வாழ்த்து

திருமணத்தின் போது வாழ்த்துக் கூறுதல் நமது தமிழ் நாட்டின் பழமையான வழக்கம். சிலப்பதிகாரத்தில் பண்டைக் காலத்தில் பாடப்பட்ட வாழ்த்து குறிப்பிடப் பட்டுள்ளது. அஷ்ட மங்கலங்களையும் ஏந்திய மகளிர் கண்ணகியைத் திருமண மேடையிலேற்றி,
“காதலர் பிரியாமல்
கவவுக்கை நெகிழாமல்
தீது அறுகஎன ஏத்திச்
சின்மலர் கொடு தூவி
அம்கண் உலகின்
அருந்ததி, அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார்-தங்கிய
இப்பால் இமயத்து
இருத்திய வாள் வேங்கை
உப்பாலைப் பொன்கோட்டு
உழையதா எப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒரு தனி ஆழி
உருட்டுவோன் எனவே”
என்று வாழ்த்தினார்களென்று இளங்கோவடிகள் கூறுகிறார். இம்மங்கல வாழ்த்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. மணமக்கள் வாழ்த்து முதற் பகுதி, சோழமன்னனது வெற்றியைப் போற்றிப் பாடுவது, இரண்டாவது பகுதி.
தற்காலத் திருமண வாழ்த்துக்களில் மணமகளுக்கு வாழ்த்துக் கூறுவது மட்டுமே வழக்கத்தில் இருக்கிறது. திருமணத்திற்கு முன் நிகழ்ந்த பல சம்பவங்களும் இவ் வாழ்த்தில் கூறப்படும். மணப்பந்தல் வர்ணனை, மணமகன்,மணமகள் பெருமை, மணச்சடங்கு முறை, ஆரத்திப்பாட்டு முதலியன யாவும் இதனுள் இடம் பெறும்.
மண நிகழ்ச்சிகள் பலவகைப்படும். கண்ணகி கோவலன் மணம், தாலிகட்டுதல் என்ற சடங்கின்றி நடை பெற்றதென்று சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. மங்கல வாழ்த்துப் பாடல்கள் பாடியவுடன் திருமண நிகழ்ச்சி முடிவடைகிறது. கேரளத்தில் பல ஜாதியினரிடையே தாலிகட்டும் வழக்கம் இல்லை. கல்யாணச் சடங்கே மிகவும் முக்கியமானது என்பதை “சந்தடியில் தாலி கட்ட மறந்த கதை” என்ற பழமொழி தெளிவாக்குகிறது. சில சாதியாரிடையே மணமகள் கழுத்தில் மணமகனே தலி கட்டி ஒரு முடிச்சுப் போட்டபின் அவனது சகோதரிகள் மேல் முடிச்சுகள் போடுவார்கள். சேலம் மாவட்டத்தில் சில பகுதியில் சுமார் 30 வருஷங்களுக்குமுன் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதி்ல்லை. ஜாதியில் வயது முதிர்ந்தவர்தான் மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டுவார். ஆனால் தற்பொழுது முறை மாறி விட்டது. வயது முதிர்ந்தவர் தாலியைத் தொட்டுக் கொடுக்க, மணமகன் வாங்கி மணமகள் கழுத்தில் கட்டுவான்.
தென்தமிழ் நாட்டில் மங்கல வாழ்த்தைப் பெண்களே பாடுவார்கள். சேலம் பகுதியில் ஊர் நாவிதன் தன்னைக் கம்பன் பரம்பரையினன் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு மங்கல வாழ்த்துப் பாடுவான்.
மங்கல வாழ்த்து
(திருநெல்வேலி மாவட்டம்)
வாழ்த்துங்கள் வாழ்த்துக்கள்
வாள் விசய மைந்தருக்கு
கேளுங்கள் கேளுங்கள்
எல்லோரும் கேளுங்கள்
கோல வர்ணப் பந்தலிலே
கூறுகிறேன் கேளுங்கள்
சொர்ண மணிப் பந்தலிலே
சொல்லுகிறேன் கேளுங்கள்
இந்தச் சபை தன்னிலே
எல்லோரும் கேளுங்கள்
எங்கள் குடி தழைக்க
இளவரசு வேணுமென்று
அரசுமுதல் வேண்டுமென்று
அன்னை தவஞ் செய்து
பிள்ளை முதல் வேண்டுமென்று
பெரிய தவஞ் செய்து
பாலன் முதல் வேண்டுமென்று
பாரத்தவம் செய்து
தொண்ணூறு நாளாகத்
துளசிக்கு நீர்வார்த்து
முன்னூறு நாளாக
முல்லைக்கு நீர் வார்த்து
ஐந்நூறு நாளாக
அரசுக்கு நீர் வார்த்து
வேண தவஞ் செய்து
வேம்புக்கு நீர் வார்த்து
வெந்த மாத்தின்றால்
விரதம் கலையுமிண்ணு
பச்சை மாத்திண்ணு
பகவானைப் பூசை செய்து
செம்பொன் மலரெடுத்துச்
சிவனாரைப் பூசை செய்து
பசும் பொன் மலரெடுத்து
பார்வதியைப் பூசை செய்து
வெள்ளை மலரெடுத்து
வினாயகரைப் பூசை செய்து
நவகிரகப் பூசை
நாயகியும் தான் செய்து
அன்னையும் தந்தையும்
அருந்தவங்கள் தான் செய்து
முந்தித் தவமிருந்து
முன்னூறு நாள் சுமந்து
மங்களமாக
மைந்தரைப் பெற்றெடுத்தாள்
மலரில் உதித்தவர்தான்
மா தவத்தால் வந்தவர்தான்
பூவில் உதித்தவர்தான்
புண்ணியத்தால் வந்தவர்தான்
தவத்தால் பிறந்தவர்தான்
தருமத்தால் வந்தவர்தான்
பிச்சிப் பூத் தொட்டிலிலே
புரண்ட குமாரர்தான்
மல்லிகைப் பூந் தொட்டிலிலே
வளர்ந்த குமாரர்தான்
ஒன்றாம் வயதில்
ஒக்கப் பணி பூண்டு
இரண்டாம் வயதில்
ரத்ன மணி ஊஞ்சலிட்டு
மூன்றாம் வயதில்
முத்தால லங்கரித்து
நான்காம் வயதில்
நடக்கப் பணி பூண்டு
பத்துப் படித்துப்
பரீட்சை எல்லாம் தான் எழுதி
பாண்டித் துரைராசா
பகல் உண்டு கைகழுவி
தாம் பூலம் தரித்து
சகுனம் பார்த்து சைக்கிளேறி
கச்சேரி போயி
கமலப்பூப் பாண்டியரும்
கோர்ட்டாரு எதிரில்
குரிச்சி மேல் உட்கார்ந்து
ஜட்ஜு துரைகளுடன்
சரிவழக்குப் பேசையிலே
புத்தகமும் கையுமாய்
பேச்சுரைக்கும் வேளையிலே
கண்டு மகிழ்ந்தார்கள் எங்க
கமலப்பூ ராசாவை
பார்த்து மகிழ்ந்தார்கள் எங்க
பாண்டித் துரைராசாவை
பெண்ணுக் கிசைந்த
புண்ணியர்தான் என்று சொல்லி
கன்னிக் கிசைந்த
கணவர்தான் என்று சொல்லி
மங்கைக் கிசைந்த
மணவாளர் என்று சொல்லி
நங்கைக் கிசைந்த
நாயகர்தான் என்று சொல்லி
வலிய அவர் பேசி
வந்தார் வரிசையுடன்
பெரிய இடந்தானென்று
பெண் தாரேன் என்று வந்தார்
வாருங்கள் என்றார் எங்கள் அப்பா
வரிசை மிகவுடையார்
ஆமென்றான் எங்களம்மான்
அன்பு மிகவுடையான்
பவழ வர்ணச் சமுக்காளம்
பாண்டி மன்னர் போடுமென்றார்
முத்து வர்ணச் சமுக்காளம்
முடி மன்னர் போடுமென்றார்
தங்கக் கிண்ணியிலே
சந்தணமும் கொண்டு வந்தார்.
வெள்ளித் தாம்பாளத்தில்
வெற்றிலையும் பாக்கும் வைத்தார்
வந்த தொரு சங்கதியை
வாய் திறந்து சொல்லுமென்றார்
நாங்கள் வந்த சங்கதியை
நல முடனே சொல்லுகிறேன்
எங்கள் பொற் கொடிக்கு
உங்கள் புத்திரரைக் கேட்டு வந்தோம்
எங்கள் ஏந்திழைக்கு
உங்கள் இந்திரரைக் கேட்டுவந்தோம்
எங்கள் பைங்கிளிக்கு
உங்கள் பாலகரைக் கேட்டு வந்தோம்
கலியாணப் பேச்சு
காதாரக் கேட்டு வந்தோம்.
சந்தோஷமாகிச்
சரீரமெல்லாம் பூரித்து
மைந்தருக்குக் கல்யாணம்
மகிழ்ச்சியுடன் செய்வதற்கு
பொருத்தமது பார்க்க
புரோகிதரைத் தானழைத்து
வந்த புரோகிதருக்கு
மாம்பலகை போடு மென்றார்
கூட வந்த புரோகிதருக்கு
குரிச்சுகளும் போடுமென்றார்
சோழி பரப்பிச்
சொல்லு மென்றார் பஞ்சாங்கம்
பாசி பரப்பிப்
பாரு மென்றார் பஞ்சாங்கம்
ஐந்து பொருத்தம்
பொருந்திற்று ஏந்திழைக்கு
ஆறு பொருத்தம்
பொருந்திற்று அருங்கிளிக்கு
பத்துப் பொருத்தம்
பொருந்திற்று பாண்டியற்கு
செல்லக் கலியாணம்
சிறப்பாக நடத்தவென்று
நல்ல நாள் பார்த்து
நாள் முகூர்த்தம் தானும் வைத்தார்
செல்வருக்குக் கல்யாண மென்று
சீமையெங்கும் பாக்கு வைத்தார்
புத்திரர்க்குக் கல்யாணமென்று
பூமியெங்கும் பாக்கு வைத்தார்
தட்டாரைத் தானழைத்துத்
தாலி சமையுமென்றார்
அரிசி போல் மாங்கலியம்
ஆரிழைக்குச் சமையுமென்றார்
உளுந்து போல் மாங்கலியம்
உத்தமிக்குச் சமையுமென்றார்
தாலி சமைக்க வென்று
தாம்பூலம் தான் கொடுத்தார்
வாழைமரம் நட்டி
வாசல் அலங்கரித்து
பாக்குமரம் நட்டி
பந்தல் அலங்கரித்து
அம்மி வலமாக
அரசாணி முன்பாக
அரகரா மாங்கலியம்
ஆரிழைக்குக் கட்டுமென்றார்
சிவா சிவா மாங்கலியம்
திருக்கழுத்தில் கட்டுமென்றார்
பூவும் மணமும்
பொருந்திய தன்மைபோல்
தேவியும் மன்னவரும்
சேமமாய் வாழ்ந்திருங்கள்
பாலும் சுவையும் போல்
பார் தனிலே எந்நாளும்
பூ மகளும், நாயகனும்
பொற்பாக வாழ்ந்திருங்கள்
கன்னியோட கற்பும்
கணவனோடு மெய்மொழியும்
இந்நில மெல்லாம் விளங்க
இன்பமாய் வாழ்ந்திருங்கள்
ஆயுசு தீர்க்கமுடன்
அம்மனுட தன்னருளால்
நாயகனும், நாயகியும்
நலமாக வாழ்ந்திருங்கள்
தலைப்பிள்ளை ஆண் பெறுவீர்
தகப்பனார் பெயரிடுவீர்
மறுபிள்ளை பெண் பெறுவீர்
மாதா பெயரிடுவீர்
பிள்ளை பதினாறும் பெற்று
பெரு வாழ்வு வாழ்ந்திருங்கள்
மக்கள் பதினாறும் பெற்று
மங்கலமாய் வாழ்ந்திருங்கள்
ஆல்போல் தழைத்து
அருகு போல் வேரூன்றி
நலமுடனே எந்நாளும்
ஞானமுடன் வாழ்ந்திடுவீர்
போடுங்கள் பெண்கள்
பொன்னார் மணிக்குலவை
இன்னு மொரு குலவை
இரு வாயும் பொன் சொரிய
குறிப்பு : `பதினாறும் பெற்று` என்ற சொற்றொடருக்கு புதிய பொருள் கூறப்படுகிறது. `பதினாறு செல்வங்கள்` என்று பொருள் கூறி, பதினாறு செல்வங்களின் பட்டியலும் கூறப்படுகிறது. நாட்டார் நம்பிக்கையில் 16 என்பது மக்களைத்தான் குறிப்பிடும். பிள்ளைப்பதினாறு, மக்கள் பதினாறு என்ற சொற்றொடர்கள் இதனைத் தொடர்பாக்கும்.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம் : சிவகிரி, நெல்லை மாவட்டம்.
--------------