மதினி கொடுமை

கணவனையிழந்தவளுக்குப் பிறந்த வீட்டில் மதிப்பில்லை. அவ்வீட்டுச் சொத்து சுகங்களில் அவளுக்குப் பங்கில்லை. இதனால் புகுந்த வீட்டின் கொடுமைகளுக்கு அஞ்சி, பிறந்த வீடு செல்லுவோம் என்றால் அங்கு அவளுக்கு வரவேற்பிராது. தண்ணீர் குடிக்கத் தூரத்திலுள்ள ஊற்றுக்குப் போனால் கூட நிரம்பத் தண்ணீர் குடித்துவிடக் கூடாது என்பதற்காகத் தலையாரியைக் கூட அனுப்புகிறார்கள். கணவனையிழந்த ஒருத்தி பிறந்த வீட்டு நிலைமையை எண்ணி அங்கு தன் மதனியார் தன்னை பெருஞ் சுமையெனக் கருதுவார்கள் என்பதை இலைமறை காயாகக் கூறுகிறாள்.
கள்ளிமேல் கத்தாழ
கருணைனெல்லாம் எம்பிறப்பு
கருணணுக்கு வந்தவளே-என்னை
மதிக்காளில்லே
வேலி மேல் கத்தாழ
வீமனெல்லாம் எம்பிறப்பு
வீமனுக்கு வந்தவளே-என்னை
விலையா மதிக்காளில்ல
தண்ணி தவிச்சு-நான்
தலைமலை ஊத்துக்கே போனாலும்
தலைமலை ஊத்துலயே-எனக்கு
தலையாரி காவலுண்டும்
மெத்தத் தவிச்சு நான்
மேமலை ஊத்துக்கே போனாலும்
மேமலை ஊத்துலேயே-எனக்கு
மெல்லியரே காவலுண்டும்
பல்லிலிடும் பச்சத்தண்ணி
பழனிமலைத் தீர்த்தம் என்பார்
நாவிலிடும் பச்சத்தண்ணி
நாகமலைத் தீர்த்தமென்பார்
வட்டார வழக்கு: எம்பிறப்பு-என் உடன் பிறந்தோர் ; கத்தாழ-கற்றாழை; மதிக்காளில்லை-மதிக்கிறாள் இல்லை.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி,நெல்லை
---------