மாரியம்மன் பாட்டு -1

bookmark

தோட்டம் துறந்தல்லோ-மாரிக்கு 
தொண்ணுறு லட்சம் பூவெடுத்து, 
வாடித் துறந்தல்லோ-ஆயிரம் கண்ணாளுக்கு 
வாடா மலரெடுத்து, 
கையாலே பூ வெடுத்தா-மாரிக்கு 
கம்பழுகிப் போகுமிண்ணு 
விரலாலே பூ வெடுத்தா 
வெம்பிடு மென்று சொல்லி 
தங்கத் துரட்டி கொண்டு-மாரிக்கு 
தாங்கி மலரெடுத்தார் 
வெள்ளித் துரட்டி கொண்டு 
வித மலர்கள் தானெடுத்தார் 
எட்டாத பூ மலரை-மாரிக்கு 
ஏணி வைத்துப் பூ வெடுத்தார் 
பத்தாத பூ மலரைப் பரண் 
வைத்துப் பூ வெடுத்தார்

அழகு சுள கெடுங்க-மாரிக்கு 
அமுது படி தானெடுங்க 
வீசும் கள கெடுங்க-மாரிக்கு 
வித்து வகை தானெடுங்க 
உப்பாம் புளி முளகா-ஆயிரம் கண்ணாளுக்கு 
ஒரு கரண்டி எண்ணெய் அமுது 
கடலைச் சிறு பயறு 
காராமணி மொச்சையம்மா 
அவரை, துவரை முதல்-ஆயிரங் கண்ணாளுக்கு 

ஆமணக்கங் கொட்டை முதல் 
காடைக் கண்ணி பருத்தி விதை-மாரிக்கு 
பாங்கான வித்து வகை 
இட்டுச் செய்தவர்க்கு 
எம காளி துணை செய்வாள் 
மக்களைப் பெற்றவர்கள் 
மாரி கதை தானறிவார் 
அறிந்தோர் அறிவார்கள் 
அம்மன் திருக் கதையை 
தெரிந்தோர்க்குத் தெரியுமம்மா!
- ஆயிரங்கண்ணா
தேவி திருக் கதையை 
ஒரு கண்ணு ரெண்டு கண்ணு 
உலகத்து மானிடர்க்கு
ஆயிரம் கண்ணுடையா 
அழகில் சிறந்த கண்ணு 
பதினாயிரம் கண்ணுடையா 
பாதகத்தி நீலியவ 
இருசி வயத்திலேயும், 
எமகாளி பிறந்திடுவாள் 
மலடி வயத்திலேயும் 
மாகாளி பிறந்திடுவாள்-மாரிக்கு 
ஆறு வண்டி நூறு சட்டம் 
அசையா மணித் தேருகளாம். 
தேரை நடத்தியல்லோ-மாரி 
சித்தரங்கள் பாடி வாரா-மாரிக்கு 
பூட்டுன தேரிருக்கப் 
புறப்பட்டாள் வீதியிலே 
நாட்டுன தேரிருக்க-ஆயிரம் கண்ணா 

நடந்தானே வீதியிலே 
வீதி மறித்தாளம்மா-மாரி 
வினை தீர்க்கும் சக்தியல்லோ!
பிறந்தா மலையாளம்-அவ 
போய் வளர்ந்தா-ஆள்பாடி 
இருந்தாள் இருக்கங்குடி-மாரி 
இனி இருந்தா லாடபுரம்
சமைந்தால் சமயபுரம், -மாரி 
சாதித்தாள் கண்ணாபுரம்

கண்ணா புரத்தில்-மாரி 
காக்கும் பிரதானி-மாரிக்கு 
உடுக்குப் பிறந்ததம்மா! 
உத்திராட்சப் பூமியிலே 
பம்பை பிறந்ததம்மா-மாரிக்கு 
பளிங்கு மா மண்டபத்தில் 
வேம்பு பிறந்ததம்மா-மாரிக்கு 
விசய நகர்ப் பட்டணத்தில் 
ஆடை பிறந்ததம்மா-மாரிக்கு 
அயோத்திமா நகர்தனிலே 
சிலம்பு பிறந்ததம்மா-மாரிக்கு 
பிச்சாண்டி மேடையிலே 
சாட்டை பிறந்ததம்மா-மாரிக்கு 
சதுர கிரி பூமியிலே 
சாட்டை சலசலங்க ------ 
சதுர மணி ஓசையிட 
கச்சை கலகலங்க 
கருங்கச்சை குஞ்சம் விட 
பதினெட்டுத் தாளம் வர 
பத்தினியா சித்துடுக்கு 
இருபத்தொரு தாளம் வர 
எமகாளி சித்துடுக்கு 
சித்துடுக்கைக் கைப்பிடித்து 
சிவ பூணணிந்தவளாம்.

(மாரி ஸ்தலங்களாக ஆறு ஊர்கள் சொல்லப்படுகின்றன.)
சேகரித்தவர்: S.S. போத்தையா 
இடம்: சூரங்குடி, விளாத்திகுளம் தாலுகா, நெல்லை மாவட்டம்.
----------