பலனும் நானறியேன்

"பலனறியாமல் பழி மட்டும் சுமந்தேன். உன் மேல் ஆசை வைத்ததுண்டு. ஆனால், ஊரார் பேசுவதுபோல் ஒன்றும் நடக்கவில்லையே! பூவைப் பார்த்து பறிக்க எண்ணியதுண்டு. ஆனால் பூவை பறித்து முகரவில்லையே! பூவைப் பறித்துச் சூடிக் கொண்டதாக ஊரார் பழி சொல்லுகிறார்களே" என்று இப்பெண் வருந்துகிறாள்.
நந்தவனம் துறக்க வில்லை
நானொரு நாள் போகவில்லை
பூவாத முல்லைப் பூவை
பூத்ததென்று சொல்லவில்லை
வட்ட ஓடையைக் கண்டேன்
வடக்கே போற கொப்பைக் கண்டேன்.
மோதிரக்கையைக் கண்டேன்
முகத்தழகை நானும் காணேன்.
நந்தவனம் துறந்து
நானொரு நாள் பூவெடுத்து
சூடல்லியே அந்தப்பூவை
சும்மாவில்ல சொல்லுறாக
தலையிலே தண்ணிக் குடம்
தாகமெல்லாம் உங்கமேலே
ஊரெல்லாம் ஓமலிப்பு
ஒரு பலனும் நானறியேன்
ஒரு மேனி ஒரு சிகப்பு,
ஊரெல்லாம் ஓமலிப்பு,
ஓமலிப்புக் கேட்டதுண்டு;
ஒருபலனும் நானறியேன்.
வட்டார வழக்கு: ஒமலிப்பு- பரபரப்பு.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: நெல்லை.மாவட்டம்
-------------