வெண்பா

"உலகைத் துறந்தீர் உருவைத் துறந்தீர்,
மலையைப் பிளந்துவிட வல்லீர் - இலகுபுகழ்
ஞானம் தவம் கல்வி நான்குந் துறக்கிலீர்,
ஆனந்த மையாஹரீ."
ஆ.ஸ். : "ஹரி நாமத்தை உரைத்தீர்கள். ஆனந்தம். ஆனந்தம்."
த.கொ.செ. : "சந்தேகமென்ன? தெய்வபக்தி தானே மனுஷனுக்கு முக்கியமாக இருக்கவேண்டும்."
ஆ.ஸ். : "இந்த ஆசு கவியைக் கவிராயர் இந்த சரீரத்தை நோக்கிச் சொன்னார். ஆனாலும் நமக்குள்ளே விளங்கும் பரமாத்மா கேட்டு மகிழ்வடைந்தான்."
இப்படிப் பலவிதமாக நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, கவிராயர் மற்றொரு சமயம் வருகிறேன் என்று சொல்லி எழுந்து போய்விட்டார். போகும் போது கவிராயர் மனதில் இந்தச் சாமியார் திருடன் என்று சொல்லிக்கொண்டு போனார். கவிராயர் போனவுடன் ஸந்நியாசி சொல்லுகிறான்:-
"இந்தக் கவிராயருக்குக் கர்வம் அதிகம்போல தோன்றுகிறது."
த.கொ.செ.: "சந்நிதானத்தின் மீது ஆசு கவி பாடியிருந்தும் இப்படிச் சொல்லுகிற முகாந்தரமென்ன?"
ஆ.ஸ்.: "நம்மிடத்தில் அவருக்கு பக்தி ஏற்பட்டது மெய்தான்; ஆனாலும் கர்வி. கர்வியை நம்பக்கூடாது. கபடியை நம்பினாலும் நம்பலாம், கர்வியை நம்பக்கூடாது."
த.கொ.செ.: "கபடியை எப்படி நம்புவது?"
ஆ.ஸ். : "நாம் இருவரும் பரஸ்பரம் நம்புகிறோம். நாம் கபடிகளில்லை."
த.கொ.செ. : "ஆக்ஷேப மென்ன? கர்வியைத்தான் நம்பக்கூடாது. சந்நிதானத்தில் உரைப்பதே உண்மை."
ஆ.ஸ். : "தத்ஸ விதுர் வரேண்யம்."
த.தொ.செ. : "அதன் பொருள் அடியேனுக்கு விளங்கச் சொல்ல வேண்டும்."
ஆ.ஸ்.: "இது ஸந்தியாவந்தன மந்திரம். அதன் பொருளை இதர ஜாதியாருக்குச் சொல்லக் கூடாது. நான் என் மனதுக்குச் சொல்லிக் கொண்டேன்" என்றான்.
பிறகு ஸந்நியாஸி, "நான் போய் வருகிறேன்" என்று சொல்லி எழுந்தான். தட்டிக்கொண்டான் செட்டி மிகவும் பரிவுடன், "இன்றும் நாளைக்கும் மாத்திரம் அடியேன் குடிலில் எழுந்தருளியிருந்து விட்டுப் போக வேண்டும்" என்று வேண்டினான். சிறிது நேரம் அதைக் குறித்துத் தர்க்கம் நடந்தது. கடைசியாக ஸந்நியாஸி அரை மனது போலே ஒப்புக்கொண்டான். செட்டி வீட்டுப் பக்கத்தில் ஒரு தோட்டம். அந்தத் தோட்டத்தில் ரமணீயமான குடிசை. அங்கு சாமியார் குடியேறினான். போஜனம் மாத்திரம் கோயிலிலிருந்து கொண்டு வரும்படி செட்டி திட்டஞ் செய்தான். ஸந்நியாசி பரிசாரகனிடம் `எனக்குப் புளியோதரை பிடிக்காது` என்று ஒரு வார்த்தை மாத்திரம் சொன்னான்.
சாமியாருக்குப் பகல், இரவு போஜனம் பின்வருமாறு செட்டியும் பரிசாரகனுமாகப் பேசித் தீர்மானம் செய்து கொண்டார்கள்:-
காலையில் மூன்றாம் நாழிகை – வெண்-பொங்கல், தயிர்வடை, நெய்த் தோசை, பால்.
நடுப்பகல் -பஞ்சபஹ்ய பரமானத்துடன் அன்னம்.
பிற்பகல் - பழங்கள், பால்.
இரவு - நடுப்பகல் போல்; ஆனால் அன்னத்திற்குப் பதில் தோசை.
இரண்டு நாள் கழிந்தவுடன் செட்டி இன்னும் இரண்டு நாள் இருக்கச் சொன்னான். பிறகு இன்னும் இரண்டு நாள் இருக்கச் சொன்னான். இப்படியாகப் பல தினங்களாயின.
மதுரை மாணிக்கஞ் செட்டி "தட்டிக்கொண்டானிடம் மானி அய்யனை அனுப்பினோமே, ஓரோலைகூட வரவில்லையே? என்ன செய்கிறானோ தெரியவில்லையே" என்று யோசிக்கலானான்.
ஒரு நாள் மாலையில் தட்டிக்கொண்டான் செட்டியும் ஆருட ஸ்வாமியும் பேசிக்
கொள்ளுகிறார்கள்.
செட்டி கேட்டான்: "ஆனைக்கொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வருமென்ற பழமொழியின் அர்த்தமென்ன?"
ஆரூடஸ்வாமி சொல்லுகிறான்: கஜவதனம்; ஆனை யென்பது விநாயகரைக் குறித்தாலும் குறிக்கலாம். அப்போது பூனைக்கிடமில்லை. பூனை இல்லையா? எலி வாகனமோ. இல்லையோ? அந்த எலிக்கு விரோதம் ஒரு பூனை இராதோ? அந்தப் பிள்ளையார் வீட்டு எலிக்கு ஒரு காலம் வந்தால் மேற்படி பூனைக்கு ஒரு காலம் வராதோ? இப்படியும் ஒரு அர்த்தம் சொல்லலாம். வேதாந்தமாகவும் பொருள் சொல்லலாம்; `ஆனையாவது மதம். பூனையாவது விவேகம். மதத்தின் காலம் போனால் விவேகத்தின் பெருமை விளங்கும்` என்பது ஞானார்த்தம்.
இங்ஙனம் ஆரூடஸ்வாமி சொல்வதைக் கேட்டுத் தட்டிக் கொண்டான் செட்டி கேட்டான்: "மதமென்றால் சைவம், வைஷ்ணவம், அப்படியா?"
உடனே ஆரூடஸ்வாமி: "ஹூம்! ஹூம்! ஹூம்! அப்படியில்லை. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் என்ற ஆறும் உட்பகை. இதிலே, ஐந்தாவதாகிய மதம். அதாவது கர்வம். மதம் பிடித்துப் போய் நடக்கிற குணம். அது தீர்ந்த பிறகுதான் விவேக மேற்படும்."
செட்டி கேட்டான்:- "ஸ்வாமிகளே, என்னிடம் ஒரு கணக்குப் புஸ்தகம் இருக்கிறது. இருந்தது - நேற்று மாலையில் இருந்தது. இன்று பகல் பார்த்தேன்; காணவில்லை. அந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது. பகிரங்கமாகத் தேடக்கூடிய புஸ்தகமில்லை. இன்னார் எடுத்தனரென்று தெரியவில்லை. ஸ்வாமிதான் உத்தரவாக வேண்டும்" என்றான்.
அப்போது ஆரூடஸ்வாமி: என்னை யக்ஷிணி திருவாரூருக்குக் கூப்பிடுகிறது. நான் இன்றிரவு புறப்பட்டுப்போய் நாளை மாலையில் அங்கிருந்து திரும்புவேன். வந்த பிறகு சொல்லுவேன்" என்றான்.
செட்டி : "தெய்வமே துணை" என்றான்.
சாமியார் : "குருவுந் துணை" என்றார்.
செட்டி : "எனக்கு நான்மை கிடைக்குமா?"
சாமி: "கிடைக்கும்." செட்டி - "என் துக்கம் தீருமா?"
சாமி : "தீரும்."
செட்டி: "கணக்கு என் கைக்குத் திரும்பி வந்தால் நான் எந்தத் தருமத்துக்கும் அவ்விடத்தில் கட்டுப்பட்டிருப்பேன்."
சாமி : "செட்டியாரே, செட்டியாரே, நமக்கு நீ எவ்விதமான தர்மமும் செய்ய வேண்டாம். உம்முடைய கடமையை நேரே கவனித்தால் அதுவே போதும்."
செட்டி : "என் கடமை யாது?"
சாமி : இப்போது ஒரு ஸூத்ரம் மாதிரியாகச் சொல்லி விட்டுப் போகிறேன். திருவாரூருக்குப் போய் திரும்பி வந்தவுடனே அதை விளக்கிச் சொல்லுகிறேன். அதற்கு முந்தி உமக்கே பொருள் விளங்கினாலும் விளங்கிப் போகும் அந்த ஸூத்ரம் எப்படி என்றால்:- "ம யே ம ஏ" . இவ்வளவுதான். இது கிரந்தம். எழுதி வைத்துக்கொள்ளும்."
செட்டி அப்படியே ஒரு ஓலை நறுக்கில் எழுதி வைத்துக்கொண்டான்.
இரண்டு வாரங்களுக் கப்பால் தஞ்சாவூர்த் தட்டிக் கொண்டான் செட்டிக்குப் பின்வருமாறு ஒரு காகிதம் வந்தது.
மதுரையில் ஆரூட ஸ்வாமி தஞ்சை த.கொ. செட்டியாருக்கு ஆசீர்வாதம்.
நான் தங்களிடம் சொல்லிய ஸூத்திரத்துக்குத் தாத்பர்யம் என்னவென்றால்,
"மற்றவனை யேமாற்றியவனை
மற்றவன் ஏமாற்றுவான்"
ரஸிக சிரோமணி என்ற கழுதை சொல்லுகிறது: "தட்டிக்கொண்டான் செட்டி மதுரை மாணிக்கஞ் செட்டியின் காலிலே போய் விழுந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டான். நஷ்டத் தொகையில் பாதி பெற்றுக் கொண்டு மாணிக்கஞ் செட்டி தனது மைத்துனனை மன்னித்து விட்டான். அவனுடைய இடத்தில் தனது தஞ்சாவூர் காரியஸ்தனாக மானி அய்யனையே நியமனம் செய்தான். ஆரம்பத்தில் மானி அய்யனை உபயோக மில்லாதவனென்றெண்ணி நகத்தது மடமை யென்பதை மாணிக்கஞ் செட்டி தெரிந்துகொண்டு தனக்குப் பார்ப்பான் செய்த உபகாரத்தையும் அவனுடைய திறமையையும் வியந்து அவனுக்குப் பலவிதமான ஸன்மானங்கள் செய்தான். அது போலவே, ஓ, கருவம் பிடித்த மதுகண்டிகை யென்ற குயிற் பெண்ணே, நீ இப்போது என்னை நகைக்கிறாய். இன்னும் சிறிது காலத்துக்கப்பால் என்னுடைய திறமையைக் கண்டு நீயே ஆச்சரியப்படுவாய்" என்றது.
அதுகேட்டு மதுகண்டிகை சொல்லலாயிற்று:- "கேளாய், ரஸிகமாமா, நீயோ தீராத பிடிவாதக்காரனாக இருக்கிறாய். அலையைக் கட்டலாம்; காற்றை நிறுத்தலாம்; மனவுறுதிக் கொண்ட தீரனுடைய தீர்மானத்தை யாவராலும் தடுக்க முடியாது. உன்னிடமிருக்கும் இந்த மனவுறுதியைக் கண்டு உன்மேல் எனக்கு நட்புண்டாகிறது. அது நிற்க, இப்போது நான் உனக்கொரு ரகஸ்யம் சொல்லுகிறேன். அதை சாவதானமாகக் கேள். மலையடிவாரத்திலுள்ள மந்தபுரம் என்ற கிராமத்தில் அரச மரத்தடியிலே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. நாள்தோறும் காலையொருமுறை மாலையொருமுறை அந்தக் கோயிலுக்குப் போய்த் தலையில் மூன்று குட்டுக் குட்டிக் கொள். மூன்று தோப்புக்கரணம் போடு. `பிள்ளையாரே, பிள்ளையாரே, எனக்குச் சங்கீத ஞானம் வேண்டும்` என்று கூவு. பாட்டு தானே வரும். இதற்கு யாதொரு குருவும் வேண்டியதில்லை" என்றது.
"உண்மைதானா?" என்று கழுதை சற்றே ஐயத்துடன் கேட்டது.
அதற்குக் குயில் சொல்லுகிறது: "எனக்கு இந்த மாதிரி தான் சங்கீதம் வந்தது. எல்லாக் குயில்களுக்கும் இப்படித் தான். எங்கள் ஜாதியாருக்கு மாத்திரந்தான் இந்த ரகஸ்யம் தெரியும். இதுவரை இதர ஜாதியாரிடம் சொல்லியதில்லை. நான் உன்னிடமுள்ள அன்பினாலே சொன்னேன்" என்றது.
சரியென்று சொல்லி ரஸிக சிரோமணி துள்ளிக் குதித்துக் கொண்டு போய், மறுநாள் பொழுது விடிந்தவுடனே மந்தபுரத்துப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னே வந்து நின்று கொண்டு, குயில் சொன்ன கிரியைகளெல்லாம் முடித்துத் தன்னுடைய பாஷையில் பாட்டு வர மேண்டுமென்று கூவத் தொடங்கிற்று. உடனே கோயிலில் வந்து பிரதக்ஷிணம் முதலியன செய்துகொண்டிருந்த அடியார்கள் இந்த இரைச்சலைப் பொறுக்க மாட்டாமல் கழுதையைக் கல்லாலெறிந்து காலையொடித்துத் துரத்திவிட்டார்கள். ஆதலால், தனக்கு இயற்கையில் கிடைக்கக் கூடாத பொருளை விரும்பி எவனும் வீணாசை கொள்ளலாகாதென்று விவேக சாஸ்திரி தனது மக்களிடம் கதை சொன்னார்.
அப்போது காளிதாஸன் என்ற பிள்ளை கேட்கிறான்: "கழுதைக்குத் துன்பம் நேரிடவேண்டுமென்ற கெட்ட எண்ணத்துடன் போதனை செய்த குயிலுக்கு ஒரு தண்டனையுமில்லையா?" என.
ஆஞ்சனேயன் என்ற மற்றொரு மகன் : "அப்பா, அந்தக் கழுதை ஸ்வாமியை வந்து கும்பிட்டதே; அதற்குத் தீங்கு வரலாமோ?" என்று கேட்டான்.
அதற்கு விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: "தெய்வபக்திக்கு நல்ல பயனுண்டு. ஆனால் அதனுடன் விவேகம் சேர்ந்திருக்க வேண்டும். விவேகமில்லாதவனுடைய தெய்வபக்திக்கு உறுதி கிடையாது. தெய்வத்தினிடம் ஒருவன் வரங்கேட்கப் போகையிலே முதலாவது விவேகம் கேட்கவேண்டும். விவேகமே இந்த உலகத்தில் எல்லாவிதமான செல்வங்களுக்கும் ஆரம்பம். விவேகமில்லாதவன் குருடன். விவேகத்துடன் சேர்ந்த தெய்வபக்தியே உண்மையானது. அவ்விதமான தெய்வ பக்தியினால் ஒருவன் எடுத்த காரியத்தில் ஜயமடையலாம். இதைக் குறித்து ஒரு கதை சொல்லுகிறேன்" என்றார்.
"அந்தக் கதைக்குப் பெயரென்ன?" என்று பிள்ளைகள் கேட்டார்கள்.
"காட்டுக் கோயில்" என்று விவேக சாஸ்திரி சொன்னார்.
அப்போது காளிதாஸன்: "அப்பா, நான் கேட்டது சொல்லவில்லையே?" என்றான்.
ஆஞ்சனேயன்: "விவேகமில்லாதவன் தெய்வபக்தி செய்தால், அதனால் அவனுக்குத் தீமைதான் விளையுமா?" என்று மறுபடி கேட்டான்.
அதற்கு விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: "இதுவரை சொன்ன பகுதி `பயனறிதல்` எனப்படும். இனிமேலே சொல்லப் போகிற பகுதிக்கு `நம்பிக்கை` என்று பெயர். உங்களுடைய வினாவிற்கு விடை கதை மூலமாகச் சொல்லாமல் நேரே சொல்லி விடுகிறேன். மூடனுக்குச் சங்கட முண்டாக்கி வேடிக்கை பார்ப்பவன் பாவி. அவனுக்கு இந்த ஜன்மத்தில் பலவிதமான தீங்குகள் விளையும். விவேகமில்லாதவன் கூட தெய்வபக்தி செய்வதனால் அவனுக்கு நன்மை ஏற்படாமல் போய்விடாது. ஆரம்பத்திலே பலவித இடையூறுகளுண்டாய், அவற்றிலிருந்து கடைசியாக விவேகம் உண்டாகும், பிறகு தெய்வபக்தி மேன்மையான பயன்களைத் தரும்" என்றார்.