மைந்தனை பறிகொடுத்தோம்

bookmark

குழந்தைக்கு நோய்க்கண்டது. வைத்தியன் முடிதாக்கிவிட்டது என்கிறான். சேலம் மாவட்டத்தில் இப்படிக் கூறுவார்கள், நெல்லை மாவட்ட வைத்தியன் சீர்தட்டிவிட்டது என்பான். இந்நோய் காண்பதற்கு விநோதமான காரணத்தையும் கூறுவார்கள். கணவனோடு உடலுறவு கொண்ட மனைவி, குழந்தைக்கு பால் கொடுத்தால் இந்நோய் கண்டு விடுகிறதாம். வீட்டுக்கு விலக்கமான பெண் குழந்தையைத் தொட்டுவிட்டால் இந்நோய் உண்டாகி விடுகிறதாம். பல பெற்றோர்கள் இந்த மூடநம்பிக்கை காரணமாக விபூதி போடுவது, பூசை போடுவது, தண்ணீர் இறைப்பது போன்ற சிகிச்சை முறைகளை கையாளுகிறார்கள். விஞ்ஞான ரீதியால் நோயைக் கண்டு பிடித்து,அதனைப் போக்க முயலும் நவீன வைத்தியர்களிடம் கிராம மக்களில் பெரும்பாலோர் செல்வதில்லை, நாட்டு வைத்தியர்களிடம் சென்று அவர் சொன்ன மருந்து வகைகளை வாங்க முடியாமல் குழந்தையைப் பறிகொடுத்த தாய் தனது மடமையை நினைத்துப் புலம்புகிறாள்.

மச்சுவீடு கச்சேரி
மாய வர்ண மாளிகை
மைந்தன் நலங்கினதும்
மாயமுடி தாக்கினதும்
மன்னவரும் தேவதையும்
மருந்து வகை சிக்காமல்
மைந்தனைப் பறி கொடுத்தோம்
மாபாவி ஆனோமய்யா
குச்சுவீடு கச்சேரி
கோல வர்ண மாளிகையில்
குழந்தை நலங்கினதும்
குழந்தை முடி தட்டினதும்
கொண்ட வரும் தேவதையும்
கொழுந்த வகை தேடினதும்
கொழுந்த வகை சிக்காமல்
குழந்தை பறி கொடுத்தோம்
கொடும்பாவி ஆனோமய்யா

வட்டார வழக்கு: நலங்கினது-நலம் கெட்டது ; மன்னவரும் தேவதையும்-கணவரும் மனைவியும்.
உதவியவர் : நல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
--------