மூங்கில் அடி பட்டேன்

bookmark

கன்னியம்மை புல் அறுக்க மலைக்குப் போகிறாள். கன்னியப்பன் நேரம் பார்த்து அவளைப் பின் தொடருகிறான். காட்டுப்பூவொன்றையும் பறித்து வைத்துக்கொண்டு "இப் பூவை உன் கூந்தலில் முடியட்டுமா?" என்று கேட்கிறான். அவர்கள் காதலர்கள். அவர்கள் உறவு அவளுடைய தந்தைக்குத் தெரிந்துவிட்டது. அவருக்க வந்த கோபத்தில் காட்டு மூங்கில் கம்பால் அவளை நன்றாக அடித்து விட்டார். எனவே அவள் சாமர்த்தியமாகப் பதில் சொல்லுகிறாள், "எல்லோரும் அறிய பாய் விரித்து என்னை உட்கார்த்தி யாரும் குற்றம் சொல்லாத முறையில் என் தலையில் பூச் சூட்டும் காலத்தில் பூ சூட்டலாம். அதுவரை காத்திரு" என்கிறாள்.

ஆண்: கல்லருகே தண்ணிருக்க
காட்டச் சுத்திப் புல்லிருக்க 
புல்லறுக்கப் போரபுள்ளே-நீ 
பூ முடிஞ்சாலா காதோ? 

பெண்:மொழுகின திருணையில
எழுதின பாய் விரிச்சு 
வாங்க திருணைக் கய்யா
நம்ம வாச முள்ள பூ முடிய 
கிடுகு கட்டி திருணையில 
கிளியும் நானும் பேசயிலே 
கிளிக்கு மதி சொன்னவுக-எனக்கு 
மதி சொல்லலையே. 
முழியா முழிக்கிறதோ 
முத்துப் பல்லு சோருறதோ 
அரும்பும் துடிக்கிறதோ 
எனக்குப் பய மாகுதையா 
ஆக்கை அடியும் பட்டேன் 

அவராலே சொல்லும் கேட்டேன் 
மூங்கி அடியும் பட்டேன் 
முழி சுருட்டிச் சாமியாலே 

வட்டார வழக்கு : திருணை-திண்ணை, கிடுகு - தென்னோலைத்தட்டி;மூங்கி-மூங்கில். 
சேகரித்தவர்: S.M. கார்க்கி 
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
------------