பொருத்தமில்லாத இடத்தில் பெண் கொடுத்தல்

ஒரு பெண்ணின் தாய் தந்தையர் பொருத்தமில்லாத இடத்தில் அவளை மணம் செய்து கொடுத்துள்ளதால், அவள் புருஷன் வீட்டில் பல அபவாதங்களை ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது. அவளை தகுந்த இடத்தில் மணம் செய்து கொடுத்தால் இந்த பேச்சுக் கேட்காமல் இருக்கலாமல்லவா? தந்தையின் மரணத்தின் போது அவள் இதை ஒப்பாரியில் வெளிப்படுத்துகிறாள்.
சீனா மரிக் கொழுந்து
சீட்டெழுதும் பின்னாங்கு
சீரா கொடுத்திருந்தால்
சீன்னச் சொல்லு ஏன் வருது
பீனா மரிக் கொழுந்து
பேரெழுதும் பின்னாங்கு
பேரா கொடுத்திருந்தால்
பெரிய சொல்லு ஏன் வருது
குளத்தங்கரை யோரம்
குதிரை வந்து மண்டியிடும்
குதிரைக்கும் சங்கிலிக்கும்
குலம் பார்த்துக் கோத்திருந்தால்-எனக்கு
குறைவு வந்து நேராது
ஆத்தங்கரை யோரம்
ஆனை வந்து மண்டியிடும்
ஆனைக்கும் சங்கிலிக்கும்
அளவு பார்த்துப் பூட்டிருந்தால்-எனக்கு
அலப்பு வந்து நேராது
கல் பொறுக்கும் சீமையிலே-என்னை
கட்டிக் கொடுத்தாங்க
கல்லைப் பொறுக்கு வேனோ எங்கப்பன் வீட்டு
காதவழி சேருவேனோ
முள்ளெடுக்கும் சீமையிலே-என்னை
முடிஞ்சி கொடுத்தாங்க
முள்ளைப் பெருக்குவேனோ
எங்கப்பன் வீட்டு
முல்லை வனம் சேரு வேனா.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------