புதுமை

கோவில்பட்டி அருகில் ஜமீன் கிராமம் ஒன்றில் வாழ்ந்த விவசாயி தமது காலத்தில் நடந்த புதுமைகளை எண்ணிப் பார்க்கிறார். தாம் சிறுவனாக இருந்த காலத்திலிருந்த போக்குவரத்து முறையையும், இன்று முதியவராக இருக்கும் காலத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் நினைத்துப் பார்க்கிறார். ரயிலில்லாத காலம் அவரது இளமைப் பிராயம். இன்று ரயிலும், தந்தியும் போகாத இடமில்லை. பெரிய ஜமீன்தார் குதிரை சவாரி செய்வார். இன்று வாழும் சின்ன ஜமீன்தார் காரில் போகிறார். இந்த மாறுதல்கள் நல்லவையா, தீயவையா என்றுணர அவரால் முடியவில்லை. அவை அதிசயங்களாக மட்டும் அவருக்குத் தோன்றுகின்றன. பாலம் கட்டியது மட்டும் நன்மையாகப்படுகிறது.
வண்டி வருகுதடி
வடுகப்பட்டி முந்தலிலே
தந்தி வந்து பேசுதடி
தட்டாம் பாறை டேஷனுல
பெரிய துரை காலத்திலே
பேய்க் குதிரை சவாரி
சின்னத்துரை காலத்திலே
சிம்மம் போல மோட்டார்
கோச்சு மேலே கோச்சு வர
கொளும்புக் கோச்சு மேலேவர
நீல வர்ணக் கோச்சியிலே
நிச்சயமா நான் வாரேன்
ஆத்துல தண்ணிவர
ஆணும் பெண்ணும் அவதிப்பட
தூத்துக்குடி வெள்ளைக்காரன்
துணிஞ்சிட்டானே பாலங் கட்ட
கோணக் கோண ரயில் வண்டி
குமரிப் புள்ளே போகும் வண்டி
திருக்குப் போட்டு போகுதையா
திருமங்கலம் டேஷனுக்கு
குறிப்பு: டேஷன், ரயில், கோச்சு ஆங்கிலச் சொற்கள், பாமர வழக்காகி விட்டது. இவை யாருக்கும் விளங்கக் கூடிய முறையில் தமிழில் உருமாறி வழங்குவதால் இவை தமிழ் சொற்களாகி விட்டன.
சேகரித்தவர் : S.S.போத்தையா
இடம் : தூத்துக்குடி, நெல்லை மாவட்டம்.
-----------------