மலடி

மலடி தொட்ட காரியம் விளங்காது என்று சமூகத்தில் ஒரு நம்பிக்கை. மங்கள காரியங்களுக்கு அவளை அழைப்பதில்லை. தம் குழந்தைகளை அவள் காணக் கூடாது என்று தாய்மார்கள் தமது குழந்தைகளை மறைத்து வைப்பார்கள். பிள்ளை பெற்ற மகராசிகளுக்குத்தான் மங்கள காரியங்கள் செய்வதில் வரவேற்பு உண்டு. அவர்கள் துவங்கிய காரியம் இனிது முடியும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஓர் மலடி, தன்னையே நொந்து கொள்ளுகிறாள். தான் தொட்டது விளங்காது என்று அவளே கூறுகிறாள்.
என் வீட்டுப் பக்கத்திலே அரகரா
மகனே மார்க்கண்டா
ஏனூடு தான் மரடு சிவனே
மரடியோட பேரைச் சொல்லி அரகரா
மகனே மார்க்கண்டா
மாடு ரெண்டு ஓட்டி வந்தேன் சிவனே அரகரா
பாலு குடிக்கலேண்ணு அரகரா
மகனே மார்க்கண்டா
பாலெருமை ஓட்டி வந்தேன் சிவனே
மரடியோட பேரைச் சொல்ல அரகரா
மகனே மார்க்கண்டா-அந்த
மூணெருமை தான் மரடு சிவனே
மாடு போகும் வழி தனிலே அரகரா
மகனே மார்க்கண்டா-நான்
தனிக் குளம் வெட்டி வச்சேன் சிவனே
மரடியோட பேரைச் சொல்ல அரகரா
மகனே மார்க்கண்டா-அங்க
வந்த மாடு அருந்தலையே சிவனே
ஆடு போகும் வழி தனிலே அரகரா
மகனே மார்க்கண்டா-நான்
ஆறு குளம் வெட்டி வச்சேன் சிவனே
மரடி யோட பேரைச் சொல்ல அரகரா
மகனே மார்க் கண்டா
மந்தை ஆடு அருந்தலையே சிவனே அரகரா.
வட்டார வழக்கு : மரடு-மலடு.
சேகரித்தவர் : சடையப்பன்
இடம் : அரூர், தருமபுரி மாவட்டம்.
---------