ஒரு மச்சமுண்டு

காதலி மலைக்குப் புல்லறுக்கச் செல்லுகிறாள். அவன் விறகு வெட்ட அதே பாதையில் செல்லுகிறான். இருவரும் எப்படியோ சேர்ந்து நடக்கிறார்கள். உள்ளத்தின் உவகை பாட்டாக வெளிப்படுகிறது.
ஆண்:
கல்லருகாம், புல்லருகாம்
கடலருகாம் பூந்தோட்டம்
புல்லறுக்கப் போற பிள்ளை-நீ
பூமுடிஞ்சாலாகாதோ?
பெண்:
நத்தத்து மேட்டு வழி
நான் போறேன் ஒத்த வழி
பிச்சிச்சரம் போலே-நீ
பின்னே வந்தாலாகாதோ?
ஆண்:
கண்டாங்கிச் சீல கட்டி
கரை வழியே போற புள்ள,-உன்
கண்டாங்கிச் சீலையிலே-நான்
வண்டாய்ச் சுழலுதனே
குளத்திலொரு அல்லியுண்டு
கூந்தலொரு பாக முண்டு
இடை சிறுத்த அல்லிக்கு
இடையில் ஒரு மச்ச முண்டு
வட்டார வழக்கு: புள்ள-பிள்ளை.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி
-------------------