நெருப்புத் தணலாகுதடா!

bookmark

பிரிந்திருக்கும் காதலி காதலனைச் சேரும் காலத்தை எண்ணி ஏங்குகிறாள். இப்பாடலில் அடுக்கடுக்காக உவமைகள் வருகின்றன;இவையாவும் உழவர் வாழ்க்கையிலிருந்து எடுத்தாளப்பட்டவை.

மதுரை மரிக் கொழுந்தே
மணலூறு தாழம் பூவே
சிவ கெங்கைப் பன்னீரே
சேருறது எந்தக் காலம்
கட்டிலுச் சட்டம் போல
கடைஞ் செடுத்த விட்டம் போல
உத்திரத்துத் துணு போல
முத்து இருந்து வாடுறனே!
ஆசை மனம் கூசுதையா 
அம்புருவிப் பாயுதையா!
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்புத் தணலாகுதடா
ஏக்கம் பிடிக்குதையா!
என்னுசுரு போகுதையா!
தூக்கம் குறைஞ்சதையா
துரைமகனைக் காணாமல்
நிறை குடத்துத் தண்ணிபோல
நிழலாடும் என் சதுரம்
குறை குடத்துத் தண்ணீராய்
குறைஞ்சதய்யா உன்னாலே

குறிப்பு: முத்து இருந்து -தன் பெயரையே குறிப்பிடுறாள்.
சேகரித்தவர்: S.S. போத்தையா 
இடம்: நெல்லை மாவட்டம்.
---------------