முத்திரை பேதம்

நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்யக்
கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே. 1
1893
துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே. 2
1894
சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்
ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை
ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே. 3
1895
தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்
ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே. 4
1896
வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே. 5
1897
யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோகமுத் திரையே. 6
1898
யோகிஎண் சித்தி அருளொலி வாதனை
போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே. 7
1899
துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம்
அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே. 8
1900
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கும் முத்திரை கண்ட சமயமே. 9
1901
தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும்
பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்
மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே. 10