மரணம்

ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார். துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது. அனைவரின் முகத்திலும் வருத்தமும், கண்ணீரும் நிறைந்திருந்தது. ஆனால் ஞானியோ சர்வசாதாரணமாக கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்.
வந்தவர்களுக்கு அதிர்ச்சி. ஒருவன் துணிந்து கேட்டான், குருவே, நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது, நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே? அதற்கு ஞானி சொன்னார், பிறப்பில் சிரிக்கவோ, இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது? பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.
என் மனைவிக்கு முன்பு உடலோ, உயிரோ இல்லை. பிறகு உயிரும் உடலும் வந்தன. இப்போது இரண்டும் போய்விட்டன. இடையில் வந்தவை இடையில் போயின. இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?