விவாகரத்து

bookmark

கணவன் அவளை விவாகரத்து செய்ய முற்பட்டு விட்டான். ஆனால் அவள் கணவனைப் பிரிய உடன்படவில்லை. அவளுடைய குழந்தையையும் அவன் அவளிடமிருந்து பிரிக்கும் போது கணவனுடன் வாழாத தன்னைச் சவமாக எண்ணுகிறாள். ஆனால் தன்னுடைய வாழ்க்கைக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் குழந்தையையாவது தன்னிடம் விட்டு விடும்படி பஞ்சாயத்தாரிடம் கெஞ்சிக் கேட்கிறாள்.

பட்டுத் தலையாணி
பாட்ட முடு கச்சேரி
பட்டு நெறங் கொலைஞ்சேன்-நான்
பாட்ட முட்டு சீரௌந்தேன்
புள்ளித் தலகாணி
பொறந்த இடம் கச்சேரி
புள்ளி நெறங் கொலைஞ்சேன்-நான்
பொறந்த இடம் சீரழிஞ்சேன்
சங்கு மணியடிக்கும்
சர்க்காரு என் தொரையே
சாந்திருக்கும் போலீசாரே
சர்க்காரு வக்கீலே-நான்
தந்ததை வாங்கிக்கிட்டு-என்
சவத்தையும் விட்டுடுங்கோ
குண்டு மணியடிக்கும்
கோர்ட்டாரு என் தொரையே-நான்
குடுத்ததை வாங்கிக்கிட்டு-என்
கொளந்தையை விட்டிடுங்க

வாட்டார வழக்கு : பாட்டம்-சீவனாம்சம்.
சேகரித்தவர் : சடையப்பன்
இடம் : அரூர்.
-----------