மாரியம்மன் பாட்டு -1

தோட்டம் துறந்தல்லோ-மாரிக்கு
தொண்ணுறு லட்சம் பூவெடுத்து,
வாடித் துறந்தல்லோ-ஆயிரம் கண்ணாளுக்கு
வாடா மலரெடுத்து,
கையாலே பூ வெடுத்தா-மாரிக்கு
கம்பழுகிப் போகுமிண்ணு
விரலாலே பூ வெடுத்தா
வெம்பிடு மென்று சொல்லி
தங்கத் துரட்டி கொண்டு-மாரிக்கு
தாங்கி மலரெடுத்தார்
வெள்ளித் துரட்டி கொண்டு
வித மலர்கள் தானெடுத்தார்
எட்டாத பூ மலரை-மாரிக்கு
ஏணி வைத்துப் பூ வெடுத்தார்
பத்தாத பூ மலரைப் பரண்
வைத்துப் பூ வெடுத்தார்
அழகு சுள கெடுங்க-மாரிக்கு
அமுது படி தானெடுங்க
வீசும் கள கெடுங்க-மாரிக்கு
வித்து வகை தானெடுங்க
உப்பாம் புளி முளகா-ஆயிரம் கண்ணாளுக்கு
ஒரு கரண்டி எண்ணெய் அமுது
கடலைச் சிறு பயறு
காராமணி மொச்சையம்மா
அவரை, துவரை முதல்-ஆயிரங் கண்ணாளுக்கு
ஆமணக்கங் கொட்டை முதல்
காடைக் கண்ணி பருத்தி விதை-மாரிக்கு
பாங்கான வித்து வகை
இட்டுச் செய்தவர்க்கு
எம காளி துணை செய்வாள்
மக்களைப் பெற்றவர்கள்
மாரி கதை தானறிவார்
அறிந்தோர் அறிவார்கள்
அம்மன் திருக் கதையை
தெரிந்தோர்க்குத் தெரியுமம்மா!
- ஆயிரங்கண்ணா
தேவி திருக் கதையை
ஒரு கண்ணு ரெண்டு கண்ணு
உலகத்து மானிடர்க்கு
ஆயிரம் கண்ணுடையா
அழகில் சிறந்த கண்ணு
பதினாயிரம் கண்ணுடையா
பாதகத்தி நீலியவ
இருசி வயத்திலேயும்,
எமகாளி பிறந்திடுவாள்
மலடி வயத்திலேயும்
மாகாளி பிறந்திடுவாள்-மாரிக்கு
ஆறு வண்டி நூறு சட்டம்
அசையா மணித் தேருகளாம்.
தேரை நடத்தியல்லோ-மாரி
சித்தரங்கள் பாடி வாரா-மாரிக்கு
பூட்டுன தேரிருக்கப்
புறப்பட்டாள் வீதியிலே
நாட்டுன தேரிருக்க-ஆயிரம் கண்ணா
நடந்தானே வீதியிலே
வீதி மறித்தாளம்மா-மாரி
வினை தீர்க்கும் சக்தியல்லோ!
பிறந்தா மலையாளம்-அவ
போய் வளர்ந்தா-ஆள்பாடி
இருந்தாள் இருக்கங்குடி-மாரி
இனி இருந்தா லாடபுரம்
சமைந்தால் சமயபுரம், -மாரி
சாதித்தாள் கண்ணாபுரம்
கண்ணா புரத்தில்-மாரி
காக்கும் பிரதானி-மாரிக்கு
உடுக்குப் பிறந்ததம்மா!
உத்திராட்சப் பூமியிலே
பம்பை பிறந்ததம்மா-மாரிக்கு
பளிங்கு மா மண்டபத்தில்
வேம்பு பிறந்ததம்மா-மாரிக்கு
விசய நகர்ப் பட்டணத்தில்
ஆடை பிறந்ததம்மா-மாரிக்கு
அயோத்திமா நகர்தனிலே
சிலம்பு பிறந்ததம்மா-மாரிக்கு
பிச்சாண்டி மேடையிலே
சாட்டை பிறந்ததம்மா-மாரிக்கு
சதுர கிரி பூமியிலே
சாட்டை சலசலங்க ------
சதுர மணி ஓசையிட
கச்சை கலகலங்க
கருங்கச்சை குஞ்சம் விட
பதினெட்டுத் தாளம் வர
பத்தினியா சித்துடுக்கு
இருபத்தொரு தாளம் வர
எமகாளி சித்துடுக்கு
சித்துடுக்கைக் கைப்பிடித்து
சிவ பூணணிந்தவளாம்.
(மாரி ஸ்தலங்களாக ஆறு ஊர்கள் சொல்லப்படுகின்றன.)
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: சூரங்குடி, விளாத்திகுளம் தாலுகா, நெல்லை மாவட்டம்.
----------