வாகைமாநகர்

பாடல் 990
தான தான தனத்த, தான தான தனத்த
தான தான தனத்த ...... தனதான
ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு
மால கால விழிக்கு ...... முறுகாதல்
ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு
மார பார முலைக்கு ...... மழகான
ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு
மோரை சாயு மிடைக்கு ...... மயல்மேவி
ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி
லூர வோடு விருப்பி ...... லுழல்வேனோ
வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு
மீறு காத லளிக்கு ...... முகமாய
மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து
மீள வாய்மை தெளித்து ...... மிதண்மீது
மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து
வாயி லூறல் குடித்து ...... மயல்தீர
வாகு தோளி லணைத்து மாக மார்பொழி லுற்ற
வாகை மாநகர் பற்று ...... பெருமாளே.