வெற்றிலைப் பாக்கு

bookmark

ஊரில் திருவிழா. வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன் தன் கடை வெற்றிலை, பாக்கு, புகையிலையின் சிறப்பைப் பாடுகிறான்.

தமிழ் நாட்டில் வெற்றிலை ஒரு மங்கலப் பொருள். `சிவந்தவாயும் வெற்றிலையுமாக` என்று மகிழ்ச்சியோடிருப்பவனை வருணிப்பார்கள். விதவைகள் வெற்றிலைப் போடக்கூடாது. மண விழாவின்போது வெற்றிலை வழங்கப்படும். தெய்வங்களுக்கு வெற்றிலை நிவேதனமாக வைக்கப்படும். மணநாள் நிச்சயிக்கும் பொழுது மணமகனின் பெற்றோர்களும், மணமகளின் பெற்றோர்களும் வெற்றிலைப் பாக்கு மாற்றிக் கொள்வார்கள்.

தமிழரின் மங்கலச் சின்னம் வெற்றிலை. மணமாகாத இளம் பெண் வெற்றிலைப் போட்டுக் கொண்டு அவள் வாய் சிவந்தால், அன்பு மிக்க கணவன் அவளுக்கு வாய்ப்பான் என்று ஜோசியம் கூறுவார்வார்கள். மணமானவள், வெற்றிலை போட்டு வாய் சிவந்தால் கணவன் அவள்மீது,பிரியமாக இருக்கிறானென்று தோழியர் அவளை கேலி செய்வர். விழா நாளில் குத்து விளக்கு வைத்து வட்டமாகச் சுற்றி வந்து கும்மியடிக்கும் பெண்கள் வெற்றிலையைப் பற்றி பாடுகிறார்கள்.

வெத்தலைக் கடையைப் பாருங்கோ-ஏ
அஞ்சுகமே கொஞ்சுதமே
வெத்தலையை வாங்கிப் பாருங்கோ
பாக்குக் கடயப் பாருங்கோ-ஏ
அஞ்சுகமே கொஞ்சுதமே
பொவிலை வாங்கிப் பாருங்கோ
சுண்ணாம்பு கடையைப் பாருங்கோ-ஏ
அஞ்சுகமே கொஞ்சுதமே
சுண்ணாம்புக் வாங்கிப் பாருங்கோ
வாய்லே போட்டுப் பாருங்கோ-ஏ
அஞ்சுகமே கொஞ்சுதமே
வாய்சிவக்கும் அழகப் பாருங்கோ

உதவியவர்: செல்வராஜு; சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
-------------