மாடம்பாக்கம்

பாடல் 701
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதான
தோடு றுங் குழை யாலே கோல்வளை
சூடு செங்கைக ளாலே யாழ்தரு
கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே
தூம மென்குழ லாலே யூறிய
தேனி லங்கித ழாலே யாலவி
லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே
பாட கம்புனை தாளா லேமிக
வீசு தண்பனி நீரா லேவளர்
பார கொங்கைக ளாலே கோலிய ...... விலைமாதர்
பாவ கங்களி னாலே யான்மயல்
மூழ்கி நின்றய ராதே நூபுர
பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ
நாட ருஞ்சுடர் தானா வோதுசி
வாக மங்களி னானா பேதவ
நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி
நால்வி தந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயா தீதம
னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே
வாட யங்கியவேலா லேபொரு
சூர்த டிந்தருள் வீரா மாமயி
லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன்
வாச கம்பிற வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக
மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 702
தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா
------ 3 முறை ------ ...... தனதனா தனனா
விலைய றுக்கவு முலைம றைக்கவு
மணந்துன் றுஞ்செ ழுந்தார்
புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும்
விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர்
விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு
நிணந்துன் றுஞ்ச லம்பா ...... யுதிரநீ ருடனே
வெளியி னிற்கவும் வலிய முட்டரை
யெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே
யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை
திரும்பும் பண்ப ரன்றே
யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி
யுடன்கொண் டன்பு டன்போய் ...... சயனபா யலின்மேல்
கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு
நயங்கொண் டங்கி ருந்தே
குணுகி யிட்டுள பொருள்ப றித்தற
முனிந்தங் கொன்று கண்டே
கலக மிட்டவ ரகல டித்தபின்
வரும்பங் கங்கு ணங்கோர் ...... புதியபே ருடனே
கதைகள் செப்பவும் வலச மர்த்திகள்
குணங்கண் டுந்து ளங்கா
மனித னிற்சிறு பொழுது முற்றுற
நினைந்துங் கண்டு கந்தே
கடிம லர்ப்பத மணுகு தற்கறி
விலன் பொங்கும் பெரும்பா ...... தகனையா ளுவையோ
சிலைத னைக்கொடு மிகஅ டித்திட
மனந்தந் தந்தண ந்தா
மரைம லர்ப்பிர மனைந டுத்தலை
யரிந்துங் கொண்டி ரந்தே
திரிபு ரத்தெரி புகந கைத்தருள்
சிவன்பங் கங்கி ருந்தா ...... ளருளுமா முருகா
செருவி டத்தல கைகள் தெனத்தென
தெனந்தெந் தெந்தெ னந்தா
எனஇ டக்கைகள் மணிக ணப்பறை
டிகுண்டிங் குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு
டிகுண்டிங் குண்டி குண்டீ ...... யெனஇரா வணனீள்
மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு
மிரண்டஞ் சொன்ப தொன்றேய்
பணைபு யத்தையு மொருவ கைப்பட
வெகுண்டம் பொன்றெ றிந்தோன்
மதலை மைத்துன அசுர ரைக்குடல்
திறந்தங் கம்பி ளந்தே ...... மயிலின்மேல் வருவாய்
வயல்க ளிற்கய லினமி குத்தெழு
வரம்பின் கண்பு ரண்டே
பெருக யற்கொடு சொரியு நித்தில
நிறைந்தெங் குஞ்சி றந்தே
வரிசை பெற்றுயர் தமனி யப்பதி
யிடங்கொண் டின்பு றுஞ்சீர் ...... இளைய நாயகனே.