வயிரவிவனம்

bookmark

பாடல் 655
ராகம் - ஸரஸ்வதி ; தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2 

தனதன தனத்த தான தனதன தனத்த தான 
தனதன தனத்த தான ...... தனதான 


அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு 
மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே 

அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு 
மணிமயில நடத்து மாசை ...... மருகோனே 

பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப 
னிருகர மிகுத்த பார ...... முருகாநின் 

பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள் 
பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே 

சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி 
சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா 

சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள 
துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா 

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும் 
வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி 

வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு 
வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.