பரசுராமப் படலம் - 1390

bookmark

தயரதனது பெருமகிழ்ச்சி

தசரதன் களிப்புக் கடலுள் ஆழ்தல்
 
1390.    

வெளிப்படும் உணர்வினன். விழுமம் நீங்கியே.
தளிர்ப்பு உறு மத கரித் தானையான். இடை
குளிப்ப அருந் துயர்க் கடற் கோடு கண்டவன்.
களிப்பு எனும் கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன்.
 
வெளிப்படும்    உணர்வினன் - (முன்பு துயரால் அழிந்து போன)
புலன்  உணர்வுகள்  யாவும் வெளிப்பட்டவன் ஆகி; விழுமம் நீங்கி -
துன்பங்கள்  நீங்கி;  தளிர்ப்பு  உற  - மனந் தழைக்கின்ற; மத கரித்
தானையான்  -  மதம்  மிக்க யானைச் சேனையான் ஆகிய  தசரதன்;
இடை குளிப்பு அரும் - இடையிலே மூழ்குவதற்கு அரியதான; துயர்க்
கடல்  கோடு  கண்டவன் - துன்பமாகிற பெருங்கடலின் எல்லையைக்
கண்டுணர்ந்தவன்;  களிப்பு எனும் - (பின்பு) களிப்பு என்கின்ற;  கரை
இலாக்  கடலுள்   ஆழ்ந்தனன்  -   கரை   காணாத  கடலிடையே
மூழ்கினான்.

“வெளிப்படும்     உணர்வினன்”  என்பதற்கு  துயரத்தால்  உடலை
விட்டுப்   புறப்பட்டுக்    கொண்டிருந்த   உயிரின்   உணர்வுடையவன்
எனினுமாம்.  பரசுராமனால்.  தன்  அருமை  இராமனுக்கு  நேருவதைக்
காணச் சகியாது துன்பக் கடலுள் மூழ்கி  மறைந்தன்.  தன்  மகன் பெற்ற
வெற்றியைக்  காண இராமன் கரையேற்ற சென்ற பாடலில்  கரை  ஏறிய
தசரதன்.  இப்பாடலுள்.  மீண்டும் மூழ்கினான்  எனும்  நயம்  தோன்றக்
கூறினார்.   அந்தத்  துயரக்  கடல்.   இராமனால்   மீட்கப்  பட்டதால்
கரையுளது  ஆயிற்று; இந்த  இன்பக் கடல்  இராமனாலும்   கரையேற்ற
இயலாதது என்பார். “கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன்” என்றார்.   42