பருத்திக் காடு

பருத்தி பிடுங்கப் போகிறாள் மீனாள். அவளோடு பல பெண்கள் செல்லுகிறார்கள். பருத்திக் காட்டில் சொக்கன் அருகிலிருந்தாலும் அவளால் அவனோடு பேச முடியவில்லை. ஒரு நாள் அவளுடைய தோழிகள் வெகு தூரத்திற்குச் சென்றுவிட்டார்கள். அவள் தனியே இருக்கிறாள். இன்று பார்த்துச் சொக்கன் வரவில்லை. ஏமாற்றமடைகிறாள்.
கூலியை வீட்டில் கொடுத்துவிட்டு, சிறிதளவு சில்லறையை பெண்கள் சேமித்து வைத்துக் கொள்ளுவார்கள். அவளிடமும் கொஞ்சம் ரொக்கம் இருந்தது. தனக்கு ஏதாவது வாங்கிக் கொள்ளலாமென்றுதான் அவள் அதை வைத்திருந்தாள். ஆனால் அவள் காதலன் வெயிலில் மிதியடியில்லாமல்தான் தன்னைக் காண வரவில்லையென்று எண்ணி அவள் தனது சேமிப்பில் அவனுக்குச் செருப்பு வாங்க எண்ணுகிறாள்.
அவளுக்கு மணமானால் சிறிதளவு பணம் வேண்டும். கூலிக்குப்போய் தேவையான அளவு பணம் சம்பாதிக்க முடியாது. அவளுக்கென்று தகப்பன் விட்ட குறுக்கம், ஐந்தாறு பருத்திச் செடி வளரவே காணும். தன் புஞ்சையிலும் உழைக்கவேண்டும். உடுக்க உடையும், குடிக்கக் கூழும், கணவன் கையை எதிர்பாராமல் பெற்றுகொள்ள வேண்டும் என்று மீனாள் எண்ணுகிறாள்.
பருத்திக் காட்டுப்பொழி வழியே
பாசி வச்சுப் போற மச்சான்-நான்
ஒருத்தி எடுக்கிறது
உங்களுக்குப் புரியலயே
பருத்திப் புன்செய்ப் பொழி நெடுக
பாதை வழி போற மன்னா
சித்திரக்கால் நொந்திராம
செருப்பு வாங்கி நான் தாரேன்
சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
----------
அஞ்சாறு பருத்திச் செடி
அவரு விட்ட ஒரு குறுக்கம்
செல்லச்சாமி விட்ட புஞ்செய்
மாசிப் பருத்தியடி
மலையோரம் செம்பருத்தி
ராசிப் பொருத்தமில்லை
ராமருட வாசலிலே
பருத்தி எடுக்கவேணும்
பச்சைச் சீலை எடுக்கவேணும்
ரயில்வண்டி ஏறவேணும்
ராமேஸ்வரம் போகவேணும்
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: கோவில்பட்டி, நெல்லை.
-----------