வைப்பாட்டி

bookmark

ஒரு உயர் ஜாதி வாலிபன் பள்ளர் ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தான். சாதிக் கட்டுப்பாடுகளால் அவளை மணம் செய்து கொள்ள முடியவில்லை. ஆனால் இருவரும் குடும்பங்களைத் துறந்து ஒரு குடிசை கட்டிக் கொண்டு தனியாக வாழ ஆரம்பித்தனர். இருவரும் கருத்தொருமித்துக் கணவன் மனைவியுமாக வாழ்ந்தனர்.
ஒரு நாள் அவனுடைய முறைப் பெண் அவனைப் பார்க்கிறாள். "நாட்டில் மழை பெய்யவில்லை. நீதி தவறினால் மழை பெய்யாது அல்லவா? நீ வைப்பாட்டி வைக்கப்போய் ஊருக்கே பஞ்சம் வந்து விட்டது" என்று சொல்லுகிறாள். அவன் தனது செய்கையை நீதியற்ற செய்கை என்று நினைக்கவில்லை. அவளை வைப்பாட்டி என்றும் கருதவில்லை. அவளைத் தன் மனைவியாகவே அவன் நினைக்கிறான். `அவளை விட்டு நான் வரப்போவதில்லை" என்று சொல்கிறான்.

பெண்: மழைக்கே அதிகாரி
மார்க்க முள்ள சுக்கிரரே 
வப்பாட்டி தேடப் போயி 
வாடுதையா நம்ம தேசம்

ஆண்: வாடுனா வாடுதடி 
வரப்பு வசங்குதடி 
ஓடிவரவும் மாட்டேன் 
தேவேந்திரப் பெண்ணை விட்டு 
சாதிப் பிரிவு தானா 
சாத்திர மெல்லாம் ஒண்ணுதானே 
மருவில்லா மாங்கனிய 
மறக்கமனம் கூடுதில்ல

வட்டார வழக்கு : தேவேந்திரப் பெண்-பள்ளர் சாதிப் பெண்.

சேகரித்தவர்: S.M. கார்க்கி 
இடம்: நெல்லை மாவட்டம்.
--------------