போட்டோவும் சினிமாவும்

bookmark

காதலன் பல நாட்களாக காதலியோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி வருகிறான். அது போலவே சினிமாவுக்குப் போகலாம் என்றும் ஆசைகாட்டி வருகிறான். ஆனால் பல மாதங்களில் இரண்டில் ஒன்றும் நடக்கவில்லை. அவள் அவனைச் செல்லமாகக் கோபிக்கிறாள். அவன் அவளை அழைத்துச் செல்லப் பயப்படுகிறான். அவர்களுக்குத் திருமணமாகச் சில மாதங்களே இருக்கின்றன. யாரேனும் கேலி செய்து விடுவார்களோ என்று பயம். ஒருமட்டும் மனத்தை திடப்படுத்திக் கொண்டு போவதற்கு முயலும்போது அவனது நண்பன் ஒருவன் அப்பொழுது நடக்கும் சினிமா நன்றாக இல்லை என்று சொல்லி விட்டான். அவனைத் திட்டிக்கொண்டே காதலன் "நல்ல படம் இல்லை யினு, நாசகாரன் சொல்லுதானே" என்று காதலியிடம் சொல்லுகிறான். அவளோ, உறுதியாக, "கருங்காலி பேச்சுக் கேட்டு கலங்க வேண்டாம்,போவோம் மச்சான்" என்று பிரச்னையைத் தீர்த்து விடுகிறாள். தற்காலத்திலும் ரசமான நாட்டுப் பாடல் எழுகின்றன. தமது கவிதையூற்று வற்றிவிட வில்லை என்பதற்கு இப்பாடல் சான்றாகும். இது கார்க்கியே எழுதியதாக இருக்கலாம். அவ்வாறானாலும், நாட்டாரால் ஒப்புக் கொள்ளப்பட்ட பாடலாகும்.

காதலன்: 
உச்சி வகுத்த புள்ள
ஊரு தேசம் பாத்த புள்ள 
மெத்தப் படிச்ச புள்ள 
புத்தி கெட்டுப் போயிராத 
உருகி உருகியல்லோ 
ஒன்னால நான் உருகி 
கல்லான மேனியெல்லாம் 
கயிறாய் உருகுறேனே

காதலி: 
போட்டோ எடுப்பமிண்ணு
பல நாளும் சொன்ன மச்சன், 
போட்டோ எடுக்காம-என்னப் 
பொய் சொல்லி ஏய்க்கலாமா? 
சினிமாவுக்குப் போவமிண்ணு 
பல நாளும் சொன்ன மச்சான் 
சினிமாவுக்கு போகலாமே 
பாதையும் தெரியுதாமே

காதலன்: 
செத்துப் பிழைச்சு நம்ம
சினி மாவுக்குப் போகையிலே 
நல்ல படம் இல்லையிண்ணு 
நாசகாரன் சொல்லுதானே

காதலி: 
கருத்துள்ள படமாருக்கும்
கஷ்டங்கள் நிறைஞ்சிருக்கும் 
கருங்காலி பேச்சு கேட்டு 
கலங்க வேண்டாம் போவோம் மச்சான்

வட்டார வழக்கு: கருங்காலி-சேர்ந்திருப்பதைக் கெடுப்பவன்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி இடம்: நெல்லை மாவட்டம்.
--------------------