படிப்பவர்களுக்குச் சில செய்திகள்

bookmark

கதைக்குள்ளே கதை சொல்கிற பான்மையில் அமைந்தவை இந்த நவதந்திரக் கதைகள். பஞ்ச தந்திரக் கதைகளைப் போன்ற கதைப் போக்குக் கொண்டது என்றும் கொள்ளலாம்.

தொடராக முதன் முதலாகச் சுதேச மித்திரன் பத்திரிகையில் 10-8-1916ஆம் தேதியிட்ட இதழில் பிரசுரமாகத் தொடங்கியது. இடைக்கிடையே சில சமயங்களில் கதைத் தொடர் பிரசுரமாகாமல் இருந்ததும் உண்டு. கதைத் தொடர் நிறைவு பெறவில்லை; 
26-2-1918ஆம் தேதிய இதழோடு நின்று விடுகின்றது.

இந்தக் கதைகள் 1928 ஆம் வருஷம் பாரதி பிரசுராலயத்தாரால் நூலாக்கம் செய்யப்பட்டன,

பற்பல பதிப்பாளர்கள் இந்தக் கதை நூலைப் பிரசுரம் செய்திருந்த நிலையில், 1989 ஆம் ஆண்டு சென்னை பாலாஜி புத்தகக் கம்பெனியாரும் பாரதி பிரசுராலயம் பதிப்பித்திருந்த நூலை ஆதாரமாகக் கொண்டு மறு பிரசுரம் செய்திருந்தனர்.

மறு பதிப்பின் பிரதி "தினமணி” பத்திரிகைக்கு விமர்சனத்திற்காக அனுப்பப்பட்டிருந்தது.

நூலைப் பற்றிய மதிப்புரையைத் `தினமணி` அலுவலகம் மூத்த எழுத்தாளர் - விமர்சகர் - க. நா. சு. என்று தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மதிப்புடன் அழைக்கப்பெற்ற திரு. க. நா. சுப்பிரமணியம் அவர்களிடமிருந்து பெற்றுப் பிரசுரம் செய்திருந்தது.

ஆனால், மதிப்புரை வெளியான சமயம் க.நா.சு. அவர்கள் உயிரோடு இல்லை . அதனால், "க.நா.சு. வின் கடைசி விமர்சனம்” என்று தலைப்பிட்டு நூலுக்கான மதிப்புரையை 9-9-1989இல் வெளியீடு செய்திருந்தது.

நூலைப் பற்றிப் பொருத்தம் கருதி கநாசு. அவர்களின் மதிப்புரை இங்கே பதிப்பிக்கப்படுகிறது.