பல்லவர் காலத்தில் சைவ சமயம் (கி.பி. 300-900)

முன்னுரை
சங்க காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஏறத் தாழ அறுநூறு வருட காலம் (கி.பி. 300-900) வரைப் பல்லவர் என்ற புதிய மரபினர் பேரரசு செலுத்தி வந்தனர். அவருள் கி.பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல்லவர் சிறப்புற்றவர். அவர்கட்கு முற்பட்ட பல்லவர் காலத்தில் தமிழகத்தில் செங்கற் கோவில்கள் கட்டப்பட்டிருந்தன. கி. பி.4,5,6 ஆம் நூற்றாண்டு களில் திருமூலர், காரக்காலம்மையார் போன்ற நாயன்மார் இருந்து சைவ சமயத்தை வளர்த்து வந்தனர். வட நாட்டிலிருந்து வந்த திருமூலர், மூவாயிரம் செய்யுட்களைக் கொண்ட திருமந்திரம் என்னும் நூலைப் பாடியுள்ளார். அந்நூல் அக் காலச் சைவ சமய உட்பிரிவுகளையும் கொள்கைகளை யும் நன்கு விளக்குவதாகும்.
மகேந்திரவர்மன்
கி.பி, 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சியை ஆண்ட மகேந்திரவர்மன் காலம் பல்லவர் வரலாற்றில் பொற்காலமாகும். இவனது காலமுதல் பல்லவராட்சி பெயரும் புகழும் பெற்றது. மலைச்சரிவுகளைக் குடைந்து கோவில்களாக்கிய கொற்றவன் மகேந்திரனேயாவன். இவன் முதலில் சமணனாக இருந்து அப்பரைத் துன்புறுத்தியவன்; பின்பு சைவனாக மாறியவன்; மாறிப் பாடலிபுரத்தில் (இன்றைய திருப்பாதிரிப்புலியூரில்) இருந்த புகழ் பெற்ற சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அச்சிதைவுகளைக்கொண்டு திருவதிகை யில் தன் பெயரால் குணபரஈசுவரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினவன். மகேந்திரன் இவ்வாறு சமயம் மாறியதை அவனது திருச்சிராப்பள்ளிக் குகைக்கோவில் கல்வெட்டும் உணர்த்துகின்றது. இவன் வல்லம், தளவானூர், சீய மங்கலம்,பல்லவபுரம் (பல்லாவரம்), திருச்சிராப்பள்ளி என்னும் இடங்களில் சிவனுக்காக குகைக்கோவில் களை அமைத்தவன். ஒவ்வொரு கோவிலும் இவன் விருதுப் பெயர்களுடன் ஈசுவரம் என்று முடியும். இவன் இசையிலும் நடனத்திலும் பெரும் பற்றுடையவன். இவன் காலத்துச் சித்தன்னவாசல் நடிகையர் ஓவியங்கள் ஓவியப் புகழ் பெற்றவை. இசையிலும் நடனத்திலும் பெருவியப்புடைய இவன் காலத்தில் அக்கலைகள் உயர் நிலையில் இருந்தன என்பதை, இவன் காலத் தவரான அப்பர் பாடிய திருப்பதிகங்களிலும் காணலாம்.
-------
“வேறு துறையிலிருந்து குணபரனைத் திருப்பிய ஞானம் அவனால் ஏற்படுத்தப்பட்ட இந்த லிங்கத்தால் நாட்டில் நீண்ட காலம் பரவட்டும், “புருஷோத்தமன் தன் மனத்தில் சிவனை உறுதி யாகப் பற்றி இருப்பவன்” என்பனவும், குடுமி யான் மலையிலுள்ள இவனது இசை பற்றிய கல் வெட்டில், ”சித்தம் நமசிவாய” என்று சிவனுக்கு வணக்கம் கூறும் பகுதியும் இவனது ஆழ்ந்த சிவப்பற்றை நன்கு உணர்த்துவனவாகும்.
நரசிம்மவர்மன்
மகேந்திரன் மகனான நரசிம்ம வர்மன் சிறந்த வைணவன்; இரண்டாம் புலிகேசியை வென்று `மகாமல்லன்` எனப் பெயர்பெற்றவன். பெரும்பாணாற்றுப் படையில் பட்டினம் எனப் பெயர் பெற்றிருந்தது, இவன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு `மகாமல்லபுரம்` எனப் பெயர் பெற்றது. இவன் அம் மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல் கோவில்களை (இக்காலத்தில் இரதங்கள் எனப்படுகின்றவை) அமைக்கத் தொடங்கினான். இன்று அருச்சுனன் ரதம், தர்மராசர் ரதம் என்று சொல்லப்படுபவை இவன் அமைக்கத் தொடங்கிய சிவன்கோவில்களேயாகும். திருக்கழுக்குன்றம் சிவன் கோவிலுக்குத் தன் முன்னோன் செய்த தானத்தை இவன் புதுப்பித்தான்.
---------------
பரமேசுவர வர்மன்
மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் ரதம், கணேசர் மண்டபம், இராமாநுசர் மண்டபம் என்பன இப்பரமேசுவரன் அமைத்தவை. இவை மூன்றும் சிவன் கோவில்களே. இவன் காஞ்சியை அடுத்த கூரத்தில் ஒரு சிவன் கோவிலைக் கட்டினான். இவன் சிறந்த சிவபக்தன்; உருத்திராக்கத்தால் ஆன சிவலிங்கத்தை முடியாகத் தரித்திருந் தவன். மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக் கற்கோ வில்களில் இருக்கும் கல்வெட்டுக்கள் இவனது சிவ நெறிப் பற்றை நன்கு விளக்குகின்றன.
-------
இராசசிம்மன்
இவன் மேற்சொல்லப்பட்ட முதலாம் பரமேசு வரனுக்கு மகன். இவ்வரசன் கற்களை அடுக்கிக் கோவில் கட்டிப் புகழ்பெற்றவன். மாமல்லபுரம் கடற்கரையில் க்ஷத்திரிய சிம்ம பல்லவேசுவரம், இராசசிம்ம பல்லவேசுவரம் என்ற இரண்டு சிவன் கோவில்கள் இவனால் கட்டப்பட்டவை. இவனால் குடையப்பட்ட கோவில்களும் பலவாகும். இவன் கட்டிய எல்லாக் கோவில்களிலும் உலகப் புகழ் பெற்றதும் சிறந்த சிற்ப வேலைப்பாடு கொண்டதும் காஞ்சி- கயிலாசநாதர் கோவிலேயாகும். அதன் பழையபெயர் இராசசிம்ம பல்லவேசுவரம் என்பது. திருச்சுற்றுச் சுவர்களில் புராண வரலாறுகளை உணர்த்தும் சிற்பங்கள் பல இன்றும் கண்டு களிக்கலாம். கருவறையைச் சுற்றியுள்ள சுவர் களில் பிறைகள் உள்ளன. அவற்றில் சிவனது உயர்வையும் நடனத்தையும் குறிக்கும் சிற்பங்கள் உள. சிவபெருமானுடைய பலவகை நடனங்கள் இக்கோவில் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இராசசிம்மன் காஞ்சியில் கட்டிய மதங்கீசர்கோவிலி லும் அயிராவதேசுவரர் கோவிலிலும் இத்தகைய நடனச் சிற்பங்களைக் காணலாம்.
--------
இராசசிம்மன் சிவசூடாமணி, சங்கர பக்தன், ஆகமபிரியன், சிவனிடம் அடைக்கலம் பூண்டவன் ரிஷப லாஞ்சனன், சைவ சித்தாந்தப்படி நடப்பவன், சிவனைத் தன் முடிமேல் தரித்துள்ளவன் என்று கைலாசநாதர் கோவில் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவற்றால், இவன் சிறந்த சிவ பக்தன் என்பதும், சைவ சித்தாந்தத்தை நன்கு அறிந்தவன் என்பதும், தன் தந்தையைப் போலவே உருத்திராக்க மணிகளான லிங்கத்தை முடியில் தரித்தவன் என்பதும் விளங்குகின்றன. இப்பெரு மகன் “அசரீரி கேட்டவன்” என்று கல்வெட்டுக் கூறுகின்றது. இக்குறிப்பு,பூசலார்நாயனார் புராண வரலாற்றுடன் தொடர்புகொண்டதாகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். பூசலார் வாழ்ந்த திரு நின்றவூர் (இன்றைய திண்ணனூர்ச்) சிவன்கோவி லில் பூசலார் உருவம், பல்லவன் உருவம், அவன் காலத்துத் தூண்கள் காணப்படுகின்றன. எனவே, அக்கோவில் இராசசிம்மன் காலத்தது என்று கூறுவது பொருந்தும். இவன் மனைவியும் மகனும் சிறந்த சிவ பக்தர்கள் என்பதையும் கைலாசநாதர் கோவில் கல்வெட்டுக்களால் அறியலாம்.
பின்வந்த இரண்டாம் பரமேசுவரன் திருவதி கைச் சிவன் கோவிலைக் கற்றளியாக்கினான். இரண் டாம் நந்திவர்மன் காலத்தில் பல கோவில்கள் புதுப் பிக்கப் பட்டன. இவன் மகனான நந்திவர்மன் காலத்தில் காஞ்சிபுரம்-திருமேற்றளியில் ஒரு மடம் இருந்தது.
மூன்றாம் நந்திவர்மன்
இவன் நந்திவர்மன் மகன். இவன் சிறந்த சிவ பக்தன். தென்னாறு எறிந்த நந்திவர்மன், குமார மார்த்தாண்டன் எனப் பல விருதுப் பெயர்கள் இவனுக்கு உண்டு. இவன் பொன்னேரிக்கு அடுத்த திருக்காட்டுப் பள்ளியில் புதிதாய்க் கட்டப்பட்ட சிவன் கோவிற்கு அசிசிற்றூரையே தானமாக அளித்தான்; திருவதிகை வீரட்டானேசுவரர்க்குமுன் விளக்கெரிக்க 100 கழஞ்சு பொன் அளித்தான். குமார மார்த்தாண்டன் என்ற தன் விருதுப்பெயர் கொண்ட விளக்கு ஒன்றைத் திருவிடைமருதூர்ச் சிவனுக்கு அளித்தான்; திருவொற்றியூர்ச் சிவன் கோவிலில் விளக்கெரிக்கப் பொன் அளித்தான். திருத்தவத்துறை மகாதேவர் கோவிலில் விளக்கெரிக்கப் பொன் அளித்தான். திருக்கடைமுடி மகாதேவர்க்கு நிலதானம் செய்தான். இவன் மனைவியருள் ஒருத்தியான மாறம்பாவையாலும் பிறராலும் இவனாட்டியில் அறங்கள் செய்யப்பெற்றவை - திருநெய்த்தானம், செந்தலை, திருவல்லம், திருக்கடைமுடி, திருப்பராய்த்துறை, குடிமல்லம்,நியமம், வெண்குன்றம், என்ற இடத்துக் கோவில்கள் ஆகும், குன்றாண்டார் கோவிலில் திருஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க ஒருவன் அரிசி தானம் செய்தான். இவன் காலத்தில் திருவல்லம் கோவிலில் திருப்பதிகம் ஓதப்பட்டு வந்தது என்பது தெரிகிறது. .
----------
இவன் சுந்தரர் காலத்தவன்
இந்நந்திவர்மன் செய்த திருப்பணிகள் அவன் சிறந்த சிவபக்தன் என்பதை உணர்த்துகின்றன. இவன் மனைவியான மாறன்பாவை பல கோவில் திருப்பணிகள் செய்தவள். இவ்வேந்தன் "சிவனை முழுதும் மறவாத சிந்தையன்" என்றும் "பைந்தமிழை ஆய்கின்ற நந்தி" என்றும் நந்திக் கலம்பகம் கூறுகின்றது. இப்பெருமகனையே, "கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன்" என்று சுந்தரர் தமது திருத்தொண்டத்தொகையில் பாராட்டினார் என்று அறிஞர் கூறுகின்றனர். இவன் வரலாறு பெரிய புராணத்தில் வரும் கழற்சிங்க நாயனார் புராணத்துள் காணலாம்.
பிற்பட்ட பல்லவர்
மூன்றாம் நந்திவர்மன் மகனான நிருபதுங்கன் காலத்தில் சைவசமயம் வளர்ச்சி பெற்றது. புதிய கோவில்கள் கட்டப்பட்டன. பழைய கோவில்கள்களில் திருப்பணிகள் நடைபெற்றன. பின்வந்த அபராசிதன் காலத்தில் திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோவில் கட்டப்பட்டது. இவன் தனது பக்திச் சிறப்பாலும் துறவு உள்ளத்தாலும்`பெருமானடிகள்` என்று பெயர் பெற்றான். இவன் காலத்தில் மாங்காடு, திருவொற்றியூர், சத்தியவேடு என்னும் இடத்துக் கோவில்கள் சிறப்புற்றன. இவன் மனைவியான மாதேவடிகள் சிறந்த பக்தியுடையவள். இந்த அபராசிதனோடு பல்லவராட்சி முடிவுற்றது.
--------
கோவிலாட்சி
பல்லவர் காலக் கல்வெட்டுக்களை நன்கு ஆராயின், பல கோவில்களில் இக்காலத்திலிருப்பது போன்ற கோவிலாட்சி இருந்தது என்பது தெரிகிறது. பெரிய கோவில்கள் அமிர்த கணத்தார் எனப்பட்ட குழுவினராட்சியில் இருந்தன. ஊரவையாரும் கோவிலாட்சியைக் கவனித்து வந்தனர். சில கோவில்களை, அவற்றை அடுத்திருந்த மடத்தார் கவனித்து வந்தனர். கோவில்களில் விழாக்கள் சிறப்புற நடந்தன. நாடோறும் பூசைகள் நடைபெற்றன. அவற்றுக்கு அரசரும் பொது மக்களும் பொருளும் நிலமும் அளித்தனர். இவ்வாறு கோவிலாட்சி சிறப்புற நடைபெற்றமையால்தான் அப்பரும் சம்பந்தரும் தலயாத்திரை செய்து, கோவிலையடுத்த மடங்களில் தங்கிச் சைவப் பிரசாரம் செயதல் முடிந்தது. தமக்கு வேண்டிய பட்டாடைகளையும் கோவில் பண்டாரத்திலிருந்து கொடுக்கும்படி அருள்புரியவேண்டும் என்று சுந்தரர் நாகைக்காரோணத்தில் வேண்டியதை நோக்கக் கோவில் பண்டாரம் (பொக்கிஷசாலை) நல்ல நிலையில் இருந்தது என்பதை அறியலாம்.
பல்லவர் காலத்து நாயன்மார்
பல்லவர் காலத்தில் சேரமான் பெருமாள் சேர நாட்டையும், நெடுமாறர் பாண்டிய நாட்டையும் ஆண்டனர். மகேந்திரன் முதலிய பல்லவ வேந்தர் சோழப் பெருநாட்டையும் தொண்டை நாட்டையும் சேர்த்து ஆண்டனர். சோழர் முடியிழந்து பல்லவர்க்கடங்கிய சிற்றரசராய், பழையாறையைத் தலைநகராகக் கொண்ட சிறு நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். திருக்கோவிலூரை ஆண்ட மெய்ப்பொருள் நாயனார், திருமுனைப்பாடி நாட்டையாண்ட நரசிங்கமுனையரையர்,மிழலை நாட்டையாண்ட பெருமிழலைக் குறும்பர், கொடும்பாளூரை ஆண்ட இடங்கழியார் என்பவர் சிற்றரசர் மரபினராவர்.
சிறுத்தொண்ட நாயனார் பல்லவர் சேனைத்தலைவர். கலிக்காம நாயனாரும் அவர் மாமனாரான மானக்கஞ் சாறரும் கோட்புலி நாயனாரும் சோழர் சேனைத் தலைவர். இவ்வாறு நாடாண்ட பேரரசரும் சிற்றரச ரும் அவர்தம் சேனைத்தலைவரும் சிவநெறிச் செல்வ ராக இருந்தமையாற்றான், சைவ சமயம் தமிழ்நாடு முழுதும் தழைத்தோங்கத் தொடங்கியது. பொது மக்களுள் எல்லா வகுப்பினருள்ளும் சிவனடியார் தோன்றினர். அறுபத்து மூவருள் பிராமண நாயன்மார்கள் பதினான்கு பேர்; வணிக நாயன் மார் அறுவர்; வேளாள நாயன்மார் பதின்மூவர்; குருக்கள் மரபினர் நால்வர். வேட்கோவர், வேடர், இடையர், வண்ணார், பரதவர், சாலியர், பாணர், பறையர், சான்றார் முதலிய வகுப்புக்களிலும் நாயன்மார் தோன்றினர். இந்த விவரங்களால் சைவ சமயம் பல்லவர் காலத்தில் எல்லா வகுப்பு மக்களாலும் போற்றி வளர்க்கப்பட்டது என்பது அறியப்படும்.
அப்பர், சம்பந்தர் ஆகிய இருவரும் சமணத்தையும் பௌத்தத்தையும் வன்மையாகக் கண்டித்து நாடெங்கும் சைவ சமயப் பிரசாரம் செய்தனர். நாயன்மார் சிலர் கோவில் தொண்டுகளில் ஈடுபட்டனர்; வேறு சிலர் சிவனடியார்களுக்குத் தண்ணீர்ப்பந்தல், உணவு முதலியவற்றை வழங் கினர். சிலர் சிவன் கோவில்களைக் கட்டினர், சிலர் அடியார்க்கு வேண்டிய உடைகளையும் பொருள்களையும் உதவினர்.
இந்நாயன்மார் வீட்டுப் பெண்மணிகள் சைவ சமயத் தொண்டுகளில் பெரு மகிழ்ச்சியோடு ஈடு பட்டனர். அப்பரது தமக்கையாரான திலகவதியார் திருவதிகைக் கோவிலில் சிவத்தொண்டு செய்து வந்தார். அப்பர் சமணத்திலிருந்து சைவராக உதவி செய்தவர் அவரேயாவர். நெடுமாறரைச் சைவ ராக்க மங்கையர்க்கரசியார் மேற்கொண்ட முயற்சி பெரிதாகும். அவரது முயற்சி இன்றேல் பாண்டிய நாட்டில் சைவம் பரவி இராது. தம் மகனை அறுத்துச் சமைக்க உடன்பட்ட சிறுத்தொண்டர் மனைவி யாரின் (வெண் காட்டு நங்கை) சமயப் பற்றுக்கு எல்லை கூற முடியுமோ? அடியாருக்குச் சமைக்க வயலில் விதைத்த நெல்லைக்கொண்டு வரும்படி யோசனை கூறிய இளையான்குடி மாறர் மனைவியார், நெல் வாங்கத் தம் தாலியைத் தந்த குங்குலியக் கலையார் மனைவியார், விளக்கெரிக்கப் பணம் வேண்டித் தம்மை விற்க உடன்பட்ட கலியநாயனார் மனைவியார் முதலிய மாதரசியார் சிவ பக்தியை என்னென்பது! இத்தாய்மார்களின் ஒத்துழைப்பு இன்றேல், நாயன்மார்கள் சமயத்திருப்பணி செய் திருத்தல் இயலுமா? சைவ சமயம் நன்கு வளர இப் பெண்மணிகளின் ஒத்துழைப்பும் ஒரு காரணமாக இருந்ததென்பது உறுதி.
சாதிவேறுபாடு இல்லை
இக்காலத்திலுள்ள கொடிய சாதி வேறுபாடு கள் நாயன்மார் காலத்தில் பாராட்டப்படவில்லை. பிராமணான சம்பந்தர் திருநாவுக்கரசருடைய கல்வியறிவு, அநுபவம், முதுமை, பக்தியின் சிறப்பு இவற்றைக் கருதி, அவரை `அப்பரே` (Father) என்றழைத்தார். பிராமணரான அப்பூதி அடிகள் வேளாளரான திருநாவுக்கரசருடன் (தம் குடும்பத் தாருடன்) இருந்து உணவுண்டார்; அப்பருக்குப் பாத பூசை செய்தார். சிவப் பிராமணரான சுந்தரர் உருத்திரக் கணிகையரான பரவையாரையும், வேளாளப் பெண்மணியராகிய சங்கிலியாரையும் மணந்துகொண்டது கவனிக்கத்தக்கது. சிவநேசச் செட்டியார் தம் மகளை மணந்துகொள்ளும்படி பிராமணரான சம்பந்தரை வேண்டியதும், வேளாளரான கோட்புலியார் தம் இரு பெண்களையும் மணந்துகொள்ளும்படி ஆதி சைவரான சுந்தரரை வேண்டினமையும் கவனிக்கத்தக்கது. "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும், கங்கை வார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் யாம்வணங்கும் கடவுளரே," என்று திருநாவுக்கரசர் பாடியிருத்தல் காண்க. இவை அனைத்தையும் நோக்க, அக்காலச் சிவனடியார்கட்குள் சாதி வேற்றுமை காட்டப்படவில்லை என்பதும், பக்தி ஒன்றுக்கே மதிப்புத் தரப்பட்டது என்பதும் தெரிகின்றன. அனைவரும் கலந்து ஒன்றாய்ப் பழகுதல், பாடுதல், உண்ணுதல், உறங்குதல் சமய வள்ர்ச்சிக்குத் தேவையானது என்பது கருதப்பட்டது. மேலும் சாதி வேறுபாடுகள் அற்ற சமணத்தையும் பௌத்தத்தையும் வெல்ல முயன்ற சைவத்தில் அவ்வேறுபாடுகள் இருத்தல் இழிவென்று கருதியிருத்தல் இயல்புதானே!
கோவில் நிகழ்ச்சிகள்
மூவர் பாடிய திருமுறைகளை ஆராயின், பெரும்பாலான கோவில்களில் பல விழாக்கள் நடைபெற்றன என்பது தெரிகிறது. எல்லாக் கோவில்களிலும் கடவுளர் திருமேனிகள் இருந்தன என்பதும் தெரிகின்றது. சுந்தரர் காலத்தில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் அவருக்கு முற்பட்ட ஐம்பது நாயன்மார்கட்கு உருவச் சிலைகள் இருந்தன. இசையும் நடனமும் பல கோவில்களில் வளர்க்கப்பட்டன என்பது திருமுறைகளால் தெரிகிறது. இறைவன் "ஏழிசையாய் இசைப்பயனாய்" இருப்பவன். "பண் அவனே;" "பண்ணின் திறனும் அவனே" என்பது நாயன்மார் கண்ட உண்மை. சமய தத்துவங்களில் உயர்ந்தது நாத தத்துவம் . நாதத்திலிருந்து இசை தோன்றுகிறது. இறைவனே இசை வடிவமாய் இருக்கிறான் என்பது சைவ சமயக்கொள்கை. இதனால் இசையோடு தோத்திரங்களைப் பாடுவதால், இறைவன் மகிழ்வான். அருள் புரிவான் என்று சம்பந்தர் கூறியுள்ளார். "தமிழோடு இசை கேட்கும் இச்சையில் நித்தம் சம்பந்தர்க்கு காசு நல்கினீர்" என்று சுந்தரர் கடவுளை நோக்கிக்கூறியிருத்தல், இசையை இறைவன் விரும்புகிறான் என்பதை உணத்துகிறதன்றோ? இந்த விவரங்கள் கோவிலில் இசை பயிலப்பட்டதன் காரணத்தை விளக்க வல்லன.
பல கோவில்களில் நடனமாதர் இருந்து சமயத் தொடர்பான நடனங்களை ஆடினர். வீணை, கின்னரம், குடமுழா, கொக்கரை, முழவம், குழல், பறை, தாளம், யாழ், பிடவம், கல்லலகு, சச்சரி, கொடுகொட்டி, தக்கை, பேரி, தண்ணுமை, தகுணிதம், சங்கிணை, சல்லரி, தத்தலகம், துந்துபி, மொந்தை, தண்டு, கல்லவடம், கூடரவம் முதலிய பல்வேறு இசைக் கருவிகள் கோவில்களிற் பயன்பட்டன. இவ்விவரங்களை நோக்க, இசையும் நடனமும் சைவ வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றன என்பது தெரிகிறது.
ஆடலும் பாடலும்
இசை அனைவர் உள்ளத்தையும் உருக்க வல்லது. அது குழல், யாழ், வீணை இவற்றுடன் பயிலப்படுகையில் மிக்க இனிமை பயக்கும். பக்திச்சுவை பொருந்திய பாடல்கள் இசைக் கருவிகளுடன் பாடப்படும்பொழுது மக்கள் உள் ளங்களைக் கவரும் என்பது உறுதி. அப்பாடல்கள் மக்களது தாய்மொழியில் பாடப்பட்டமையால், மக்கள் உள்ளங்களில் அவற்றின் பொருள் பதிந்து, பக்தியை உண்டாக்கின. விழாக் காலங்களிலும் பிற காலங்களிலும் பண்ணிசையுடன் சிவபெரு மான் ஆடிய பலவகை நடனங்களையும் பிற நடன வகைகளையும் நடனமாதர் நடித்துக் காட்டினமை மக்கட்குச் செவி விருந்தும் விழி விருந்துமாய் அமைந்தன. இவ்விரு கலைகளும் காம இன்பத் தைப் பயப்பவை என்று சமண-பௌத்தரால் விலக்கப்பட்டவை. அம்மை-அப்பனான மாதொரு பாகனை வழிபட்ட சைவர்கட்கு இவை வெறுப்பைத் தராது, இன்பத்தையே தந்தன. இசையும் நடனமும் பொதுமக்களைக் கோவில்கட்கு இழுத் தன; உள்ளங்களைக் குழைவித்தன; கலைகளின் அருமையை உணர்த்தின; கலையே உருவான கடவுளிடம் மனத்தைச் செலுத்தின; தம்மை மறந்து ஆடவும் பாடவும் செய்தன. சிவபெருமான் ஆடிய பலவகை நடனங்கள் திருமூலரால் கூறப் பட்டன; அவை சிற்பங்களாகக் கைலாசநாதர் கோவிலில் காட்சியளித்தன; தேவார ஆசிரியர் காலத்தில் அவற்றை நடன மகளிர் ஆடிக் காட்டினர். இறைவனுக்கே `நடராஜர்` என்ற பெயர் உண்டெனின், அவன் சமயம் நடனக் கலையை ஒரு பகுதியாகக் கொண்டது என்பது கூறாதே அமையும் அன்றோ? துறவு நிலையிலிருந்து முத்தி பெறலாம்; இன்றேல், இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவனைப் பாடியாடிப் பரவுவதாலும் முத்தி அடையலாம் என்னும் பக்திநெறிப்போதனை இல்லறத்தார் உள்ளங்களைக் கவர்ந்தது. மக்கள் பண்ணிறைந்த பாடல்களைப் பாடியும் ஆடியும் இறைவனை வழிபடலாயினர். இவ்வாறு எல்லோரும் எளிதிற் பின்பற்றும்படியான பக்தி நெறியை நாயன்மார் போதித்தமையாற்றான் சைவசமயம் நாட்டில் நன்கு பரவலாயிற்று.