மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது

அப்போது ரஸிக சிரோமணி சொல்லுகிறது:-
கேளாய், கர்வம் பிடித்த மதுகண்டிகை யென்ற குயிற் பெண்ணே! பல வருஷங்களின் முன்பு மதுரை மாசி வீதி மளிகை மாணிக்கஞ் செட்டி என்றொருவனிருந்தான். அவனுடைய தந்தை மளிகை வியாபாரஞ் செய்து கடன்பட்டு வீடு வாசலையிழந்து ஏழ்மையிலே இறந்து போனான். பின்பு மாணிக்கஞ் செட்டியின் தாய் கடலை சுண்டலும், தோசையும் விற்றுச் செட்டாகக் குடித்தனம் பண்ணித் தன் பிள்ளையை வளர்த்து வந்தாள். மாணிக்கஞ் செட்டிக்குப் பத்து வயதானவுடன் அவனை ஒரு பெரிய வியாபாரி தனது கடையிலே மாதம் அரை ரூபாய் சம்பளத்துக்கு வைத்துக் கொண்டான். இவன் தாயாரிடத்திலிருந்து செட்டு, கருத்து முதலிய நல்ல குணங்களைப் பயின்றவனாதலால், பெரிய வியாபாரிக்கும் இவன் மேலே தயவும் நம்பிக்கையும் உண்டாயின.
பெரிய வியாபாரிக்குப் பிள்ளையில்லை. ஒரே பெண். அவள் பெயர் மரகதவல்லி. நாளடைவில் மாணிக்கஞ் செட்டியை வியாபாரி தன் கடையில் பங்காளியாகச் செய்து கொண்டான். தன் மகளை இவனுக்கே விவாகம் செய்து வைத்தான். அவன் இறந்த பிறகு உடைமையெல்லாம் மருமகனுக்கே வந்துவிட்டது. மதுரை மாசி வீதி மளிகைக் கடை மாணிக்கஞ் செட்டி என்று பிரக்யாதி ஏற்பட்டு விட்டது. இந்த மாணிக்கஞ் செட்டியினிடம், பதினாறு வயதுள்ள மானி அய்யன் என்ற பார்ப்பாரப் பிள்ளை ஒருவன் வந்தான்.
"ஐயரே, என்ன வேண்டும்?" என்று செட்டி கேட்டான்.
"தங்களுடைய கடையிலே எனக்கொரு வேலை போட்டுக் கொடுக்க வேண்டும்" என்று சிறுவன் சொன்னான்.
"உனக்கென்ன தெரியும்?"
"எனக்கு எண்சுவடி முழுதும் நான்றாகத் தெரியும். கணக்குப் பதிவு தெரியும். கூடிய வரை எழுதப் படிக்கத் தெரியும்.?
இதைக் கேட்டவுடனே செட்டி நகைத்தான்.
"பார்ப்பாரப் பிள்ளைகள் வந்தால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாதென்று சொல்லும் வழக்கமே கிடையாது. எதுவும் தெரியும். ஐயரே, போய் வாரும். இவ்வளவு தெரிந்த பிள்ளைகள் நம்மிடம் வேலைக்கு வேண்டாம்? என்று சொன்னான்.
"சரி? என்று மானி அய்யன் வெளியிற் போனான்.
"இங்கே வருக ஐயரே" என்று மாணிக்கஞ் செட்டி திரும்பவும் அவனைக் கூப்பிட்டான். சிறுவன் திரும்பி வந்தான்.
"ஐயரே! நீர் முந்திச் சித்திரை வீதியில் முருகச் செட்டியார் கடையில் இருக்க
வில்லையா?" என்று செட்டி கேட்டான்.
மானி :- "ஆம்" என்றான்.
செட்டி: "அங்கிருந்து ஏன் வெளியேறி விட்டீர்?"
: "எனக்கும் முருகச் செட்டியாருக்கும் குணம் ஒத்து வரவில்லை."
செட்டி: "அதென்ன விஷயம் காணும்?"
மானி : "நம்முடைய குணம் அவருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய குணம் எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவு தான்."
செட்டி :- "அதுதான் என்ன விஷயம்?" என்று கேட்டேன்.
மானி : "அதை இவ்விடத்தில் விளங்கச் சொல்வதில் பிரயோஜனம் இல்லை."
செட்டி : "ஏன்? குற்றம் உம்முடையதுதானோ?"
மானி - "என்மேல் ஒரு குற்றமும் இல்லை. ஒருநாள் என்னைக் கடையில் வைத்துவிட்டு வெளியே போனார். அவருடைய மகனும் அன்று கடைக்கு வரவில்லை. கடையில் என்னைத் தவிர வேறு யாருமே கிடையாது. இப்படியிருக்கையில், சங்குத் தேவன் என்ற மறவன் வந்து, "செட்டியார் எங்கள் வீட்டிலேயிருக்கிறார். ஐந்து துலாம் சர்க்கரை வாங்கிக்கொண்டு வரச்சொன்னார். அவருடைய சொந்தச் செலவுக்கு வேண்டுமாம். தனது பற்றென்று எழுதச் சொன்னார்" என்றான்.
"அந்தச் சங்குத்தேவன் அந்தச் செட்டியாருடன், உயிருக்குயிரான சிநேகம் என்பதும் எனக்குத் தெரியும். நான் எப்படிக் கொடுக்காமலிருப்பது "செட்டியாரிடம் நேரிலே போய் கேட்டுக் கொண்டு செய்யலாமென்றால், கடையை யாரிடம் ஒப்புவித்து விட்டுப் போவது? மறவனிடம் ஒப்புவித்து விட்டு வரலாமென்றாலோ ஐந்து துலாம் சர்க்கரைக்கு நம்பக் கூடாத மனிதனிடம் கடையை விட்டு விட்டு வரலாமா? நான் சர்க்கரையைக் கொடுத்து விட்டேன்.
"செட்டியார் வந்தார். "சங்குத்தேவனுக்குச் சர்க்கரை கொடுத்தாயா? , என்று கேட்டார். ஆமென்றேன். "எவ்வளவு கொடுத்தாய்? என்றார். `ஐந்து துலா` மென்றேன். `யாருடைய உத்தரவின் மேலே கொடுத்தாய்" என்றார். `உங்களுடைய உத்தரவின் மேலே` என்றேன். `நான் எப்போது உன்னிடம் உத்தரவு கொடுத்தேன்` என்றார். `சங்குத்தேவனிடம் உத்தரவு கொடுத்ததாக அவன் சொன்னா` னென்றேன். `அவன் சொன்னால் உனக்குப் புத்தி எங்கே போச்சுது` என்றார்.
”எனக்குக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. என் புத்தியைப் பற்றிப் பேச்சில்லை. உம்முடைய சிநேகிதன்தானே அவன்? பொய் சொல்லமாட்டானென்று நினைத்துக் கொடுத்து விட்டேன். குற்றமாக இருந்தால் என்மேல் பற்று எழுதிவிடலாம்?” என்று சொன்னேன்.
”முருகச் செட்டிக்கு என் மேலே நெடுநாளாகக் கோபம். சிதம்பரத்திலிருந்து வந்திருக்கும் அவருடைய மைத்துனனை என்னுடைய ஸ்தானத்துக்கு வைத்து விட வேண்டுமென்று அவருக்கு வீட்டிலே போதனை ஏறிவிட்டது. என்னை வெளியே போகச் சொல்வதற்கு என்ன உபாயம் செய்யலாமென்று பல நாளாக யோசனை செய்து வந்தார். இதனால் நான் மரியாதையாகச் சொல்லிய வார்த்தையை அவர் அதிகப் பிரசங்கித்தனமென்று பாராட்டி "ஐயரே! நாளை முதல் வேறு கடையிலே வேலை பார்த்துக்கொள்ளும். இன்று மாலை வீட்டுக்குப் போகும்போது சம்பளம் கணக்குத் தீர்த்து வாங்கிக்கொண்டு போகலாம்? என்று சொன்னார். நான் சரியென்று விலகிவிட்டேன். இவ்வளவுதான் நடந்த சங்கதி.?
அப்போது மாணிக்கஞ் செட்டி கேட்கிறான்:-
"உம்முடைய பெயரென்ன?"
மானி : "என்னுடைய பெயர் மானி அய்யன்."
செட்டி :"உமது பிதாவின் பெயரென்ன?"
மானி : "அவர் பெயர் சீதாராமையர்."
செட்டி : "அவர் உயிரோடிருக்கிறாரா?"
மானி : "இல்லை; இறந்து போய்விட்டார்"
செட்டி : "வீட்டிலே தாயார் இருக்கிறார்களா?"
மானி: "ஆம்." செட்டி - "இன்னும் எத்தனை பேருண்டு, குடும்பத்திலே?"
மானி : "வேறு யாரும் கிடையாது. எனக்குக்கூடக் கலியாணம் ஆகவில்லை."
இதைக் கேட்டு செட்டி நகைத்தான்.
"ஏன் ஐயரே! கலியாணம் ஆகவில்லையென்று வருத்தந்தானோ? பார்ப்பாரப் பிள்ளைகளுக்கு வயிற்றுச் சோறு தேடு முன்பாகவே பெண்டாட்டி பிள்ளைகள் இல்லாவிட்டால் சுகப்படாது. குடும்பத்தை முதலாவது பெரிதாகச் செய்து வைத்துக் கொண்டால் பிறகு பிச்சை யெடுப்பது சுலபம். ஆள் கூட்டம் அதிகமாகத் திரட்டிக்கொண்டு மேளதாளத்துடன் பிச்சைக்குப் போகலாம்" என்றான்.
மானி :"செட்டியாரே! எனக்கு விவாகத்திற்குப் பணவுதவி செய்யும்படி உங்களிடம் யாசகத்துக்கு வரவில்லை. வேலை செய்தால் சம்பளமுண்டோ என்று கேட்க வந்தேன். இல்லை யென்றீர்கள். நான் திரும்பிப் போனேன். போனவனை மறுபடியும் அழைத்துப் புண்படுத்த வேண்டாம்."
செட்டி : "எத்தனை வயதிலே விவாகஞ் செய்து கொள்வீர்?"
மானி : "அதைப்பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை."
செட்டி : "உம்முடைய தாயார் யோசிக்கவில்லையா?"
மானி :"எனக்குத் தெரியாது."
செட்டி : "கலியாண விஷயத்திலே தாயார் வார்த்தை தானே கேட்பீர்?"
மானி : "நிச்சயமில்லை."
செட்டி - "பின், என்ன செய்வீர்?"
மானி - "நான் குடும்ப சம்ரக்ஷணைக்கு முயற்சி வேண்டி அலைகிறேன். தாங்கள் சம்பத்திலிருக்கிறீர்கள். உங்களுக்கு சந்தோஷமாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்க நேரமிருக்கிறது. என்னைப் பகவான் அந்த நிலையில் வைக்கவில்லை."
செட்டி : "ஐயரே! வீட்டுக்குப் போகவேண்டுமா? அவசரமா? இன்று போஜனச் செலவுகளுக்கு ஒன்றும் வேண்டாமோ?" என்றான்.
இதைக் கேட்டவுடன் மானிக்குக் கோபமுண்டாய்விட்டது.
மானி அய்யன் சொல்லுகிறான்: -
"செட்டியாரே, மீனாக்ஷியம்மையின் கிருபையால் நமது வீட்டிலே, இன்னும் அநேக மாதங்களுக்கு வேண்டிய உணவு சேர்த்திருக்கிறேன். என்னுடைய தாயார் பேருக்குக் கொஞ்சம் நிலமும் உண்டு. இவ்விடத்தில் நமது முயற்சி நிறைவேற வழியில்லா விட்டால் வேறிடத்துக்குப் போகலாமே, இங்கிருந்து வீண் வார்த்தை சொல்வது நியாயமில்லையென்ற கருத்தின்மேல் நான் அவசரப்பட்டேன், அதைத் தவிர வேறொன்றுமில்லை.
"இப்போது, தாங்கள் கேள்வி கேட்டு வரும் மாதிரியைப் பார்க்கும்போது, இன்னும் சற்று நேரம் இங்கிருந்து தங்களுக்குச் சில விஷயங்கள் சொல்லிவிட்டுப் போகலாமென்ற எண்ண முண்டாகிறது. நம்மூர் வியாபாரிகள் விஷயமாக, எனக்குள்ள சில கருத்துக்களைத் தங்களைப்போன்ற மனிதரிடம் சொல்லித் தீர்த்தாலொழிய என் மனம் ஆறுதலடைய மாட்டாது. வேலைக்குக் கேட்க வந்த இடத்திலே அதிகப் பேச்சு வைத்துக் கொள்ளக்கூடாதென்று நினைத்தேன். தாங்கள் தொளைத்துத் தொளைத்துக் கேட்பதைப் பார்த்தால், தங்களுக்கு இப்போது உல்லாச நேரம் போலே தோன்றுகிறது. ஆகையால் உங்களிடமே சொல்லலாமென்று தீர்மானம் செய்கிறேன்."
அதற்கு மாணிக்கஞ் செட்டி : "சொல்லும் ஐயரே, மனதுக்குள் வைத்துக் கொண்டு குமைய வேண்டாம். பணம் தேடி வைத்தவர்களைத் தேடத் திறமில்லாதவர் எப்படிக் கெல்லாம் சீர்திருத்த உத்தேசங் கொண்டிருக்கிறார்களென்பதைக் கண்டுபிடிப்பதிலே எனக்கும் ருசியுண்டு. சொல்லும், உம்முடைய கொள்கைகளைக் கேட்போம்" என்றான்.
மானி அய்யன் : "வடக்கு தேசத்திலிருந்து சில வியாபாரிகள் இங்கே அடிக்கடி வருகிறார்கள். அவர்களுடன் நான் கொஞ்சம் வழக்கப்பட்டிருக்கிறேன். அவர்களுக்குள்ள வியாபாரத் திறமையும் புத்தி நுட்பமும் நம்மூர் வியாபாரிகளிட-மில்லை. இது முதலாவது சொல்ல வேண்டிய விஷயம். இவ்விடத்து வியாபாரிகளிடம் இருக்கிற கருவத்துக்குத் தகுந்தபடி புத்திசாலித்தனமில்லை. இனி, இரண்டாவது விஷயம் சொல்லுகிறேன். க்ஷேமத்துடனும் செழிப்புடனும் ஊர் இருந்தாலொழிய வியாபாரம் செழிக்காது. வியாபாரத்துக்கு மகிமை வரவேண்டுமானால் ஊருக்கே ஒரு மகிமை வரவேண்டும். இந்த விஷயம் இதுவரை தங்களிடம் எவனும் சொல்லியிருக்க மாட்டான்."
மாணிக்கஞ் செட்டி : "எனக்கே தெரியும். இந்த ரகஸ்யம் யாரும் சொல்ல வேண்டியதில்லை. சரி, மேலே கதையை நடத்தும்."
மானி அய்யன் : "கதையில்லை, செட்டியாரே, காரியம். இனி மூன்றாவது விஷயம் யாதெனில் இந்த வியாபாரிகளுக்குக் குமாஸ்தாக்களிடம் சரியாக வேலை வாங்கத் தெரியவில்லை. ஏனென்றால், முதற் காரணம், சம்பளம் நேரே கொடுக்க மனம் வருவதில்லை. ஒரு மனிதனால் நாம் லாபமடைய விரும்பினால் அவனுக்கு வயிறு நிறையச் சோறு போட வேண்டும். வெளியிலிருந்து வரும் புத்திசாலியைக் காட்டிலும் குடும்பத்தைச் சேர்ந்த மூடனே விசேஷமென்று நினைக்கக்கூடாது. மூடனிடம் உன்னுடைய காரியத்தை ஒப்புவித்தால் அவன் அதைக் குட்டிச்சுவராக்கிப் போடுவான். தவிரவும், முகஸ்துதி செய்பவனையும், பொய் நடிப்புக் காட்டு -வோனையும், தலையிலே வைத்து, சாமர்த்திய முள்ளவனையும், யோக்கியனையும் கீழே போடக் கூடாது. ஒரு நாளில் இத்தனை நாழிகைதான் வேலையுண்டு என்ற கட்டுப்பாடிருக்கவேண்டும். அதிக நேரம் வேலை வாங்குவதும், நினைத்த பொழுதெல்லாம் ஆள்விட்டு அழைப்பதும் குற்றம். இன்னும் சொல்லவா?"
மாணிக்கஞ் செட்டி : "ஐயரே, கொஞ்சம் இலேசாக அடக்கும். குமாஸ்தாக்களிடமுள்ள குற்றத்தைச் சொன்னால், உமக்கு விஷயம் பூராவாகத் தெரியும். குமாஸ்தாக்களிடம் நாணயமில்லை. பணக்கார பிள்ளைகள் வெளியே ஒரு கடையில் சிறிய சம்பளம் வாங்கி வேலை பழகப் போவது கௌவரக் குறைவென்ற மூட எண்ணத்தால் கிடைப்பதில்லை. வருவோனெல்லாம் கோவணாண்டி; பணப் பொறுப்பையும் காரியப் பொறுப்பையும் அவர்களிடம் அதிகமாக ஒப்புவிக்க இடமில்லை. அவர்களுக்குக் குற்றேவல் செய்து தயவு சம்பாதிப்பதிலே தான் உற்சாக முண்டாகிறது. உழைப்பிலும் கருத்திலும் உற்சாகமில்லை. எப்படியிருந்தாலும், ஏழைக்கு ஏழைப் புத்திதானே ஏற்படுங்காணும்? நமது பந்துவாக இருந்தால் மூடனானாலும் அதிக வஞ்சனை பண்ணமாட்டானென்று நினைக்கலாம்."
மானி அய்யன் : "அதுதான் நினைக்கக் கூடாது. `உடன் பிறந்தார் சுற்றத்தா-ரென்றிருக்க வேண்டா; உடன் பிறந்தே கொல்லும் வியாதி` என்ற வசனம் கேட்டதில்லையோ?"
மாணிக்கஞ் செட்டி : "தெரியுங்காணும்! ஆகவே இரண்டும் கஷ்டமாகிறது. மடத்தாண்டி கையிலே பணத்தைக் கொடுப்பது புத்திசாலித்தனமா? ஊரான் கெடுத்துக் கெடுவதைக் காட்டிலும் நம்மவனால் கெடுவோமே!?
மானி : "செட்டியாரே, கெடவா வியாபாரம் பண்ணுகிறோம். ஜீவிக்க வியாபாரம் செய்கிறோம். ஓரிடத்திலே தக்க காரியஸ்தன் கிடைக்காவிட்டால் மற்றோரிடத்திலிருந்து தருவித்துக் கொள்ள வேண்டும். எந்தக் கணக்குக்கும் ஒரு தீர்வையுண்டு; எந்தச் சிக்கலுக்கும் அவிழ்ப்புண்டு."
இவ்வாறு மானி அய்யன் சொல்லியதைக் கேட்டு, மாணிக்கஞ் செட்டி சிறிது நேரம் யோசனை செய்யலானான்,
மாணிக்கஞ் செட்டி யோசிக்கிறான்:-
"பார்ப்பான் கெட்டிக்காரன். நாம் எடுத்திருக்கும் ஆலோசனைக்கு இவனை உதவியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் நமது நோக்கத்தை இவன் தெரிந்து கொள்ளக் கூடாது. தெய்வம் விட்டது வழி. ஒரு கை பார்ப்போம்."
இப்படி யோசித்து மாணிக்கஞ் செட்டி சொன்னான்:-
"ஐயரே, ஒரு மூன்று மாசத்துக்கு உம்மை ஒரு சோதனைக்காகக் கடையிலே அமர்த்திக் கொள்ளுகிறேன். மூன்று மாசத்துக் கப்பால் என் மனதுக்குப் பிடித்தால் வேலை உறுதிதான். பிடிக்காவிட்டால், விலகிக் கொள்ள வேண்டும். முதல் மூன்று மாசத்துக்குச் சம்பளம் கிடையாது. உம், சம்மதமா?"
பார்ப்பாரப் பிள்ளை தன் மனதுக்குள்ளேயே "அட லோபிப் பயலே" என்று வைது கொண்டான்; சொல்லுகிறான்:- "செட்டியாரே, மூன்று மாசம் வேலை பார்க்கிறேன். பிறகு திருப்தியானால் வேலை உறுதி, இல்லாவிட்டால் அவசியமில்லை. அது உங்களுடைய இஷ்டம்போலே. ஆனால் உழைக்கிற நாள் சம்பளம் கையிலே கொடுத்து விடவேண்டும். சம்மதமா?" என்றான்.
"என்ன ஐயரே, விறைப்பிலே கேட்கிறீரே?" என்றான் செட்டி.
"சாதாரணமாகத் தான் கேட்டேன்" என்றான் பார்ப்பான்.
செட்டி சொல்லுகிறான்: - ஐயரே, போய் ஒரு வாரங் கழித்துத் திரும்பி வாரும். அப்போது அவசியமானால் சொல்லுகிறேன்."
அதற்குப் பார்ப்பான்: "செட்டியாரே, அவசியமாக இருந்தால் தாங்கள் சொல்லியனுப்ப
வேண்டும். நானாக வர சௌகர்யப்படாது" என்றான். செட்டி கடகடவென்று நகைத்தான். பிறகு சொல்லுகிறான்: "ஐயரே, கொஞ்சம் இலேசாக அடக்கும். நமக்குப் பார்ப்பார் கிடைப்பது கஷ்டமில்லை காணும். உமக்குச் செட்டி கிடைப்பது கஷ்டம்" என்றான்.
"ஐயரே, போய் வாரும்" என்று செட்டி சொன்னான். இவன் சரியென்று வீட்டுக்கு வந்துவிட்டான்.
நாள் இரண்டாயின. மாணிக்கஞ் செட்டிக்கு ஒரு பெரிய சங்கடம் வந்து சேர்ந்தது. அவனுக்கு ஒரு மைத்துனன். அந்த மைத்துனன் பெயர் தட்டிக் கொண்டான் செட்டி. இவனை மாணிக்கஞ் செட்டி தனது காரியஸ்தனாகத் தஞ்சாவூரிலே வைத்திருந்தான். தஞ்சாவூரில் மாணிக்கஞ் செட்டிக்கு ஒரு கடையும் கொஞ்சம் கொடுக்கல் வாங்கலும் உண்டு.
தட்டிக் கொண்டான் செட்டி நஷ்டக் கணக்குக் காட்டுவதிலே புலி. ஒரே அடியாகப் பெரிய தொகையை அழுத்திக்கொண்டு கணக்குக் காட்டிவிட்டான். அந்த நஷ்டக் கணக்கு மாணிக்கஞ் செட்டிக்கு வந்தது. ஓலையை விரித்து வாசித்துப் பார்த்தான். வயிறு பகீரென்றது.
"கெடுத்தானே பாவி! கெடுத்துப் போட்டானே! இனி என்ன செய்யப் போகிறோம்" என்று மிகவும் துன்பப்பட்டான்.
ஆனாலும், ஒருவாறு மனதைத் தேற்றிக்கொண்டு மேலே நடக்க வேண்டிய காரியத்தைப் பார்ப்போமென்று சொல்லி, "இப்போது தஞ்சாவூருக்கு அனுப்ப ஒரு தகுதியான மனுஷன் வேண்டுமே. யாரை அனுப்புவோம்" என்று யோசித்தான்.
மானி அய்யருடைய ஞாபகம் வந்தது. "அவனைக் கூப்பிடுவோம்"? என்று தீர்மானம் செய்துகொண்டு ஒரு ஆள் அனுப்பினான். மானி அய்யன் வந்து சேர்ந்தான்.
வாரும், அய்யரே" என்றான் செட்டி.
"தங்களுடைய உத்தரவுக்குக் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று மானி அய்யன் வணக்கத்துடன் சொன்னான்.
"பார்ப்பான் கெட்டிக்காரன்" என்று செட்டி தன் மனதிலே நினைத்துக் கொண்டான்.
ரஸிக சிரோமணி என்னும் கழுதை சொல்லிற்று:
"மேற்படி மாணிக்கஞ் செட்டி பார்ப்பானை நகைத்தது போல் நீயும் என்னை இப்போது நகைக்கிறாய், பின்னிட்டு என்னை நீயே மெச்சுவாய்."
அதற்குக் குயில் சொல்லிற்று: -
"ரஸிக மாமா, உனக்குச் சங்கீதமும் வராது. கதை சொல்லவும் தெரியவில்லை" என்றது.
கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது. "எனக்கா வராது? எனக்கா? என்னையா சொல்லுகிறாய்? என்னைத்தானா?" என்றது.
"ஆம், ஆம், ஆம், ஆம்? என்று குயில் நான்கு தரம் சொல்லிற்று.
"உனக்கு இத்தனை மதமா?" என்றது கழுதை.
"அட, உண்மையைச் சொல்லக் கூடாதா?" என்றது குயில்.
"சொல்லக்கூடாது" என்றது கழுதை. "சொல்லலாம்? என்றது குயில்.
"நீ அந்த மரத்திலிருந்து கொஞ்சம் இறங்கிக் கீழே வா" என்றது கழுதை.
"நீ தான் தயவுசெய்து இங்கே கொம்பின்மேலே ஏறி வா" என்று சொல்லிக் குயில் நகைத்தது.
கழுதை மகா கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டது.
குயில்: "மாமா, மாமா, கோபித்துக் கொண்டு போகாதே. இங்கே வா. ஒரு பேச்சுக் கேள்" என்று கூப்பிட்டது.
கழுதை திரும்பி வந்தது.
குயில் கேட்கிறது : "அந்த மாணிக்கஞ் செட்டிக் கதையை எடுத்தாயே, அதை முழுதும் சொல்லவேண்டாமா?"
கழுதை: "உனக்குத் தெரியவேண்டிய அளவு சொல்லியாய் விட்டது. மிச்சம் உனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை" என்றது.
குயில் : "பாதிக் கதையிலே நிறுத்தினால் அடுத்த ஜன்மம் பேயாகப் பிறப்பாய். சங்கீதம் இதைவிட இன்னும் துர்லபமாகப் போய்விடும்" என்றது.
அப்போது கழுதை பயந்து போய், "பாதிக் கதையிலே நிறுத்தினால் பேய்ப் பிறவியா? உண்மைதானா?" என்று கேட்டது. கழுதைக்கு மறு ஜன்ம நம்பிக்கை மிகவும் தீவிரம்.
குயில் சொல்லிற்று : "ஆமாம். உண்மைதான். எங்கள் தாத்தா சொன்னார்."
குயிலுடைய தாத்தா சொன்னால் உண்மையாகத்தான் இருக்குமென்று கழுதைக்குச் சரியான நம்பிக்கை ஏற்பட்டது.
"அப்படியானால் கதை முழுதையும் சொல்லி விடலாமா?" என்று கழுதை கேட்டது.
"சொல்லு. அதற்கு நடுவிலே நான் ஒரு சின்னக் கதை சொல்லி முடித்துவிடுகிறேன்."
"உன் கதைக்குப் பெயரென்ன?" என் று கழுதை கேட்டது.
குயில் - "ரோஜாப் பூக்கதை?
"சொல், சொல்? என்று கழுதை துரிதப்படுத்திற்று.
குயில் சொல்லலாயிற்று.