விசுவக் கிராசம்

2587
அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே. 1
2588
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற்
படருஞ் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக்
கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே. 2
2589
செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்துங்
குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தானே. 3
2590
பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும்
திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும்
உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும்
வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே. 4
2591
அளந்து துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக்
கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனு மாமே. 5
2592
இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்தஎன் நந்தி இதயத்து ளானே. 6
2593
கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்
அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்குஞ் சிவபெரு மானே. 7
2594
அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்
நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாமறி யோமே. 8