முருகவேள் சிவபூசை செய்தல்

அங்ஙனம் சென்ற வானவர் தலைவனைப் பெருமான் "வருக" என்று அழைத்து, "இங்கு நாம் சிவபெருமான் திருவடிகளை அருச்சனை செய்து வணங்க விரும்பு கின்றோம். அதற்கு வேண்டும் உபகரணங்களைச் சேகரித்துத் தருக" என்றுரைத்தார். அவ்வாறே இந்திரன் சேகரித்துத் தந்த பொருள்களால் இருவரும் அறியாத் திருவடிகளை முருகவேள் பூசனை செய்ய, ஈசன் உமையம்மை யோடு இடபவாகனத்தின் மேல் எழுந்தருளினார். அக் காட்சியைக் கண்டு உச்சி மேற் கரங் குவித்துத் தொழுது போற்றினார், முருகப் பெருமான், மைந்தனது வழிபாட்டின் தன்மையை அறிந்து மகிழ்ந்த ஈசன் நொடிப் பொழுதில் உலகமெல்லாம் அழிக்க வல்ல பாசுபதம் என்னும் அஸ்திரத்தை அளித்தருளி, " இது நம்மிடம் தோன்றிய சிறந்த படை மாயனும் பிரமனும் இதனைப் பெற்றவரல்லர். இப் பெரும்படையை யாரால் தாக்க இயலும்? உயிர்களை எல்லாம் இது நாசம் செய்யும். கொடிய சூரனது வலிய படைகளைத் தொலைத்தற்காக இதனைத் தருகின்றோம்; பெற்றுக்கொள், குமரா" என்று கூறி மறைந்தருளினார்.
நாடும் காடும் கடந்த திருச்செந்தூர் சேர்தல்
பின்பு, மண்ணியாற்றின் தென்கரையில் அமைந்த திருச்சேய்ஞலுரை விட்டு, காவிரியாற்றைக் கடந்து திருவிடைமருதுர் என்னும் திருப்பதியையும் திருமயிலாடு-துறையையும், திருப்பறியலூரையும் மற்றும் சிவபெருமான் அமர்ந்தருளும் பழம்பதிகளையும் கண்டு சென்றார், குமர வேள்; வளம் பெருகும் அழகிய இலஞ்சியங் கானம் என்னும் பழம் பதியில் கோயில் கொண்ட ஈசன் திருவடிகளை வணங்கிப் பின்னர்த் திரும்கள் பெருந்தவம் புரிந்து, முற்றிய செல்வமும் முடிவற்ற மங்க்லப் பேறும் பெற்ற திருவாரூரைக் கண்டார்.
இவ்வாறு, தெற்கு நோக்கிச் செல்லும்பொழுது பாலைவனம் ஒன்று குறுக்கிட்டது. அங்கே, கள்ளி மரங்கள் கரிந்தன. பாலை மரங்கள் பட்டன. முள்ளிச்செடிகள் எரிந்தன. குரவமரமும், காரகிலும் கொள்ளிக்கட்டையாயின. இங்ஙனம் எங்கும் தீப்பட்டாற் போன்றிருந்தது, அப் பாலை, அங்கு முருகவேள் சேனையோடு எழுந் தருளியபோது அக் கொடிய காடு பெருமழையாற் குளிர்ந்த அழகிய குறிஞ்சி நிலம் போலாயிற்று. இத்தகைய பாலைவனத்தைக் கடந்து வேற்படை தாங்கிய குமரவேள்,செங்குன்றுார் என்னும் சிவ பதியை வணங்கி, மணிகளையும் வயிரங்களையும் முத்து களையும் மற்றப் பொருள்களையும் அலைகளால் அள்ளி எறியும் திருச்சீர் அலைவாய் என்னும் செந்திமாநகரைச் சேர்ந்தார்.
முருகன் அசுரர் திறம் கேட்டல்
அங்கே அமர்ந்து, இந்திரனை நோக்கி, "கொடுங்கோல் செலுத்தும் சூரன் முதலிய அசுரர்கள் பிறந்தவாறும், அவர் தவம் புரிந்தவாறும், வரம் பெற்றவாறும், அரசு செய்தவாறும், இன்னும் அவர் இயற்றிய மாயமும், அடைந்த வெற்றியும், அவர்தம் வலிமையும் மேன்மையும், உனக்கு அவர் இழைத்த துன்பமும் ஒன்றுவிடாமற் சொல்லுக" எனப் பணித்தார், முருகவேள்.
வியாழன் மறுமொழி கூறல்
அந் நிலையில் இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்கி, வாக்கில் வல்லவராகிய வியாழன் எழுந்து, ”எவர்க்கும் முதல்வராகிய எம்பெருமானே! நீர் எல்லாப் பொருளும் அறிவீர்! எல்லா உயிர்களிலும் நிறைந் திருக்கின்றீர்! எங்கள் துன்பத்தைத் துடைக்கத் திருவுளங்கொண்டு குழந்தை வடிவம் கொண்டீர் உமது செய்கையை யாவரே உணர வல்லார்? ஐயனே! நீர் அசுரரது தன்மையை வினவியது அதனை அறிந்துகொள்ளும் பொருட் டன்று. அடிமைகளாகிய எமது துன்பத்தைக் களைந்து சிறந்த இன்பம் தரும் திருவருளாலே யாகும். ஆதலால், அசுரர் தன்மை களையெல்லாம் அடியேன் அறிந்தவரையில் சொல்கின்றேன்" என்று குமாரவேளை நோக்கிக் கூறலுற்றார்.
மாயையின் வரலாறு
மேன்மை யுற்ற காசிபனுடைய புதல்வர்களாகத் தோன்றினர், அறுபத்தாறு கோடி அசுரர்கள். அன்னவர்க்கு அரசனாய் அமைந்தான், அசுரேந்திரன். அவன் மனமொத்த மங்கலகேசி யென்னும் அரக்கியை மணந்து, சுரசையென்ற புதல்வியைப் பெற்றான். அம் மகள் தூயவளாய் வளர்ந்து வந்தாள்; அப்போது அசுரர் குலகுருவாகிய சுக்கிரன் அம் மங்கைக்குக் கொடிய மாயா வித்தைகள் அத்தனையும் கற்பித்தார்; அவற்றில் அவள் அடைந்த திறமையைக் கண்டு மாயை என்று பெயரிட்டார்; அம் மாயையால் எதிர் காலத்தில் அசுரர்கள் எய்தநின்ற பெருமையூெல்லாம் எண்ணிப் பார்த்தார். ஒப்பற்றவள் ஆகிய மாயை, திருமகளும், ரதியும், திலோத்தமையும், மோகினியும் ஒரு வடிவம் கொண்டாற் போன்ற அழகிய உருவம் பூண்டு சென்றாள்.
மாயை காசிப முனிவரை மயக்குதல்
சென்றவள், காசிப முனிவருடைய தவச்சாலையின் அருகே நறுமணங்கமழும் அழகிய செந்தாமரைப் பொய்கையும் குளமும், சோலையும், மாணிக்க மலையும் மஞ்சமும், மண்டபமும் விரைவில் உண்டாக்கினாள். ஆண்டவன் திருவடியை நினைந்து ஐம்பொறிகளையும் அறிவினால் அடக்கித் தன்னந் தனியராய்த் தவம் புரிந்திருந்த காசிட முனிவர் அவற்றைக் கண்டு அதிசயம் அடைந்தார்; உடனே, தம் உள்ளத்தை ஒருமைப்படுத்தி முன் போலவே நற்றவம் புரியத் தலைப்பட்டார்.
அவ் வேளையில் அம் மாயை என்னும் மங்கை மாணிக்க மலையின்மீது தனியளாய் இலங்கித் தோன்றினாள். அம் மங்கையைக் கண்ணுற்றார், காசிபர்; விண்ணுலகத்தில் விளங்கும் கற்பகவல்லி தவம் செய்து பெற்ற பூங்கொடிதான் ஈங்கு வந்ததோ என்று வியந்து நின்றார்; தனியளாக நின்ற தையலை நோக்கி, "மாதே! உனக்கு என்ன் வேண்டும் என்றாலும் இன்னே தருவேன்; மைந்தரை விரும்பினும் மகிழ்ந்து அளிப்பேன்; அன்ன வரை ஒப்பற்ற நிலையில் வைப்பேன்" என்றார். முனிவன் உரைத்த மொழி கேட்டு மாயை புன்னகை புரிந்தாள்; "நான் தனியள் என்று கருதியோ இவ்வாறு உரைத்தீர்! இது போன்ற பேச்சு இனி வேண்டா. இது தவமுடையோர்க்குத் தகுமோ? நான் முன்னமே எண்ணி வந்த இடத்திற்குச் செல்கின்றேன். நீர் இங்குத் தவம் செய்துகொண்டு இரும்” என்று சொல்லி, கங்கை யாற்றின் திசையை நோக்கிக் கடிது செல்வாள்போல நடந்தாள். முனிவரும் அவளைப் பின்தொடர்ந்தார். மங்கை அருவம் எய்தி மாயையால் மறைந்து நின்றாள்.
முனிவர் அங்குமிங்கும் நோக்கி மங்கையைக் காணாது கவலையுற்றுக் கரைந்தார். "அந்தோ! முன்னே ஆசை கொடுத்திக் மன்மதனை ஏவி மையல் விளைத்தீர்! என் மெய்யறிவை யெல்லாம் சிதைத்தீர்! இன்னும் செய்ய வேண்டுவது ஒன்றுண்டோ சொல்வீர்” என்று பன்னிப் பன்னி இடர்க்கடலில் மூழ்கிச் சோர்ந்தார், முனிவர். அந் நிலையில் எவ் வினைக்கும் முன்னவளாகிய மாயை அவர் கண்ணெதிரே தோன்றினாள் கருத்தழிந்து கம்பம்போல் நின்ற காசிய முனிவர் மாயையைக் கண் களிப்பக் கண்டார்; மகிழ்ச்சி கொண்டார்; "உய்ந்தேன்! உய்ந்தேன்! என்றார்; மின்னொளியைக் கண்டு மலரும் தாழ்ை மலர் போல் புன்னகை பூத்தார்; மாயையோடு கொஞ்சிக் குலாவினார். அப்போது மாயையினிடம் சூரபன்மன் என்னும் வீரன் தோன்றினான். அவனுக்குப்பின் ஆயிரம் தலையுடைய சிங்கமுகனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அசமுகியும் பிறந்தார்கள்.
சூரன் முதலிய மைந்தருக்குக் காசிபன் அறிவுரை பகர்தல்
காசிய முனிவர் அவரை நோக்கி, "என் வீர மைந்தர்காள்! உமக்கு உறுதி பயக்கும் செய்தி யொன்று சொல்கின்றேன். நீவிர் மூவரும தவநெறியிலே நிற்றல் வேண்டும். அதற்குரிய முறையை மெய்யாக உணர்த்துவேன்; கேட்பீராக" என்று கூறலுற்றார்: "அறம் என்னும் பொருள் ஒன்றுண்டு. அஃது அழிவற்ற இம்மை மறுமை இன்பங்களை எளிதாக அளிக்கும். அருமையாகப் பெறுதற்குரியது அவ் வறம் ஒருமைப்பட்ட மனம் உடையவரா லன்றிப் பிறரால் அஃது அறிய வொண்ணாது. அறத்தைப் போற்றினால் அன்பு உண்டாகும்; அருள் என்னும் பேறும் வந்தடையும். அவ் விரண்டும் வந்தவுடன் தவம் என்னும் சிறப்புக் கைகூடும். அதன் பின்பு ஞானம் உண்டாகும். ஞானம் பெற்ற உயிர் சிவனோடு இரண்டறக் கலந்துவிடும். ஆதலால், மைந்தர்கள் அறம் செய்யுங்கள்; பாவத்தை அகற்றுங்கள்;சிவபெருமானைக் கருதிச் சிறந்த தவம் புரியுங்கள். அதுவன்றி, இங்குச் செய்யத் தக்க செயல் வேறொன் றில்லை. உடம்பை ஒறுத்துத் தவும் செய்பவர் உலகமெல்லாம் வியக்க வாழ்வர்; தம்மை அடைந்தவரை ஆதரிப்பர்; பகைவரை அழிப்பர்; விரும்பிய பொருளெல்லாம் பெறுவர்; என்றும் அழிவின்றி இருப்பர். இவ் வுண்மை உங்கள் மனத்தில் நன்கு பதியும் வண்ணம் ஒரு சரித்திரம் சொல்கின்றேன், கேளுங்கள்.
முனிவர் மார்க்கண்டன் சரித்திரம் உரைத்தல்
"மெய்யான வேதங்களை உணர்ந்தவர் மிருகண்டு முனிவர். அவர் காசியை அடைந்து திருக்கோயிலின் அருகே சிவாகம முறைப்படி நீலகண்டனாகிய சிவபெருமானை முனிவர் வழிபட்டு வந்தார். இந் நிலவுலகத்தில் உள்ள துன்பம் நீங்கவும், நல்லறங்கள் செழித்து ஓங்கவும், மாதவ முனிவர்கள் சிறந்து மல்கவும், வைதிக சைவம் வாழவும், கண்ணற்ற காலன் மாளவும், ஆதிமுதல்வனாகிய சிவபெருமான் திருவருளால், அம் முனிவரின் மனையாள் கருப்பம் உற்றாள். நஞ்சுடைய நாகத்தின் வாய்ப் பட்டு நலிவுற்ற சந்திரன், விடுபட்டு அமிர்தத்தைத் தருவதுபோல் அழகும் பொறுமையும் வாய்ந்த அம் மாது கருப்ப வேதனையால் வருந்தி, வேத மணம் கமழும் செவ்விய வாயினையுடைய குழந்தையைப் பெற்றாள்.
"மைந்தன் பிறந்தான் என்று கேட்ட முனிவர் கங்கையிலே நீராடினார்; அந்தணர் முதலிய அறவோர்க்குப் பொன்னும் பொருளும் வழங்கினார்; செய்ய்த்தக்க சடங்குகளையெல்லாம் செய்தார். அப்போது பிரமதேவன் அங்கு எழுந்தருளி மைந்தனுக்கு மார்க்கண்டன் என்று பெயர் இட்டான். அம் மைந்தனுக்கு ஐந்தாம் ஆண்டில் முனிவர் உபநயனம் செய்தார்; ஓதுதற்குரிய கலைகளை யெல்லாம் அவன் உள்ளங்கொள்ள உணர்த்தினார்; வேத நூல் முதலாய் கலைகளெல்லாம் கூறும் மெய்ப்பொருளை உணர்ந்து, சிவபெருமானே ஆதி முதல்வன் என்றறிந்து, அவர் சேவடியைத் தஞ்சமாகக் கொண்டான், மார்க்கண்டன்.
"இவ்வாறிருக்கையில், மார்க்கண்டனுக்குப் பதினாறு வயது வந்தது. பாலனையும், பதினாறாம் ஆண்டினையும் மாறிமாறி எண்ணிப் பெற்றோர் இருவரும் தனித்தனியே பேதுற்றார்; துன்பக் கடலில் மூழ்கினார்; விம்மினார்; அழுதார், நலிவுற்றார். அதனை அறிந்த மார்க்கண்டன் பெற்றோரை வணங்கி, அருகே சென்று நீங்கள் ஏன் இவ்வாறு துன்புறுகின்றீர்கள்? வருந்தத்தக்க காரியம் ஒன்றும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே! துக்கப்படாதீர்கள் என்ன நிகழ்ந்ததென்று சொல்லுங்கள்" என்று வினவினான்.
"இம் மொழி கேட்ட தந்தை, "அப்பனே, நீ இருக்க எமக்குத் துன்பமும் உண்டோ? உனக்கு வயது பதினாறு என்று சிவபெருமான் முன்னமே அருளிச்செய்தார். அவ் வயது வந்துவிட்டதே என்றுதான் வருந்துகிறோம்" என்று உரைத்தனர். அப்போது, தந்தையின் துன்புற்ற முகத்தை நோக்கி, "ஐயனே! நீங்கள் வருந்தாதீர்கள். எல்லா உயிர்க்கும் உயிராகி, என்றும் நின்று நிலவும் பெருமானை வழிபட்டு, கால அவதி என்னும் விதியைக் கடந்து, உங்களிடம் வந்து சேர்வேன். அதுவரையும் இங்கே இருங்கள் என்று பலவாறாகச் சொல்லிப் பெற்றோர் மனத்தைத் தேற்றி, அவர் பாதம் பணிந்து நின்றான். மார்க்கண்டன். அருமந்த மகனை இருவரும் எடுத்தணைத்து, உச்சி மோந்து, துன்பம். விட்டு இன்பம் அடைந்தனர்.
"இறைவனின் அருளும் அன்புமே உறுதுணையாகக் கொண்டு, உள்ளத்தில் ஒப்பற்ற மகிழ்ச்சி பொங்க, விடை பெற்று விரைந்து போந்து, காசியிலுள்ள மணிகன்றிகை யென்னும் செம் பொன் மயமான சிவாலயத்தை அடைந்தான், மார்க்கண்டன்; அன்பினால் என்பு உருக, கண்ணீர் பொங்கி வழிய, திருக் கோவிலை வலம் வந்தான்; ஈசனை வணங்கினான்; அவர் திரு வடியைத் தன் முடியிலே தரித்தான்; ஆலயத்தின் தென்பால் ஓரிடத்தில் ஈசன் திருவுருவை நிறுவினான்; பல நாள் அன்புடன் தொழுது போற்றி அருந்தவம் புரியலுற்றான்; "ஐயனே! அமலனே! எப்பொருளும் ஆகி நின்ற மெய்ப்பொருளே! பரம்பொருளே! விமலனே! தீயேந்திய திருக்கரத்தானே! அடியேன், காலன் கைப் படாது கடைத்தேறும் வண்ணம் நேர் நின்று காத்தருளல் வேண்டும் என்று பிரார்த்தித்தான். அப்பொழுது சிவபெருமான் "அஞ்சேல், அஞ்சேல் என்று அபயம் அளித்துத் தம் சேவடி இரண் டையும் அவன் சென்னியிலே சேர்த்தார். "உய்ந்தேன் அடியேன்” என்று மார்க்கண்டன் போற்றி நின்றான். ஈசன் மறைந்தருளினார்.
"அவ் வேளையில் கூற்றுவன் தன் அமைச்சனாகிய கொடிய காலனை அழைத்தான்; "அந்தணன் மகன் ஒருவன் காசியில் உள்ளான்; அவன் உயிரைக் கவர்ந்து வா" என்று கட்டளை யிட்டான். அப் பணி யேற்ற காலன் நிலவுலகத்தை யடைந்தான்; மார்க்கண்டன் கண்ணெதிரே தோன்றினான்; தொழுது நின்றான்; நீ யார் என்று அவன் வினவலும், "சகல உலகங்களிலும் உள்ள உயிர்களைச் சங்காரம் செய்யும் அதிகாரமுடைய எமதேவனது அடியினைப் பணியும் காலன் யான் என்றான். அது கேட்ட மார்க்கண்டன், "யாவர்க்கும் தலைவனாகிய ஈசனாரின் அடியார்க்கு அடியவன் யான்; ஆதலால், உமது எமலோகத்திற்கு வரமாட்டேன். பிரமன், திருமால் ஆகிய இருவர் பதவியையும் விரும்பேன்; நீ விரைந்து செல்" என்று கூறினான். காலனும், நன்று, நன்று என்று சொல்லிச் சென்றான்.
"எமலோகம் போந்த காலன், தலைவனை அடி வணங்கி, நிகழ்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தான். அப்போது, எமதருமன் மனம் பதைத்தான்; மேனி வியர்த்தான்; கண்களால் கனல் பொழிந்தான்; நெடும் புருவங்களை நிமிர்த்தான்; சீற்றம் உற்றான்; "என் எருமை வாகனத்தைத் தருக" என்றான்; வந்து எதிரே நின்ற எருமைக்கடாவின் முதுகில் யானைபோல ஏறி அமர்ந்தான். குடையும் கொடியும் எழுந்து முன்னே செல்ல, வீரர் பலர் தொழுத கையினராய்ச் சூழ்ந்து வர வந்தான், எமதருமன்; காசியில் மார்க்கண்டன் இருந்த இடத்தை யடைந்தான்; செக்கச் சிவந்த தலையும், காரெனக் கறுத்த மேனியும், எரிவினால் எரியும் கண்ணும், பாசமும் தண்டும் சூலமும் ஏந்திய கைகளும் உடையவனாய் மார்க்கண்டன் கண்ணெதிரே தோன்றினான்.
"தேவர் தடுப்பினும், முத்தொழில் புரியும் மூவர் தடுப்பினும், மற்றும் வலிமை சான்றவர் எவர் தடுப்பினும்,இன்று உன் உயிரைக் கொண்டே செல்வேன்" என்று இடிபோல் முழக்கினான், எமன்: "வா என்று முறையாக அழைத்தால் இவன் வரமாட்டான் என்றெண்ணி, முன்னே போந்து, பாசத்தை வீசிப் பற்றி இழுத்தான். அதை அறிந்த மார்க்கண்டன் ஈசனைத் துதித்து, அவர் இணையடி பிரியா திருந்தான். அக் காட்சியைக் கண்ட தேவரும், மீைந்தன் இறந்தான் அன்றோ என்று மறுகி நின்றார். மதங்கொண்ட எமன், மைந்தனது உயிர்வாங்க முனைந்தான் என்று திருவுளங்கொண்டு திரிபுரம் எரித்த தேவதேவன் சீற்ற முற்றார்; சிறிது, சேவடியால் உந்தி உதைத்தார். கூற்றுவன் கருமேகம் போல் தரையிடைக் கடிது வீழ்ந்தான்.
"அந் நிலையில் ஈசன், "மைந்தா! நீ நம்மைப் போற்றி மாசற்ற பூசனை புரிந்தாய். ஆதலால், அந்தமற்ற ஆயுளை உனக்குத் தந்தோம் என்று அருளினார். அப் பெருமை வாய்ந்த திருமகன் ஆற்றிய தவத்தால் விலக்கலாகாத விதியையும் கடந்தான்; கூற்றுவனது ஆற்றலையும் அழித்தான்; என்றும் இறவாத பெரும்பேறு பெற்றான். இது மெய்யான சரித்திரம். இதனை அறிந்துகொள்ளுங்கள்; இன்னமும் சொல்கின்றேன்; தவம் புரியுங்கள்” என்று காசிபன் கூறினான். அப்போது நளினம் வாய்ந்த மாயை நகைத்தாள்.
மாயையின் உபதேசம்
"மாயை யறிந்த முனிவரே! நீர் உண்மையாகிய உறுதியைத் தான் கூறினீர். அது மேலான வீட்டின்பத்தை நாடும் முனிவர்களுக்குத் தகுமேயன்றி, நாம் பெற்ற மைந்தருக்கு அந் நெறியைச் சொல்லலாமோ? நம் காதல் மைந்தர்கள், சிறந்த பெருஞ்செல்வமும், குற்றமற்ற வெற்றியும் பெறுதல் வேண்டும்; வாழ்க்கையில் ஐம்பொறிகளால் அனுபவிக்கத் தக்க இன்பமெல்லாம் அடைதல் வேண்டும்; அழிவற்ற ஆயுளும், நிலைபெற்ற புகழும், மாசிலா வாழ்வும் பெறுதல் வேண்டும். இவ் வுலகிற் பிறந்த உயிர்க்கெல்லாம் பெருமை யளிக்கும் சிறந்த பொருள்கள் இரண்டு; ஒன்று கல்வி; மற்றொன்று செல்வம், இவற்றின் திறத்தை ஆராய்வோமாயின், அருமையான கல்வியினும் செல்வமே சிறந்ததென்று சொல்லத் தகும். செல்வமே அளவிறந்த கலைஞானத்தையும் மேன்மையை யும் அளிக்கும்; அறத்தையும் ஆன்ற புகழையும் ஈட்டும்; கொற்றமும் பிறவும் கூட்டும். ஆதலால், செல்வத்திற் சிறந்தது வேறொன்றில்லை” என்று முன்ரிவரை நோக்கி மாயை கூறினாள்.
பின்பு அவள், மைந்தர்களை நோக்கி, "எனவே, அருமை மைந்தர்காள் திருமாலும் பிரமனும் மற்றுமுள்ள தேவர்களும் இறைவன் என வணங்கும் ஈசனைப் போற்றி, வெம்மை சான்ற வேள்வியை நெடுங்காலம் செய்வீராக!” என்றான்.
அது கேட்ட அசுரர் தலைவனாகிய சூரன், ஈன்ற தாயையும் தந்தையையும் தொழுது போற்றினான்; அவரிடம் விடை பெற்றுத் தம்பியர் இருவரோடும் வேள்வி செய்யப் புறப்பட்டான். அன்னவர் சென்ற பின்னர், மோகமுற்றுத் தன் அருகே நின்ற முனிவரை நேர்க்கி, "ஐயனே! நான் மைந்தரைப் பாதுகாப்பதற்குச் செல்கிறேன்; நீர் மனக் கவலை ஒழிக" என்று கூறி மாயை பிரிந்து போயினாள்.
சூரன் செய்த வேள்வி
அசுரர் குலத்திற்கு ஆக்கம் தரும் வேள்வி செய்யுமாறு சூரன் . வடதிசையிற் போந்தான்; ஆலமரங்கள் நிறைந்த ஒரு வனத்தின் அருகே வெய்யதோர் வேள்வி செய்யக் கருதினான்; பதினாயிரம் யோசனை அளவு கொண்ட நிலத்தை உயர்ந்த மதிலால் வளைத்தான்; மூவகைப்பட்ட ஒமகுண்டங்களும் அமைத்த பின்பு, வேள்வி இயற்றுதற்கு வேண்டும் பொருள்களெல்லாம் தரும்படி தாயாகிய மாயையை மனத்திலே நினைத்தான். அவளும் அன்பு கொண்டு சிவனருளால் அப் பொருள்களைச் சேர்ப்பித்தாள்.
சூரன் ஒமகுண்டத்தை அடைந்து, முறையாக அர்ச்சன்னயெல்லாம் குறைவின்றிச் செய்து, மங்கை பங்கனாகிய ஈசனை மனத்தில் எண்ணி, மாசற்ற மகம் புரிவானாயினான் நெடுங்காலமாக வேள்வி செய்தும் ஈசன் அருள் புரிந்தாரல்லர் அதனை அறிந்த சூரன், "இதற்கெல்லாம் சிவபெருமான் இசைந்து அருள் செய்வாரோ?” என்று கூறி, வேள்வித் தொழிலைத் தம்பி பரிடம் விட்டு வானவர் அச்சம் கொள்ள,விண்ணிலே எழுந்தான் அங்கே நின்று, சூரன் தன் உடம்பிலுள்ள தசையையெல்லாம் வாளால் அறுத்து வேள்வித்தீயிலே அவிர்ப்பாகமாகச் சொரிந்தான் மழைபோல் குருதியை நெய்யாகப் பொழிந்தான். இவ் வண்ணம் ஆயிரம் ஆண்டுகளாக ஆகாயத்தில் நின்று ஆகுதி செய்தும் தேவதேவன் தோன்றினார் அல்லர். அது கண்டு சூரன் மனம் வருந்தி, "இனி மாண்டுபோவதே என் கடன்" எனத் துணிந்தான் அவ்வாறே நெருப்புச் சூழ்ந்த் ஆதிகுண்டத்தில், தாய்ாகிய மாயையின் தவ வலிமையால் எரியாது நின்ற கூரிய நுனியுடைய வச்சிர கம்பத்தின்மேற் குதித்தான்.
தம்பியர் புலம்பல்
தம்பியராகிய சிங்கமுகனும் தாரகனும், முன்னவன் முடிந்தது கண்டு, ஏங்கி அழுதார்கள். இருவர் துயரத்தையும் அறிந்த அசுரர் யாவரும் பொங்கும் கடல்போல் பொருமிப் புலம்பினர். அப்பொழுது அசுரர்களோடு அழுது சோர்ந்த சிங்கமுகன், "அந்தோ! என் உயிராகிய தமையன் இறந்தான்; இனி நான் இங்கு இருத்தல் தகுமோ? என்று எண்ணி நெருப்பிலே குதிக்க எழுந்தான்.
இறைவன் தோன்றி வரந்தருதல்
அது கண்ட சிவபெருமான், திருமால் முதலிய தேவர்கள் வியக்கத் திருவெண்ணெய்-நல்லூரில் சுந்தரமூர்த்தியைத் தடுத்தாட்கொள்ள வந்தாற்போன்று விருத்த வேதிய வடிவங்கொண்டு, தண்டூன்றி நடந்து வந்தார். அங்கு அமைந்த ஓம குண்டத்தின் அருகே சென்று, சிங்கமுகனை நோக்கி, "இங்கு எல்லோரும் வருந்துகின்றீர்களே! என்ன நேர்ந்தது? என்று வினவினார். நிகழ்ந்த வற்றையெல்லாம் சிங்கமுகன் சொல்லக் கேட்ட பெருமான், "சூரனைப் போல் நீங்கள் இறந்துபோக வேண்டா. உங்கள் தமையனை இப்பொழுதே வேள்வித் தீயினின்றும் எழுப்பித் தருவோம் துயர் ஒழிக" என்று கூறிக் கங்கையை மனத்திலே கருதினார். கங்கை யாறு புறப்பட்டது; விண்ணுலகை யெல்லாம் விரைவிற் கடந்தது; நிலவுலகிற் போந்து ஈசன் திருவடியை வணங்கிற்று; அவர் பணித்தவாறே ஓங்கி எரிந்த ஓம குண்டத்தின் இடையே பாய்ந்தது.
அந் நிலையில் பாற்கடலினின்று எழுந்த ஆலகாலம் போல் அசுரர் தலைவனாகிய சூரன் ஆரவாரித்து எழுந்தான்; முன் போலவே தோன்றினான், சூரன் அவனைக் கண்ட சிங்கமுகனும் தாரகனும் பெருஞ்செல்வம் பெற்ற வறியவர் போல் மகிழ்வுற்றார். அளவிறந்த ஊற்றம் பெற்றார்; விரைந்து ஓடி அவன் பாதம் பணிந்தார். துன்பம் ஒழிந்த தம்பியர் இருவரும் அருகே நிற்க, விரிந்த பெருஞ்சேனை வாழ்த்துரை வழங்க, சூரன் சிறந்து விளங்கினான்.
அவ் வேளையில், வேதியன்போல் நின்ற விமலன் மறைந்து, அன்னார் கருதிய சிவ வடிவத்திற் காட்சியளித்தார். ஈசனைப் போற்றிப் புகழ்ந்து நின்றான், சூரன். அப்போது அவன் முகம் பார்த்து, "நீ நம்மைக் குறித்து நெடுங்காலம் பெருவேள்வி செய்து இளைத்தாய்; உனக்கு என்ன வரம் வேண்டும்?” என வினவினார், சிவபெருமான்.
பிரமன் முதலிய வானவர் யாவரும் தம் பெருமை ஒழிந்த தென்று வருந்தி நிற்க, சூரன் கூறலுற்றான்: "திண்ணிய பிருதிவி பூதத்திலுள்ள புவனங்கள் பலவும் கொண்ட அண்டங்கள் அனைத்திற்கும் யான் அரசனாதல் வேண்டும்; அவற்றைக் காக்கும் ஆக்ஞா சக்கரமும் அருளல் வேண்டும்; அண்டந்தோறும் செல்வதற்கு மனோ வேகமுடைய வாகனங்கள் வேண்டும்; என்றும் அழியாத உடலும் அளித்தல் வேண்டும்; பாற்கடலிற் கண்வளரும் பரந்தாமன் முதலியோர் போர் செய்தாலும் அன்னாரை வெல்லுதற்குரிய வெல்படைகள் வேண்டும்; அழிவின்றி என்றும் நான் வாழ வேண்டும்” எ6ளச் சூரன் விண்ணப்பம் செய்தான்.
ஈசன் கருணை கூர்ந்து, "பிருதிவி தத்துவத்தில் ஆயிரங் கோடி அண்டங்கள் உண்டு; அவற்றுள் ஆயிரத்தெட்டு அண்டங் களை நூற்றெட்டு யுகம் நீ அரசாள்வாயாக" என்று வரம் தந்து அவ் வண்டங்களைப் பார்த்து வருவதற்கு இந்திரஞாலம் என்னும் தேரும் வழங்கினார். மேலும், அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் காக்கும் வண்ணம் திருமாலின் நேமிப்படையினும் வலியதேர் ஆழிப்படை அளித்தார்; சிங்கவ்ாகனமும் தந்தார்; வானவர்க்கும் தலைவனா யிருக்கும் தகுதியை வழங்கினார்;விண்ணுலகில் வாழும் வானவரையும், தானவர் முதலிய யாவரையும் வெல்லுதற் குரிய வீரமும் பாசுபதம் முதலிய சிறந்த தெய்வப்படைகளும், என்றும் அழியாமல் ஏற்றமுறும் வச்சிர மேனியும் அளித்தார்.
பின்னர், சூரன் முதலிய மூவரையும் நோக்கி, "தேவர் எல்லாம் வந்து வணங்கும் மூவர் ஆகிய உம்மை ஈறிலாத நம் சக்தி யொன்றே யன்றி, யாவரே வெல்ல வல்லார்” என்று திருவாய் மலர்ந்து, அழிவற்ற தேரும், தம் பெயர் தாங்கிய தெய்வப்படையும் கொடுத்து, மூவருக்கும் தனித்தனி அருள் புரிந்து, ஈசனார் மறைந் தருளினார். வரம் பெற்ற சூரன், தம்பியரோடு வேள்விச் சாலையினின்று புறப்பட்டான். அசுரப்படை மண்ணும் விண்ணும் எண்திசையும் நெருங்கிச் சென்றது.
சூரனுக்குச் சுக்கிரன் உபதேசித்தல்
சூரன் வரம் பெற்று வருதலை அறிந்தார், சுக்கிரன்; வாட்டம் நீங்கினார்; இன்பம் என்னும் மதுவை உண்டார்; ஆசையோடு விரைந்தெழுந்தார்; மாணவ கணங்களோடு சூரனை எதிர் கொண்டார். அடி பணிந்து எழுந்த சூரனை அன்புடன் நோக்கி, "வரம் பெற்றுயர்ந்த வீரனே! உனது மேன்மையை உணர்ந்து நீயே பிரமம் என்று தெளிக; பிரமன் முதலிய தேவர்களே மேலோர் என்று பணிதலை ஒழிக. வானவர் உம்முடைய குலப்பகைவர். அன்னார் செல்வத்தை அழித்து, அவரைச் சிறையில் இடுக. இந்திரன் என்பவன் வானவர்க்கு அரசன்; எண்ணிறந்த அசுரரின் உயிர் கவர்ந்தவன் அவனே. அவனைப் பிடித்து, விலங்கினாற் பிணித்து விரைவிலே சிறையிடுக. சிறைக் கோட்டத்தில் அவனை அடைத்துக் கொடுமைகள் பலவும் செய்திடுக. வேதம் ஒதும் முனிவரையும் தேவரையும் திக்குப் பாலகரையும் தினந்தோறும், ஏவல் கொண்டிடுக. அவர் பதவிகளையெல்லாம் பறித்து அசுரர்க்கு அளித்திடுக. கொலை, കണ്ടഖ്, காமம் என்னும் மூன்றும் குறிக்கொண்டு செய்க, வஞ்சனை யெல்லாம் இயற்றிடுக. அதனால் வரும் கேடொன்றும் இல்லை. அவ்விதம் செய்யாவிடில், அரசே, நீ கருதியனவெல்லாம் கைகூட மாட்டா. அன்றியும் எவரும் உனக்கு அஞ்சமாட்டார்கள். வளமான துளசி மாலையை முடியிலே அணிந்த திருமாலை இடப வாகனமாகவுடைய சிவபெருமான் தந்த அண்டங்கள் ஆயிரத் தெட்டையும் இன்றே சேனையோடு சென்று கண்டு, அங்கு உன் அரசுரிமையைச் செலுத்தி, மீண்டு வந்து, இவ் வண்டத்திலே திக்கெலாம் புகழ வீற்றிருப்பாயாக" என்று கூறினார். குருவின் வாசகத்தைக் கேட்டு மகிழ்வுற்ற சூரன் அவரிடம் விண்ட பெற்றுச் சென்றான்.