மாரடிப் பாட்டு-1

ஐயாவே ஐயாவே
பாலு கொண்டு வந்தியளோ
பாதரவம் தீத்தியளோ
மோரு கொண்டு வந்தியளோ
மோட்ச கதி பெத்தியளோ
மூத்த மகன் கண்ணருகே
மோட்ச கதி பெத்தியளோ
இளைய மகன் கண்ணருகே
எமலோகம் சேர்ந்தியளோ
காலனுமே அழைச்சானோ உங்கள்
கணக்கெடுத்துப் பார்த்தானோ
எமன் அழைச்சானோ
ஏடெடுத்துப் பார்த்தானோ
மூத்த மகன் முடியிறக்க
மோட்ச கதி பெத்தியளோ
இளைய மகன் முடியிறக்க
எமலோகம் சேர்ந்தியளோ
அரையளவு தண்ணியிலே
அள்ளி வந்தார் நீர்மாலை
இடுப்பளவு தண்ணியிலே
எடுத்து வந்தார் நீர்மாலை
வருகுதில்ல நீர்மாலை
வைகுந்த வழிகாட்ட
போகுதில்ல நீர்மாலை
பூலோகம் எதித்தளிக்க
இடுகாடு தேரிறக்க
ஈண்ட பசு போதாதோ
மலையேறி மேஞ்சு வரும்
மயிலைப் பசு கோதானம்
கரையேறி மேஞ்சு வரும்
கருத்தப் பசு கோதானம்
வீதியிலே போற ரதம்
வீமனையே பெற்றெடுத்த
வெள்ளி ரதம் போகுதென்பார்.
வாழை கட்டிப் பந்தலிலே
வரிசை மக வந்து நிற்கா
வரிசை மக கையறஞ்சா
வந்த சனம் கையறையும்
சீலை கட்டிப் பந்தலிலே
செல்ல மக வந்து நிக்கா
செல்ல மக கையறஞ்சா
சேந்த சனம் கையறையும்
தடயம் விட்டு மாரடிக்க
தங்க மக வேணுமின்னு
பட்டுடுத்தி மாரடிக்க
பார மக வேணுமின்னு
கொப்புப் பூட்டி மாரடிக்க
பொண்ணடியும் வேணுமின்னு.
சேகரித்தவர் : S.M. கார்க்கி்
இடம்: சிவகிரி,நெல்லை.
----------