மாரடிப் பாட்டு-2 (1)

'மாரடித்த கூலி மடிமேலே' என்பது பழமொழி. (சொலவடை) இறப்பு என்பது இயற்கையின் நியதி என்றாலும் இறந்தோரை எண்ணி, இருப்போர் அழுது புலம்புகின்றனர்.
நரைத்துத் திரைத்து மூப்பெய்தித் தளர்ந்த காலத்தில் வரும் சாவு மகிழ்ச்சியையே அளிக்கிறது. உரிய காலத்தில் வந்த சாவை எண்ணி யாரும் ஒப்பாரி வைப்பதில்லை.
பிணத்தைக் குளிப்பாட்டி அலங்கரித்து சாய்த்து வைத்து பெண்கள் சுற்றியும் நின்று, கூந்தலை உலைத்து விட்டுக் கொண்டு, இறந்தவரது சீர்சிறப்புகளையும், நோய்வாய்ப்பட்டதையும், பிள்ளைகள் பரிவுடன் செய்த உபசரிப்புகளையும், மருத்துவத்தையும்-முடிவில் வந்த இறப்பையும்-பின்னர் நடைபெறும் இறுதிச் சடங்குகளையும் விவரித்துக் கைகளைத் தம் மார்பில் அடித்துப் பாடிக்கொண்டு சுற்றி வருவர். அதில் சோகமயமானதோர் உருக்கமும் அமைதியும் புலப்படும். கேலியும் கிண்டலும் கூட விரவி வருவதுண்டு. கிழடு, கெட்டைகள் இறந்து அங்கு மாரடித்தல் நடைபெறும்போது பார்த்தால் அது ஓர் இழவு வீடு போலத் தோன்றாது. மகிழ்ச்சிகரமான ஒரு மண விழாவைப் போலவே தோன்றும்.
மாரடித்து முடிந்த பின் கடலை, பயிறு, மாவு, பொரி, ஏதாவது தவறாமல் பரிமாறப்படும். இதையே மேற்கண்ட பழமொழி (சொலவடை) சுட்டிக்காட்டுகிறது.
(குறிப்பு : S.S. போத்தையா)
(* அளபெடை கொடுத்து நீட்டி இசைப்பர்.)
*ஆ அ தி இ கயி யிலாசத்தில்
ஆ அ தி மூலம் தன்னிடத்தில்
பாசுபதம் தான் கொடுத்தார்
பரம சிவனை நோக்கி
மக்களும் இல்லையிண்ணு
மணம் வாடித் தவசிருந்தார்
பிள்ளைகளும் இல்லையிண்ணு
புழுங்கித் தவசிருந்தார்
சித்திர புத்திரரே-நல்ல
சிவனார் பெருங்கணக்கே
மானிடர் கணக்கை யெல்லாம்
வாசித்துச் சொல்லுமின்னம்
மண்டலத்தில் போய் பிறக்கும்
மானிடரைத் திட்டம் செய்தார்
மானிட ஜென்மம் வேண்டும்-இந்த
மண்டலத்து ஆசை வேண்டும்
கண்ணான கண்ணரையா
காசி விசுவநாதையா
வந்து பிறந்தாரையா
வயசு பத்து நூறு ஆக
மக்கள் பதினாறு பெத்து
மகிழ்ச்சியுடனாண்டிருந்தார்
பிள்ளை பதினாறு பெத்து
புகழுடனே ஆண்டிருந்தார்
ஆண்டு வரும் நாளையிலே-ஒரு
அதிசயமும் கண்டாராம்
தீர்த்த மாடப் போறாமிண்ணு
தெரிசனமும் கண்டாராம்
ராமேஸ்வரம் தீர்த்தமாடி
ராமநாதர் மோட்சம்தேடி
குற்றாலம் தீர்த்தமாடி
குழல்வாய்மொழி அடிபணிந்து
சங்குமுகம் தீர்த்தமாடி
சாலாட்சம்மா அடிபணிந்து
காசியிலே தீர்த்தமாடி
காசி நாதர் மோட்சம்தேடி
இத்தனையும் தீர்த்தமாடி
இளைத்து வந்து உட்கார்ந்தார்
அத்தனையும் தீர்த்தமாடி
அலுத்து வந்து உட்கார்ந்தார்
காலோ வலிக்குதிண்ணு
கட்டிலிலே போய்ப்படுத்தார்
மேலோ வலிக்குதிண்ணு
மெத்தையிலே போய்ப்படுத்தார்
தலையோ வலிக்குதிண்ணு
தாவாரம் பள்ளிகொண்டார்
மண்டை யடிக்குதிண்ணு
மக்களெல்லாம் சூழ்ந்திருந்தார்
வரிசை மகன் பார்த்திருந்து
வைத்தியர்க்கு ஆளும் விட்டார்
ஏறினார் காரிலேயே
இறங்கினார் மதுரையிலே.
மதுரைக்கடை வீதியிலே
மன்னர் மகன் பண்டுதராம்
ஆனைக்கல்லு வீதியிலே
அதிகாரி பண்டுதராம்
ஓடி வரும் மோட்டாரிலே
உட்கார்ந்தான் வைத்தியரும்
அஞ்சி மணிக் காரேறி
அவசரமாய் வாராராம்
மருந்துப் பையை கையிலெடுத்து
மன்னர் மகன் வந்து சேர்ந்தான்
வாருமையா வைத்தியரே
வலது கையைப் பாருமையா
இருமையா வைத்தியரே
இடது கையைப் பாருமையா
கையைப் பிடித்தாரோ
கைத்தாது பார்த்தாரே
மறு வார்த்தை சொல்லாமலே
மவுனமாக இருந்தாரே
வரிசை மகன் எந்திரிச்சார்
வைத்தியர் முகம் பார்த்தார்
என்னையா வைத்தியரே
ஏதுமே பேசவில்லை
என்ன சொல்வார் வைத்தியரும்
இஞ்சி தட்டி வாருமென்றார்
பத்து வகை மாத்திரையைப்
பார்த்துரைத்தார் பண்டுதரும்
தாழம்பூக் கெண்டியிலே
தண்ணீரோ கொண்டு வந்தார்
தண்ணீர் இறங்கவில்லை
தாமரைப்பூ மேனியிலே
மாதாளம்பூக் கெண்டியிலே
மருந்து வகை கொண்டுவந்தார்
மருந்தோ இறங்க வில்லை
மல்லிகைப் பூ மேனியிலே
பஞ்சு கொண்டு பாலொழுக்கி
பட்டு கொண்டு வாய் துடைத்து
என்ன வேணுமின்னு சொல்லி
ஈஸ்வரனார் கேட்டாராம்
பொன்னும் வேண்டாம்
பொருளும் வேண்டாம்
பூலோகம் வேணுமின்னார்
காசு வேண்டாம், பணமும் வேண்டாம்
கயிலாசம் வேணுமின்னார்
அப்போ மகானிவர்க்கு
ஆயுள் முடிந்ததுவே
செப்பியதோர் காலதூதர்
சீக்கிரமாய்த் தான் வளைஞ்சார்
காலன் கொண்டு போறானே
கைலாசம் தீர்த்தமாட
எமன் கொண்டு போறானே
எமலோகம் தீர்த்தமாட
முத்துப் போல் கண்ணீரை-மக்கள்
முகமெல்லாம் சோர விட்டார்
பவளம் போல் கண்ணீரை-மக்கள்
பக்கமெல்லாம் சோர விட்டார்
குளிப்பாட்டி கோடி கட்டி,
கொண்டு வைத்தார் குறிச்சியிலே
முன்னூறு மூங்கியிலே
முதல் மூங்கி கொண்டு வந்தார்
நானூறு மூங்கியிலே
நல்மூங்கி கொண்டு வந்தார்.
மூங்கில் பாய் தானெடுத்து
முத்தமெல்லாம் பந்தலிட்டார்