ஆளுக்கொரு தேசத்தில்

bookmark

கணவன் அயல் நாட்டில் உயிர் நீத்தான்.கருமாதியன்று சந்தனக்கட்டையின் மீது வைத்து எரித்து சாம்பலாக்கி அதனைக் கரைத்தார்கள். தீர்த்தத்தில் கரைக்க சாம்பல்கூட அவன் உடலிலிருந்து அவளுக்குக் கிடைக்கவில்லை. திடீரென்று அவன் இறந்து போனதற்கு யார் தீ நாக்குக் காரணமோ என்று அவள் எண்ணுகிறாள்.

ஆல மர மானேன்
ஆகா பெண்ணானேன்
ஆகா பெண்ணானேன்
ஆளுக்கொரு தேசமானோம்
புங்கம் பழமானேன்
பொல்லாத பொண்ணானேன்
பொல்லாத பொண்ணானேன்
புள்ளிக் கொரு தேசமானோம்
வேப்பம் பழமானேன்
வேண்டாத பொண்ணானேன்
வேண்டாத பொண்ணானேன்
விதிப் பட்டு நிக்க னில்லா !
தங்கப் புடம் போட்டேன்
தனி வயிரச் சாம்ப லிட்டேன்
தனி வயிரச் சாம்ப லிட்டேன்
தண்ணியிலே கரைச்சு விட்டேன்
பொன்னப் புடம் போட்டேன்
போகவரச் சாம்ப லிட்டேன்
போகவரச் சாம்ப லிட்டேன்
பொய்கையிலே கரைச்சு விட்டேன்
வெள்ளிப் புடம் போட்டேன்
வேனக் கரைச் சாம்ப லிட்டேன்
வைகையிலே கரைச்சு விட்டேன்
பச்சைப் பசுங்கிளி ஐயா
பாலடைக்கும் தேகமய்யா
பாலடைத்த தேகத்திலே
பட்டிச்சோ தீ நாக்கு
நீலப் பளிங்கி ஐயா
நெய்யடைக்கும் தேகமய்யா
நெய்யடைக்கும் தேகத்திலே
தீண்டிச்சோ தீ நாக்கு.

உதவியவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
----------