முறைப்பாட்டு

bookmark

முறைப்பாட்டு பற்றி முன்னரே குறிப்பிட்டோம்.

பின் வரும் பகுதியில் ஆண்கள் பாடும் முறைப்பாட்டும் பெண்கள் பாடும் முறைப்பாட்டும் தனித்தனியாக கொடுக்கப்படுகின்றன.

(ஆண்கள் பாடுவது)
சந்தை இரைச் சலுக்கும்
தாளிச்ச சுண்டலுக்கும்
சீமை மொச்சைப் பயத்துக்கும்
சிறுக்கி வட்டம் போடுராளே
அரைக்கால் ரூவா தாரனடி
ஆரஞ்சுப் பழமும் தாரனடி
பூப் போட்ட ரவுக்க தாரனடி
புருஷனுண்ணு கூப்பிடடி
மூக்குத்திப் போட்ட புள்ள
முடி மனூர் கம்மாப் புள்ள
நாக்குச் சிவந்த புள்ள
நாந்தாண்டி ஒம் புருஷன்
மானா மதுரையிலே
மாடுமேய்க்கும் சின்ன புள்ள
தேங்கா நிறத்துப் புள்ள
தேடு ராண்டி ஒம் புருஷன்
ரோட்டோரம் வீட்டுக்காரி
ரோசாப் பூச் சேலைக்காரி
காத் தோரம் கொண்டைக்காரி
கையலைப்புக் கெட்டிக்காரி
தெல்லுத் தண்டி கொண்டைக்காரி
தேங்காத் தண்டி பூ முடிச்சு
பூவே மலரே நீ
போர் மன்னர் தன்னழகே
கோடாலிக் கொண்டைக்காரி
குளத்தூரு காவல்காரி
வில்லு முருகுக் காரி
நில்லேண்டி ஒண்ணாப் போவோம்
புளிய மரத்து வீட்டுக்காரி
புள்ளி போட்ட லவுக்கக்காரி
புல்லறுக்கப் போகையிலே
பூ முடிந்தா லாகாதோடி
வெள்ள வெள்ளச் சீலைக்காரி
வெள்ளரிக்காய் கூடைக்காரி
கோம்பை மலை வெள்ளரிக்காய்
கொண்டு வாடி திண்ணு பார்ப்போம்
மஞ்சள் அறைக்கும் புள்ள
மதி லெட்டிப் பாக்கும் புள்ள
கொஞ்சம் வளர்ந்தையானா
கொண்டு போவேன் ரெங்கத்துக்கு
அலுக்கு குத்தி துலக்க புள்ள
ஆபரணம் போட்ட புள்ள
அலுக்கக் கழுத்துனாலும்
துலுக்கத்தனம் போகுதில்லை
ஆல மரத்தைப்பாரு
அதுக்குத் தெக்க கிணத்தப் பாரு
செப்புக் குடத்தைப் பாரு
சிறுக்கி போற ஒயிலைப் பாரு

(பெண்கள் பாடுவது)
எண்ணைத் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கோயில் சிலை யழகா
கொல்லுதடா உன்னாசை
வாழைப் பழமும் போச்சு
வச்சிருந்த வைப்பும் போச்சு
தலையைச் சிரைக்கப் போயி
தாழம்பூ வாசம் போச்சு
காணம் கருங் காணம்
கறிக் கேத்த கொத்தமல்லி
மானங் கெட்ட அத்தானுக்கு
மதுரையில வைப்பாட்டி
அஞ்சாறு வீடுகளாம்
அதுல ரெண்டு இள வட்டமாம்
நாயடிக்க ஏலாட்டியும்
நாணயங்க ரொம்ப உண்டாம்
இந்த நடை ஏது?
இடுப்பிலொரு கையேது?
மையேது போட்டேது
மதி குலைந்த மன்னவர்க்கு?
காத்துட்டுக்கு லேஞ்சி வாங்கி
கன்ன மெல்லாம் சுங்கு விட்டு
சுங்குக்கு மேலாக
சுத்துதடா சீலைப் பேனு
மானா மதுரைச் சட்டி
வாசலுல போட்ட சட்டி
எங்க மச்சான் குடிச்ச சட்டி
எடுத்துவுக கொடுத்திருங்க
பாதையிலே போற வனே
படர்ந்த காவிப் பல்லுக்காரா
நீல முழிக்காரிக்கு
நீ தாண்டா மாப்பிள்ளை

சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
-----------