முகக் கோடி

bookmark

கணவன் இறந்த பின் மனைவிக்கு, அவளுடைய சகோதரர் கோடிப்புடவை எடுத்து முகத்தில் போடுவார்கள். இப்புடவையை முகக்கோடி என்று அழைப்பர். இச்சடங்கு வைணவப் பிரிவினரில் பத்தாம் நாளும், வேறு பிரிவினரில் பதினாறாம் நாளும் நடைபெறும். சில சாதியினரில், பிணத்தை அடக்கம் செய்து விட்டு வீடு திரும்பியவுடனே நிகழும். நல்ல காரியங்களுக்கு பட்டு எடுத்துத் தங்கைக்கு அளிக்கும் அண்ணன் கையாலே முகக் கோடி வாங்கும் நிலை ஏற்பட்டது குறித்து தங்கை வருந்துகிறாள். நல்ல காரியங்களுக்கு கடை தேடி நல்ல பட்டு எடுத்த அண்ணன்,இக்காரியத்துக்கும் ஊர் ஊராக அலைந்து நல்லப் பட்டு எடுத்தாரோ என்று சொல்லி அழுகிறாள். தங்கையின் சொல் கேட்டு அண்ணன் அழுகிறான்.

சாமி பட்டு எடுத்தாலே
சாயம் குறையுமிண்ணும்
அரியூரான் பட்டெடுத்தால்
அழகு குறையு மிண்ணும் 
சேலத்தான் பட்டெடுத்தால்
சீருக் குறையு மிண்ணும்
மொரப்பூரான் பட்டெடுத்தால்
மோப்புக் குறையுமிண்ணும்
அல்லி தறி மூட்டி
செல்லிக்குப் பட்டுடுத்தி-நான்
மோவாத பொண்ணா-அண்ணன்
முகத்துமேலே போட்டழுதான்

வட்டார வழக்கு : மோப்பு- ; அல்லி-பெண் ; தறிமூட்டி-தறியில் நெய்து.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்

இடம்: அரூர்,சேலம் மாவட்டம்.
-----------