விறகுக்காரி

மலையில் விறகு வெட்டும் கூட்டத்திலிருந்து தனித்து விட்ட காதலர்களின் உரையாடல் இது.
பெண்: கோடாலி கொண்டல்லவோ
கொடி விறகு தானெடுத்து
தலைவிறகு மாத்த வந்த-என்
தங்கத்தையே வரச் சொல்லுங்க
ஆண்: தோப்புலயோ சாவக்கட்டு
தோகை மயில் போயிருக்கு
கண்டா வரச் சொல்லுங்க
கான மயில் தேடுதிண்ணு
பெண்: நெடு நெடுண்ணு வளர்ந்தவரே
நீலக் குடை போட்டவரே
பச்சைக்குடை எஞ்சாமி
பாதையில் காணியளோ?
தூக்குச் சட்டி கொண்டல்லவோ
தூர வழி போனவரே
தூக்குச் சட்டி கீழே வச்சு
துயரம் தீர்த்தால் ஆகாதோ?
மந்தையில் பந்தடிக்கும்
மாற்றத்துப் புள்ளையாண்டா
ஓடி யடியாதங்க
உங்க மேலே தூசி படும்
இருவரும்: கரும்பு கசக்கிறதும்
கண்ட கனா சொக்கிறதும்
இரும்பு இளகுறதும்
இருவருமே கண்ட கனா.
வட்டார வழக்கு: மாத்த-மாற்ற, காணியளோ-காணீர்களோ?; அடியாதங்க-அலையாதீர்கள்.
சேகரித்தவர்: எஸ். எம். கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்
------------