புழுதிச் சாலையில் ஒரு வைரம்

bookmark

அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம். ஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரை விட்டு, மற்றொரு நகரை நோக்கி நடந்தார். மாலை நேரமாகிவிட்டது. அந்த நேரம் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது முழுமையாக நனைந்துவிட்ட குரு, விவசாய பண்ணைக்கு நடுவில் இருந்த ஒரு வீட்டை அணுகினார். வீட்டுக்கு வெளியே நிறைய ஷூக்கள், நனையாமல் இருந்தன.

  சரி, ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்... நனையாத உடை, ஒரு ஜோடி ஷூ வாங்கி அணிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தார். உள்ளேயிருந்து வந்த ஒரு பெண்மணி, குருவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை தந்தார். அவர் உடை நனைந்திருப்பதைப் பார்த்து, வேறு உடை மாற்றிக் கொள்ளுமாறும், இரவை அங்கேயே கழிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

  வீட்டு முகப்பில் ஒரு சிறு கோயில். அங்கு சிறிது நேரம் கண்மூடி நின்ற குருவுக்கு, பின்னர் உள்ளே இருந்த தனது அம்மா மற்றும் குழந்தைகளை அந்தப் பெண்மணி அறிமுகப்படுத்தினார். ஆனால் அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டத்தை அவர் கண்டார். ஏதோ சரியில்லை என்பது புரிந்ததும், என்ன அம்மா உங்கள் பிரச்சினை? என்று கேட்டார்.

  அய்யா... என் கணவர் ஒரு சூதாடி, குடிகாரர்.. எப்போதெல்லாம் சூதாட்டத்தில் ஜெயிக்கிறாரோ, அப்போது இருக்கும் பணத்தையெல்லாம் குடித்துவிடுவார். தோற்கும்போது, வீட்டிலிருப்பதை எடுத்துப்போய் விடுவார். அல்லது கடன் மேல் கடன் வாங்குகிறார். சமயத்தில் குடித்துவிட்டு எங்கேயோ விழுந்துகிடந்து பின் வருகிறார்... என்ன செய்வதென்றே புரியவில்லை, என்றார்.

  கவலை வேண்டாம்... நான் உதவுகிறேன்... இதோ என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது. நல்ல ஒயினையும், சாப்பிட உணவும் வாங்கி வாருங்கள். அதன் பிறகு நீங்கள் படுக்கப் போங்கள்... நான் அந்தக் கோயிலில் சற்று நேரம் தியானம் செய்கிறேன், என்று அந்தப் பெண்ணிடம் பணம் கொடுத்து அனுப்பினார்.

  சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்துவிட்டான். மித மிஞ்சிய போதையில் இருந்தான். கால்கள் தரையில் நிற்கவில்லை... ஏய்... இங்க வாடி... நான் வந்துட்டேன்டி... என்ன பண்ற.. சாப்பாடு கொண்டா என்று சத்தமாகக் கேட்டான்.

  உடனே அவனிடம் வந்த குரு, இதோ நான் தருகிறேன், நீ கேட்டதை, என்றார். பின்னர், மழையில் மாட்டிக் கொண்டேன். உன் மனைவிதான் இங்கு தங்க அன்போடு அனுமதித்தார். அதற்கு பிரதியுபகாரமாக நல்ல ஒயினும் சாப்பிட மீனும் கொண்டு வந்துள்ளேன், என்றார் குரு.

  குடிகார கணவனுக்கு ஒரே சந்தோஷம். மொத்த ஒயினையும் குடித்தான். சாப்பிட்டான். அப்படியே தரையில் சரிந்து விழுந்து தூங்கிவிட்டான். குருவோ, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டார். பொழுதும் விடிந்தது. கணவன் எழுந்து பார்த்தான். முந்தைய இரவு நடந்தது எதுவும் அவனுக்கு நினைவில்லை.

  குருவைப் பார்த்தான். யார் நீ.. எங்கிருந்து வருகிறாய்? என் வீட்டில் என்ன வேலை? என்று கேள்விகளை வீசினான். புன்னகை மாறாத முகத்துடன் அவனது கேள்விகளை எதிர்கொண்ட குரு, நான் இந்த நாட்டு மன்னனின் குரு. பக்கத்து நகருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன், என்றார். ராஜகுரு என்றதும், அந்த குடிகார கணவன் திடுக்கிட்டான். தான் நடந்து கொண்டதை நினைத்து வெட்கமடைந்தான். தனது செயல் மற்றும் பேச்சுக்காக மன்னிப்பு கோரினான்.

  குருவின் முகத்தில் புன்னகை மாறவில்லை. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. வாழ்க்கை குறுகியது. அந்த குறுகிய காலத்தில், குடி, சூதாட்டம் என இருந்தால், உடனிருக்கும் நல்ல உறவுகளை இழந்துவிடுவாய்.. குடும்பமே இல்லாமல் போய்விடும் என்பது தெரியவில்லையா?, என்றார். ஏதோ ஒரு ஆழ்ந்த கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல திடுக்கிட்டு எழுந்தான் குடிகார கணவன். ஆம்.. நீங்கள் சொல்வது சரிதான் குருவே..., என்றவன், உங்களின் இந்த அற்புதமான அறிவுரைக்கு நான் என்ன திருப்பித் தரப் போகிறேன், என உருகிப் பேசினான்.

  கொஞ்ச தூரம் உங்களின் பொருள்களைத் தூக்கிக் கொண்டு உடன் வருகிறேன். ஒரு சிறிய சேவகம் செய்த திருப்தியாவது கிடைக்கும், என்றான் மனம் மாறிய அந்த குடிகாரன். சரி... உன் விருப்பம், என்றார் குரு. இருவரும் நடக்க ஆரம்பித்தனர். மூன்று மைல்கள் தாண்டினார்கள். அவனை திரும்பிப் போகச் சொன்னார் குரு. இன்னும் 5 மைல்கள் உடன் வருவதாய் அவன் தெரிவித்தான்.

  ஐந்து மைல்கள் கடந்தது. சரி.. நீ போகலாம் என்றார் குரு. இன்னும் ஒரு பத்து மைல்கள் வருகிறேனே... என்று மன்றாடினான். பத்து மைல்கள் கடந்ததும், கொஞ்சம் கண்டிப்பான குரலில், நீ இப்போது வீட்டுக்குத் திரும்பலாம், என்றார் குரு. குருவே, இனி நான் பழைய பாதைக்கு திரும்புவதாக இல்லை. மிச்சமிருக்கும் நாளெல்லாம் தங்கள் வழியைப் பின்பற்றி நடப்பேன்!. என்றான் உறுதியான குரலில்...