விநாயகர் துதி

பாடல் 1
ராகம் - நாட்டை; தாளம் - ஆதி
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
பாடல் 2
ராகம் - நாட்டை / மோகனம்; தாளம் - ஆதி
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனமுலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
பாடல் 3
ராகம் - ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் - அங்கதாளம் (8)
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தந்ததனத் தானதனத் ...... தனதான
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.
பாடல் 4
ராகம் - ஹம்ஸத்வனி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன த்ததன தத்தன
தனன தனதன த்ததன தத்தன ...... தனதான
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
எனவெ துகுதுகு துத்ததென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.
பாடல் 5
ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2)
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண ...... மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின் விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.