ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை

bookmark

மதுகண்டிகை என்ற குயில் சொல்லுகிறது:-
பழைய காலத்திலே, வஞ்சி நகரத்தில், ஒரு தோட்டத்து வேலியிலே, ஒரு பாம்பு தனது பெண் குட்டியுடன் வாசம் செய்தது. அந்தக் குட்டி மிகவும் அழகாக இருந்ததனால் அதற்கு "ரோஜாப்பூ" என்று பெயர். 

ஒருநாள் இரவிலே தாய்ப்பாம்பும், குட்டியும் புதரிலிருந்து வெளிப்பட்டுக் காற்று வாங்கிக்கொண்டிருக்கையில், குட்டி தாயை நோக்கிக் கேட்கிறது:

"அம்மா! நம்மை எல்லாரும் ஏன் பகைக்கிறார்கள்? நம்மை வீதியிலே எந்த மனிதன் கண்டாலும் கல்லால் எறிகிறானே, காரணமென்ன?" 

தாய் சொல்லுகிறது:- "குழந்தாய், நமது ஜாதிக்குப் பல்லிலே விஷம். நாம் யாரையேனும் கடித்தால் உடனே இறந்துபோய் விடுவார்கள். இதனால் நம்மிடத்திலே எல்லாருக்கும் பய முண்டாகிறது. பயத்திலிருந்து பகையேற்படும். அதுதான் காரணம்.? 

இங்ஙனம் தாய்ப் பாம்பும் குட்டியும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில் பக்கத்திலே ஒரு முனிவர் நடந்து சென்றார். அவர் இந்தப் பாம்புகளைப் பார்த்துப் பயப்படவில்லை. ஒதுங்கவில்லை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவர் பாட்டிலே போனார். இதைப் பார்த்து ரோஜாப் பூ மிகவும் ஆச்சரியப்பட்டுத் தனது தாயிடம் கேட்கிறது:-

"ஏனம்மா, இவர் மாத்திரம் பயப்படாமல் போகிறாரே, அதென்ன?"

தாய் சொல்லுகிறது:- "இவர் சித்தர். நாம் கடித்தால் சாகமாட்டார். இவருக்குிலே பயமில்லை. ஆகையால் பகையில்லை. இவர் பெரிய ஞானி. இவர் வரங் கொடுத்தாலும் பலிக்கும்; சாப மிட்டாலும் பலிக்கும்." 

இவ்வாறு தாய் சொல்லியதைக் கேட்டவுடனே குட்டி சிறிது நேரம் ஏதோ யோசனை செய்து பார்த்துப் பிறகு "அம்மா, இவர் எங்கே குடியிருக்கிறார்?" என்று கேட்டது.

"அதோ தெரிகிறது பார், தூரத்திலே ஒரு கிராமம். அதற்குக் கிழக்கே ஒரு சுனையும் பக்கத்திலே ஒரு தோப்பும் இருக்கின்றன. அந்தத் தோப்பிலே இவர் குடியிருக்கிறார்" என்று தாய் சொல்லிற்று.

சில நாளுக்கப்பால் இந்தப் ரோஜாப் பூ என்ற பாம்புக் குட்டி தனியே முனிவர் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தது. அவர் ஒரு மரத்தடியிலே உட்கார்ந்திருந்தார். காலிலே போய் விழுந்தது. "என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

"ஒரு வரம்? என்றது.

"என்ன வரம்?" என்று கேட்டார்.

"நான் நினைத்தபோது மிகவும் அழகான ஒரு மனிதப் பெண்ணாக மாறவேண்டும்" என்று பாம்புக் குட்டி சொல்லிற்று.

"எதன் பொருட்டு?" என்றார்.

"இந்த ஜன்மத்தை எல்லாரும் பகைக்கிறார்கள். ராஜகுமாரர் பார்த்தாலும் பிரியப்படத்தக்க ரூபம் எனக்கு வேண்டும்" என்றது.

பாம்பின் நோக்கத்தைத் தெரிந்துகொண்டு முனிவர் சொல்லுகிறார்: "சரி, உனக்கு அப்படியே நினைத்தபோது மனுஷரூபம் வரும்; ஆனால் எவனிடத்தில் வார்த்தை சொல்லும்போது உனக்குப் பயமேற்படுகிறதோ அவனுடன் அதிக நேரம் தங்கக்கூடாது. தங்கினால் அவனாலே உனக்கு மரணம் நேரிடும்" என்று விடை கொடுத்தனுப்பினார். 

பின்னொரு நாள் இரவில் ரோஜாப் பூ மனிதப் பெண் வேஷந்தரித்துக் கொண்டு, வஞ்சி ராஜாவின் அரண்மனையைச் சார்ந்த சோலையிலே ராஜகுமாரன் விளையாடும் நிலா முற்றத்துக்கருகே போய் நின்று கொண்டிருந்தது. அங்கு ராஜகுமாரன் வந்தான். இந்தப் பெண்ணை நோக்கி இவள் அழகை வியந்து "நீ யார்?" என்று கேட்டான்.

"சிங்கள ராஜன் மகள்? என்று ரோஜாப் பூ சொன்னாள். ராஜகுமாரன் திகைத்துப் போய் "என்னது! சிங்கள ராஜ்யமா? இந்த நேரத்திலே இங்குத் தனியே எப்படி வந்தாய்? யாருடன் வந்தாய்?" என்றான்.

அதற்கு ரோஜாப் பூ: "எனக்கொரு முனிவர் ஒரு மந்திரங் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதைக்கொண்டு நினைத்த வேளையில் நினைத்த இடத்திற்கு வான்வழியாகப் பறந்து செல்வது வழக்கம். இந்த வழியே பறந்து வருகையில் நிலா வொளில் இந்தச் சோலையும் நிலாமுற்றமும் கண்ணைக் கவர்ந்தன. இங்கு சற்றே நின்று பார்த்துவிட்டுப் போவோமென்று வந்தேன்" என்றாள்.

இதற்குள் ராஜகுமாரன் இவளுடைய அழகிலே மோகித்துப் போய் "உன்னைப் பார்த்தால் தேவ ரம்பை அல்லது நாக கன்னிகை போலே தோன்றுகிறது" என்றான். "நாக கன்னிகை" என்ற வார்த்தையைக் கேட்டவுடனே ரோஜாவிற்கு உடம்பெல்லாம் படபடவென்று நடுக்கங் கண்டது. 

"ஏன் பயப்படுகிறாய்?" என்று ராஜகுமாரன் கேட்டான். 

ரோஜாவுக்கு முனிவர் சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது. இனி இங்கே நின்றால் அபாயம் நேரிடுமென்று பயந்து மிக வேகத்தில் ஓடி மறைந்து போய்விட்டது பாம்புக்குட்டி.

பின்னொரு நாள், மாலை வேளையில் மரஞ்செடியில்லாத பொட்டல் வெளியிலே காட்டுப் பாதைக்குச் சமீபத்தில் ஆழ்ந்த கிணறொன்றின் அருகேயுள்ள புதரில் ரோஜாப் பூ தனியாக இருக்கும்போது, அவ்வழியே யௌவனமும் அழகுமுடைய ஒரு புரோகிதப் பிராமணன் போய்க் கொண்டிருந்தான். தூரத்தில் வரும்போதே அவனைக் கண்டு ரோஜாப் பூ பெண் வடிவமாக மாறி நின்றது. பார்ப்பான் பார்த்தான். நடுக்காடு; தனியிடம்; மாலை நேரம்; இவளழகோ சொல்லி முடியாது. "இவள் யாரடா இவள்?" என்று யோசனையுடன் சற்றே நின்றான். 

ரோஜாப் பூ அவனைக் கூப்பிட்டு, "ஐயரே, தாகம் பொறுக்க முடியவில்லை. கிணற்றில் இறங்கப் பயமாக இருக்கிறது. நீர் இறங்கி உமது கையிலுள்ள செம்பிலே சிறிது தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தால் புண்ணியமுண்டு" என்றாள். 

பார்ப்பான் சந்தோஷத்துடன் கிணற்றிலே இறங்கப் போனான். தண்ணீருக்கு மேலே 
ஒரு நீர்பாம்பு தென்பட்டது. உடனே அவன் ரோஜாவை நோக்கித் திரும்பி, "ஆகா! பாம்பைப் பார்த்தாயோ?" என்றான்.

ரோஜாவுக்கு உடம்பெல்லாம் வெயர்த்துப் போய்க் கையும் காலும் நடுங்கலாயின.

"ஏன் நடுங்குகிறாய்?" என்று பார்ப்பான் கேட்டான். ரோஜாப் பூ அங்கிருந்து விரைவாக மறைந்தோடி விட்டது. இவ்விதமாக ரோஜாப் பூ யாரை மயக்கி வசப்படுத்திக் கொள்ள விரும்பினாலும் ஒரு பயம் நேரிட்டுக் கொண்டேயிருந்தது. கடைசியாக அவளுக்கு (அந்தப் பாம்புப் பெண்ணுக்கு) "கர்த்தப ஸ்வாமிகள்" என்றொரு ஸந்நியாசி வசப்பட்டான்.

இவ்வாறு மதுகண்டிகை என்னு குயில் சொல்லி வருகையில் ரஸிக சிரோமணி, "அந்த ஸந்நியாசி யார்?" என்று கேட்டது.