மறக்க மனம் கூடுதில்லை

bookmark

ராமனைக் கண்டு காதல் கொண்ட சீதை தனித்திருந்த போது கீழ்வருமாறு சிந்திக்கிறாள்;

பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும் 
எண் வழி உணர்வும், நான் எங்கும் காண்கிலேன் 
மண் வழி நடந்து அடி வருந்தப் போனவன் 
கண் வழி நுழையுமோர் கள்வனே கொலாம்.

இந்திர நீலமொத்திருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல;
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.
(கம்பன்)

சீதையின் நிலைமையில், கிராமப் பெண்ணொருத்தி தன் மனத்தினுள் நுழைந்த இளைஞனை மனதிற்பதித்து அவனை மறக்க முடியவில்லையே என்று இன்ப வேதனையால் கேட்கிறாள்.

வெத்திலைத் தீனழகா 
நித்தம் ஒரு பொட்டழகா 
மைக் கூட்டுக் கண்ணழகா 
மறக்க மனம் கூடுதில்லை 
இஞ்சி இடுப்பழகா 
எலுமிச்சங்காய் மாரழகா 
மஞ்சச் சிவப்பழகா 
மறக்க மனம் கூடுதில்லை 
ஆலிலை போல் அடி வயிறு 
அரசிலை போல் மேல் வகிடும் 
வேப்பிலை புருவக்கட்டும்
விடவும் மனம் கூடுதில்லை 
காத்தடிச்சுத் தாழை பூக்க 
காத வழி பூ மணக்க 
பூவார வாசத்துல 
போக மனம் கூடுதில்லை 
சுத்திச் சிவப்புக்கல்லு 
சூழ் நடுவே வெள்ளைக்கல்லு 
வெள்ளைக் கல்லும் பாவனையும் 
வெறுக்க மனம் கூடுதில்லை 
தெற்கத்திக் கும்பாவாம் 
திருநெல்வேலி வெங்கலமாம் 
மதுரைச் சர விளக்கை 
மறக்க மனம் கூடுதில்லை 
ஆருக்கு ஆளானேன் 
ஆவரைக்குப் பூவானேன் 
வேம்புக்கு நிழலானேன் 
வெறுக்குதில்லை உங்க ஆசை 
கம்பம் பூவே கமுகம் பூவே 
காத்தடிச்சா உதிரும் பூவே 
மாதுளம் பூ என் கனியை 
மறக்க மனம் கூடுதில்லை 
கம்மங் கருதிருக்க 
கருத்தூரணி தண்ணிருக்க 
புங்க நிழலிருக்க 
போக மனம் கூடுதில்லை

வட்டார வழக்கு: கும்பா-சரவிளக்கு.
சேகரித்தவர்: S.S. போத்தையா 
இடம்: விளாத்திகுளம் பகுதி, திருநெல்வேலி.
----------------------