கொல்லைப் புஞ்செய் ஏலமாச்சே

bookmark

கணவன் உயிர் வாழும் காலத்தில் சீமை அதிகாரிகள் எல்லாம் வீட்டிற்கு வருவார்கள். அவனும் பெரிய பண்ணையாராக வாழ்ந்து வந்தான். அவன் மறைந்ததும் அவன் காலத்தில் ஏற்பட்ட கடன்களுக்காக, குடும்ப சொத்து முழுவதும் ஏலத்தில் போய்விட்டது. இதை நினைத்து வருந்தி,மனைவி ஒப்பாரி சொல்லுகிறாள்.

செத்திருவ எண்ணு சொல்லி-நான்
சிந்தையிலும் எண்ணலையே
மடக்கும் ஜமக்காளம்
மகிழம்பு மெத்தையுமே
மாயமா உயிர் போக
மனசிலேயும் எண்ணலையே
சுருட்டு ஜமக்காளம்
துத்திப்பூ மெத்தைகளாம்
சூட்சுமமா உயிர் போகச்
சிந்தையிலும் எண்ணலையே
வந்திச்சே செல்வம்
வையை மணல் போல
சிந்திச்சே செல்வம்
சீமானே இல்லாமல்
சந்திரர் கூட்டம்
தணிச்ச முதலி கூட்டம்
இந்திரனார் இல்லாமே
இறங்கிச்சே ஷேத்திரங்கள்
பத்தேரும் பண்ணைகளும்
பாட்ட மரக்காலும்
எட்டேரும் பண்ணைகளும்
ஏணி வச்ச பட்டறையும்-இப்போ
மரக்கா இழந்திடுச்சே-நம்ம
மந்த புஞ்செய் ஏலமாச்சே
நாழி இழந்திருச்சே
நடுக் கிணறு ஏலமாச்சே
கூசா இழந்திருச்சே-நம்ப
கொல்லை புஞ் செய் ஏலமாச்சே

சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
-------------