வழிப் பேச்சு

bookmark

அறுவடை முடிந்து வீடு திரும்புகிறார்கள் உழவர்களும், உழத்தியரும். காதலனும் காதலியும் பின்தங்கி வழி நடக்கிறார்கள். காதலன் மனத்தில் என்ன கவலையோ,பேசாமல் வருகிறான். அவள் அவனைப் பேசவைத்துவிட என்ன முயற்சியெல்லாமோ செய்து பார்க்கிறாள் முடியவில்லை. கடைசியில் கொஞ்சம் சூடாகவே சொல் கொடுத்து அவன் மனத்தைக் கரைத்து விடுகிறாள். காதலியின் பேச்சில் அன்பும், அவனோடு உறவாட ஆர்வமும், அவன் கவலையைப் போக்குவதிலுள்ள கருத்தையும் இதில் காண்கிறோம்.

காதலி பாடுவது
நெல்லுக் கதிரானேன் 
நேத்தறுத்த தாளானேன் 
தாள் மடங்குக்குள்ளே-அந்தத் 
தருமருக்கோ பெண்ணானேன் 
தண்ணியில தடமெடுத்து 
தருமரோட வழி நடந்து 
வாய் பேசா தருமரோட 
வழியும் தொலையலியே! 
பருத்திக்காட்டுப் பொழி வழியே! 
பாவனையாய் போறவரே! 
கல்லுமே தட்டிராமே-ஒங்க 
கல் மனகம் இளகிராம!

சேகரித்தவர்: S.M. கார்க்கி 
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
-----------