பது. இஃது அகப்பொருட் டுறைகளுள் நூற்றினை யெடுத்து விளக்கிக்கூறிச் செல்லுமுகத்தான் அநேக அரிய விஷயங்களையு முடன் கூறாநின்றது. உயர்வுங் கம்பீரமும் வாய்ந்த நடையும் படைத்துரையாற்றலும் நவின்றோர்க கினிமையுங் காட்டி யொளிர்வது. 'நன்னூல்', 'நேமிநாதம்,' நாற்கவிராஜ நம்பியியற்றிய 'அகப்பொருள் விளக்கம்', ஐயனாரிதனார் இயற்றிய 'புறப்பொருள் வெண்பாமாலை', ,யாப்பருங்கல விருத்தி', 'யாப்பருங்கலக் காரிகை' என்ற நூல்களெல்லாம் தோன்றியதிக் காலமேயாம்.

இதன்மேற் கி.பி. பதினோராம் நூற்றாண்டிலிருந்த குலோத்துங்கச்சோழன வைக்களத்தை யலங்கரிதத்தார் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் முதலாயினார். முன் சங்கத்தார் காலத்திலே ஓர் ஔவையார் இருந்தன ரென்பதன்றி இக்குலோத்துங்கன் காலத்தும் ஓர் ஔவையார் இருந்தனரென்ப.இருவர் ஔவையாரெனக் கொள்ளலே யேற்புடைத்தாம். கம்பர் வடமொழியினின்றும் இராமகதையைக் கற்றுணர்ந்து தமது சுதந்திர யூகமுங் கற்பனா சக்தியுங்காட்டி விசேஷக்கருத்து நலம் வாய்ப்ப, பத்தழகும் பாங்குடனமைய ஒன்பான் சுவையு மொருங்கே யொழுகப் பதினாயிரஞ் செய்யுட்களில் 'இராமாயணம்' செய்துமுடித்தனர். அஃது அவர் பெயரொடுங் கூட்டிக் 'கம்ப ராமாயணம்' என்று இன்றும் வழங்குகின்றது. அஃது என்றும் வழங்கும் என்பதில் ஐயுறவில்லை. கம்பர் இராமாயணத்தைத் தவிர்த்துச் சில சிறு நூல்களுஞ் செய்துளர். அவை இராமாயணம்போல அத்துணை மதிக்கப்படுவன வல்ல. ஒட்டக்கூத்தர் இராமாயணத்தின் பிற்பகுதியாகிய 'உத்தரகாண்ட'த்தை இரண்டாயிரஞ் செய்யுட்களில் யாத்து முடித்துக் கம்ப ராமாயணத்தைப் பூர்த்தி செய்தனர். தம்மையாதரித்த குலோத்துங்கச் சோழன்மீது அகப்பொருட்டுறைகளா லமைந்த 'கோவை'யொன்றும் 'உலா'வும் 'அந்தாதி'யுஞ் செய்தனர்.இவர் செய்த 'குலோத்துங்கச்சோழன் கோவை' யென்பது சொன்னயமும் பொருணயமுங் கனிந்து கற்பனைக் களஞ்சியமா யொளிர்கின்றது. புகழேந்திப்புலவர் புகழெல்லாம் 'நளவெண்பா' என்ற இனிய சிறிய நூல் காரணமாகவேயாம். இந்நூல் 425 வெண்பாக்களிற் காப்பியச் சிறப்புகளமையச் சொற் பொருணயங்கள் செறியச் செய்யப் பட்டுள்ளது. இதன் நடை மிகத்தெளிவானது. ஔவையார் 'நல்வழி,' 'நீதிவெண்பா' என்ற நீதி நூல்களியற்றினர். பன்னிரண்டாம் நூற்றாண்டிற் செயங் கொண்டானாற் 'கலிங்கத்துப்பரணி' இயற்றப்பட்டது. இக்காலத்திலேயே, ;'கந்தபுராணம்,' 'பெரிய புராணம்' என்ற அருமையான சைவ நூல்களேற் பட்டன. ' வீரசோழியம்' என்ற இலக்கண நூல் வெளிப்பட்டதும் இக்காலமாம். பின்னர்த் 'திருவெண்காட்டடிகள்' என்னப்படும் பட்டினத்துப் பிள்ளையாரது பாடல்கள் வெளிவந்தன. தண்டியாசிரியர் இயற்றிய 'அலங்கார'மும் இக்காலத்திலே உண்டாயிற்றென்க. உரையாசிரியர்களாகிய சேனாவரையர், பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் இவர்கள் விளங்கிய காலமும் இதுவேயென ஊகித்தற்கிடனுண்டு.

முற்காலத்துச் சங்க நூல்களெல்லாம் இயற்கை வனப்பையும் புனைந்து கூறிச் சென்றனவாக, இடைக்காலத்து முற்பகுதி நூல்கள் சமயச் சார்பாகவும் பிற்பகுதி நூல்கள் மனோபாவத்தினாற் கற்பித்தும் சுதந்திர யூகத்தினாற் புதுவது புனைந்தும், உயர்வு நவிற்சியாதிய அணிகள் மேவியுஞ் செல்வனவாமாறு காண்க.
3. பிற்காலம்: கி.பி. 1400--க்கும் பிற்பட்ட காலம்.

ஆதிகாலத்துச் சங்கத்தார் ஆதரவும் இடைக்காலத்துச் சிற்றரசர் ஆதரவு மிகுந்தன. அவ்விருவகை ஆதரவு மற்ற இப்பிற்காலத்தில் குறுநிலமன்னர் சிலரும் திருவா வடுதுறை முதலிய ஆதீனத்தார் சிலரும் தமிழையுந் தமிழ்ப் புலவரையும் போற்றிப் பாதுகாப்பாராயினர். அதிவீரராமபாண்டியரும் வரதுங்கராம பாண்டியரும் இருந்து பலவகைத் தமிழ்நூல்கள் செய்தனர். 'நைடதம்,' 'கூர்மபுராணம்,' 'காசிகாண்டம்' முதலிய அரிய நூல்களை யியற்றினர்; வரதுங்கராம பாண்டியர் 'இலிங்க புராணம்' 'திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி' முதலிய நூல்களியற்றினர். இவ்விருவருக்கும் ஆசிரியராகிய நிரம்பவழகிய தேசிகர் 'சேதுபுராணம்' 'திருப்பரங்கிரிப் புராணம்', என்ற நூல்கள் யாத்தனர். இதற்கிடையில் வில்லிபுத்தூரர் வடமொழியினின்றும் 'பாரத'த்தை மொழிபெயர்த்தனர். [ சங்கப் புலவரு ளொருவராகிய பெருந்தேவனார் செய்த பாரதம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் அறை குறையாய் அகப்படுகின்றதெயன்றி முற்றுங்காணப்படவில்லை.] 'வில்லிபுத்தூரர் பாரதம்' பத்துப்பருவத்துடன் நின்று விட்டதெனினும், இனியவாக்கும் நல்ல சந்தமும் பயின்று சொல்லுதலாற் பலராலும் பாராட்டப் படுவதாயிற்று. வில்லி புத்தூரரது கர்வ பங்கத்திற்குக் காரணரா யிருந்தவரெனக் கூறப்படும் அருணகிரி நாதர் 'திருப்புகழ்' என்ற பெயரில் முருகபிரான்மீது அளவிறந்த பாசுரங்கள் பாடித் தமிழ்நாடெங்கணும் முழங்குமாறு செய்தனர். திருப்புகழ்ப் பாசுரங்களனைத்தும் சந்த நலங்கொழித்துக் கேட்போருள்ளங்களைத் தம் வயப்படுத்தி இன்பச்சுவையும் பத்திரசமுந் துளிப்பச் சொல்லா நின்றன. [இத்திருப்புகழின் முதலிரண்டு பாகங்கள் வ.த. சுப்பிரமணிய பிள்ளையவர்களது முயற்சியால் வெளிப்போந்துள.] அருணகிரிநாதர் 'கந்தரந்தாதி' பாடி வில்லிபுத்தூரரைக் கர்வபங்கப் படுத்தின ரென்ப. வில்லிபுத்தூரர் மகனார் வரந்தருவாரும், அட்டாவதானி -அரங்கநாத கவிராயரென்பாருந் தனித்தனி 'வில்லி பாரத'த்தைப் பூர்த்திசெய்தனர். இவற்றுட் பின்னது வெளிப்பட்டுள்ளது.பின்னர் நல்லாப்பிள்ளை யென்பார் தோன்றி வில்லிபுத்தூரர் பாடல்களை இடையிடையே செறித்து, அவர் சுருக்கிக்கூறிய கதைகளைத் தாம் விரித்தும் அவர் விட்டுவிட்ட கதைகளைக் கூட்டியும் ஒரு பாரதம் 14,000 செய்யுட்களிற் பாடிமுடித்தனர். 'நல்லாப்பிள்ளை பாரதம்' அச்சாகியும் விசேஷமாய்ப் பயில வழங்கவில்லை. மதுரைத் 'திருவிளையாடற் புராண'த்தைக் கல்வி நலம் விளங்கப் பத்திச்சுவை யொழுகப் பரஞ்சோதி முனிவர் பாடினர்.

இதற்கிடையில் திருவாவடுதுறை யாதீனத்தாரால் தமிழ் மொழியடைந்த அபிவிருத்திக்கோ அளவில்லை. 'கல்விக்களஞ்சியம்' திருவாவடுதுறை யென்று கூறுவது எவ்வாற்றாலும் ஏற்புடைத்தேயாம். அருணந்தி சிவாசாரியார், உமாபதி சிவாச்சாரியார் முதலாயினாராற் 'சைவசித்தாந்த சாஸ்திரங்கள்' முன்னரே வெளிப்பட்டன. இம்மடத்தைச் சார்ந்த மயிலேறும் பெருமாள்பிள்ளை 'கல்லாடவுரையும் ஈசானதேசிகர் 'இலக்கணக் கொத்துரை'யும் சங்கர நமச்சி வாயப்புலவர் 'நன்னூல் விருத்தியுரை'யும் சிவஞான முனிவர் 'சித்தாந்த மரபு கண்டன கண்டனம்', 'தொல்காப்பியச் சூத்திரவிருத்தி', 'இலக்கண விளக்கச் சூறாவளி' என்ற நூல்களுஞ் செய்தனர். தருமபுர வாதீனத்தைச் சார்ந்த வைத்தியநாத தேசிகர் 'குட்டித்தொல்காப்பியம்' எனப்படும் 'இலக்கண விளக்கம்' இயற்றினர். இவருதவிகொண்டு மாதைத்--திருவேங்கட மன்னன் வடமொழியிற் 'கிருஷ்ணமிசிரன்' செய்த 'பிரபோத சந்திரோதயம்' என்ற நாடகத்தைக் காப்பிய ரூபமாயமைத்தனன். இது நகைச்சுவை பெரிதும் நண்ணியதோர் விநோதமான நூல்; மிகவுந் தெளிவான செய்யுணடையில் இயற்றப் பட்டுளது.இது நிற்க.

சிவஞான முனிவர் பல அருமையான செய்யுணூல்கள் செய்தும், தருக்கநூல் இயற்றியும் சித்தாந்த சாஸ்திரங்களுக்கு உரைவகுத்தும் இலக்கணநூல் புனைந்தும் கண்டனங்கள் வெளியிட்டும் மாணாக்கர் பலர்க்குத் தமிழறிவுறுத்தியும் விளங்கிய மகாவித்துவச் சிகாமணி. இவர்புகழ் பரவாத மூலை யில்லை; வடமொழியும் ஒருங்குணர்ந்தவர். இக்காலத்து 'வரலாற்று முறையிற் கற்ற வித்துவான்கள்' என்போரது வரலாற்றை ஆராய்ந்தால் இவரிடத்தே வந்து முடியும். இவர் மாணாக்கருட் சிறந்த கச்சியப்ப முனிவர் 'தணிகைப் புராணம்' 'விநாயகபுராணம்' முதலிய நூல்கள் பாடித் திருத்தணிகைக்--கந்தப்பையர்க்குத் தமிழறி வுறுத்தினர். இலக்கணம்- சோமசுந்தரக் கவிராயர். இராமநாதபுரஞ் சென்று ஆண்டுத் தமிழ்க் கல்வியைப் பரப்பினர். 'திருக்கழுக்குன்றக் கோவை' செய்தார் இவரே

இராமநாதபுரத்திற் சேதுகாவலர்கள் இன்றளவுந் தமிழ்மொழியை வளர்ப்பா-ராயினர். அமிர்த கவிராயர் என்பார் இரகுநாத சேதுபதியின்மீது 'ஒருதுறைக்கோவை' பாடினர்.

சிவப்பிரகாச சுவாமிகள் 'கற்பனைக்கு ஊற்று' எனக் கருதப்படும் 'பிரபுலிங்க லீலை'யும் 'வெங்கைக்கோவை'யும் 'நன்னெறி' முதலிய பலநூல்களும் செய்தனர். தருமபுரவாதீனத்தைச் சார்ந்த குமரகுருபர சுவாமிகள் 'மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ்', 'நீதிநெறிவிளக்கம்' முதலிய பலநூல்கள் சொற்பொருணலங்கனிய இயற்றினர். பத்திச்சுவை மிகுந்து யாவருள்ளத்தையுங் கவர வல்ல தத்துவராயரது 'அடங்கன் முறை'யும் 'பாடுதுறை'யும் தாயுமானார் செய்த 'திருப்பாடல்க'ளும் மிகவுங் கவனிக்கவேண்டியனவாம். ஏறக்குறையத் தாயுமானார் காலத்திலேயே வீரமாமுனிவர் என்பவர் 'தொன்னூல் விளக்கம்' என்னும் இலக்கணமும் 'தேம்பாவணி'யென்னுங் காவியமும் செய்தனர்.

இனி வைணவருள் திவ்யகவி என்றழைக்கப்படும் பிள்ளைப் பெருமாளையங்கார் தோன்றிச் சொல்லின்பமும் ஒருங்கேயமைய 'அட்டப்பிரபந்தம்' என எட்டு நூல்கள் செய்தனர்.

சைவ-எல்லப்ப நாவலர் 'திருவாரூர்க் கோவை', 'அருணாசல புராணம்', 'அருணைக் கலம்பகம்' முதலிய சில நூல்களியற்றினர். மேலகரம்-திரிகூட ராசப்பக் கவிராயர் 'திருக்குற்றாலத் தலபுராணம்' முதலிய பல நூல்கள் செய்தனர்.

இனிப்பலர் அந்தாதிகளும் கலம்பகங்களும் பிள்ளைத் தமிழ்களும் சிலேடை வெண்பாக்களும் மாலைகளும் பதிகங்களும் ஆகப் பலப்பல நூல்கள் தாந்தாங் கண்டவாறு புனைந்து விட்டனர்.

அதன்மேல் திருவாவடுதுறை யாதீனத்தைச் சார்ந்த திரிசிரபுரம்-மகா வித்துவான் -மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தோன்றிக் கணக்கற்ற நூல்கள் யாத்தும் பல்லோர்க்குத் தமிழ் நூல்கள்பல பாடஞ்சொல்லியும் தனிப்பாடல்கள் பல பாடியும் விளங்கினர். இவர் செய்தநூல்களுள் 'திருநாகைக் காரோணப் புராணம்' பெரிதும் பயிலுகின்றது.

தமிழ்மொழியின் செய்யுணடை நூல்கள் இவ்வாறாக வசனநடை நூல்களின் தோற்றத்தையும் சிறிது குறிப்பாம். தமிழில் வசனநடையானது உரையாசிரியர்களாலேயே நூலுரைகளிற் பயிலப்பட்டுவந்தது. வசனநடையை 'உரைநடை' யென்றலும் வழக்காறாதலின் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய 'பெருந்தேவனார்பாரதம்', 'சிலப்பதிகாரம்' என்ற நூல்களிலே உரைநடை காணப்படுகிறது. வடமொழியிற் கத்திய காவியங்களிருத்தல் போலத் தமிழ்மொழியின்கண்ணே வசனகாவியங்கள் காண்டலரிதாம். 'ஸ்ரீபுராணம்', 'கத்தியசிந்தாமணி' முதலிய ணசைனநூல்களுட் சில வசனநடையினவாம். இவ்வாறு சைனர்களால் வசனநடையில் இரண்டொரு நூல் செய்யப்பட்டனவேயன்றி மற்றையோர்களால் அது பெரிதும் பயிலப் படாமைக்குக் காரணமென்னோ? நன்குபுலப்படவில்லை. இனிச்சிலர் இவ்வுரை நடையையும் ஒருவகைச் செய்யுளெனக் கருதிச் சூத்திரஞ் செய்தனர்.

"பாட்டிடை வைத்த குறிப்பினானும்
பாவின்றெழுந்த கிளவி யானும்
பொருளொடுபுணராப் பொய்மொழி யானும்
பொருளொடுபுணர்ந்த நகைமொழி யானுமென்
றுரைவகை நடையே நான்கென மொழிப."
என்றார் இலக்கணவிளக்கப் பாட்டியலுடையார். இனி அச் சூத்திரவுரையில் "ஒருபாட்டின் இடையிடைகொண்டு நிற்கும் கருத்தான் வருவன உரையெனப்படும்; என்னை? பாட்டுறுவது சிறுபான்மையாகலின், அவை தகடூர் யாத்திரை' போல்வன. மற்றுப் பிறபாடை விரவிவருவனவோ வெனின், அவற்றுள்ளுந் தமிழுரையாயின ஈண்டு அடங்கும். பிறபாடைக்கு ஈண்டு ஆராய்ச்சியின்று. பாவின்றெழுந்த கிளவி பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருளெழுதுவன போல்வன. சூத்திரம் பாட்டெனப் படாவோ வெனின்? படா; பாட்டும் உரையும் நூலுமென வேறோதினமையின். இதனாற்போந்தது சொற்சீரடியான் இற்ற சூத்திரம் உரைச்செய்யு ளென்பதாம். பொருளொடு புணராப் பொய்ம்மொழி பொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லுவன. பொருளொடு புணர்ந்த நகைமொழி பொய்யெனப்படாது மெய்யொடுபட்டு நகுதற்கு ஏதுவாகுந் தொடர்நிலை. இந்நான்கும் உரைச்செய்யுளென்று கூறுவர் புலவர்" என்றார் தியாகராச தேசிகர். இவ்வாறு வசனநடையும் ஒருவகைச் செய்யுணடையாகப் பாவிக்கப்பட்டு வந்தால் அதற்குரிய தனித்தியங்கும் நிலைமையும் அற்றுக், கட்டுப்பாடுடையதாகின்றது. இது மிகவும் பரிதபிக்கத் தக்கதோர் விஷயம். இடைக்காலத்தில் உரையாசிரியர்-களானன்றி ஏனையோரால் இவ்வசனநடை பெரிதும் பயிலப்படா தொழிந்திருந்தது. பிற்காலத்துப்போந்த வீரமா முனிவர் வேதியரொழுக்கம்', 'அவிவேக பூரண குருகதை' என்ற வசனநூல்கள் இயற்றினர். இதற்கிடையில் திருவாவடுதுறை யாதீனத்தாராற் பல கணடன நூல்கள் வசன நடையிலியற்றப்பட்டு வெளிப்போந்தன. கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் தொடக்க முதல் தமிழில் வசனநடை விசேடமாய் வழங்கப்படுவதாயிற்று. அதன்மேல் இக்காலத்தில் திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் முதலிய வித்துவான்கள் இவ்வசன நடையைப் பெரிதும் போற்றி அதன்கட் பலநூல்கள் இயற்றி வெளியிடுவாராயினர். இப்பொழுது அச்சியந்திரத்தின் உதவியால் நாடோறும் பலவசன பத்திரிகைகளும் வாரந்தோறும் சிலநூல்களும் வெளியாகின்றன. இவ்வாறு வெளியாகும்

வசனநடை நூல்களிற் பெரும்பாலன சாமானியஜன விருப்பத்திற்கு ஏற்றவைகள். சிற்சில நூல்களே பண்டிதர்கள் பாராட்டத்தகுவன. எனினும் பாஷையின் கண்ணே நூல்கள் பல வெளிப்பட்டக்கால் அவை தாந்தாம் பதிப்பிக்கப்படுந்தோறுந் திருத்தமுற்றுப் பிறர்க்கு நலம்பயக்கும் ஆதலின் எவையும் கடியப்படுவன வல்ல. சாமானிய ஜனங்களைத் திருத்துவதற்குச் செய்யுள் நூல்களிலும் வசன நூல்களே மிகவும் உபகாரமுடையனவா யிருத்தலின் வசன நூல்களை அறிவுடையோர் சிலர் விசேடமாக மதிக்கின்றனர்.

நூற்பரப்பு முற்றிற்று