வழி நடப்போம்!

மலையில் மாடு மேய்க்கும் இளைஞன் தனது புல்லாங்குழலை எடுத்து ஊதுகிறான். அவனுடைய காதலியை அழைக்கும் சங்கேதப் பாட்டை ஊதுகிறான். அவள் வருகிறாள். அவன் ஊதுவதை நிறுத்திப் பேச்சுக் கொடுக்கிறான். அவள் பதில் சொல்லுகிறாள். உரையாடல் மலை நீரோடை போல வளைந்து சென்று காதலின்பமென்னும் விளை நிலத்தில் பாய்கிறது.
ஆண்:
வெள்ளை வெள்ளைப் பாறை
வெள்ளாடு மேயும் பாறை
சீங் குழல் சத்தம் கேட்டு
திரும்பலயோ உந்தன் முகம்?
பெண்:
மாங்கா மரமானேன்
மறுவருஷம் பெண்ணானேன்
தேங்காய் மரமானேன்
தெரிச்ச கொண்டைக்காரனுக்கே
ஆண்:
மூணு சட்டி உயரத்தில்
முட்டைக் கோழி பருவத்தில்
சாதிக்கோழி சாயலோட
சம்பிராயம் போடாதடி
பெண்:
செவத்த லேஞ்சுக் கார மாமா,
சீல வாங்கித் தாங்க மாமா
சிலுக்குச் சீல வந்தாத் தான்
சிரிச்சுமே பேசிடுவேன்
ஆண்:
கல்லு இடுவலில
கவுந்து தலை பாக்கும் புள்ள
பல்லு இடுவலில-எனக்குப்
பாதரவா தோணுதடி
பெண்:
ஓடையிலே ஒரு மரமே
ஒதுக்கமான மாமரமே
தங்கக் கொழுந்தனுக்கு
தலைபாக்க ஏத்த ஓடை
ஆண்:
தாளம் பூ தலையில் வச்சு
தனி வழியே வந்தவளே
எவன் இருப்பான் என்று சொல்லி
இங்க வந்த பெண்மயிலே!
ஒருத்திக்கு ஒரு மகனாம்
உன்னை நம்பி வந்தவண்டி
கையை விட்டுத் தவறவிட்டா
கருமம் வந்து சேருமடி
பெண்:
நெலக்கடலை நாழி வேணும்
நேரான பாதை வேணும்
ஜோடி மட்டம் ரெண்டு வேணும்
சொகுசா வழி நடக்க
வட்டார வழக்கு: சிங்குழல்-சீவிய குழல், புல்லாங்குழல்; முட்டை என்பது-காதலியை; சாவல் என்பது-காதலனை; சம்பிராயம்-வீண் பெருமை; இடுவல்-இடைவெளி; ஜோடி மட்டம்-தங்களிருவரும்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி இடம்: சிவகிரி.
---------------