காது குத்தக் காணிக்கை

குழந்தைக்குக் காது குத்தப் போகிறார்கள். அதற்கு மாமன் என்ன சீர் கொண்டு வருவான் என்று தாய் அனுமானம் செய்து பார்க்கிறாள். ஆசாரியை அழைத்துக் காதுக்குக் கடுக்கண் செய்யச் சொல்லுகிறாள்.
தோழியரை அழைத்துப் பாலனுக்குக் கண்திருஷ்டி வராமல் திருஷ்டி சுற்றச் சொல்லுகிறாள்.
பிறர், குழந்தையின் அழகைக் கண்டு ரசித்து விட்டால் அதற்கு நோய் வரும் என்று தமிழ்த் தாய்மார்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை புராதன மந்திரவாதத்தின் அடிப்படையில் எழுந்தது. சில கண்களுக்குத் தீமையை விளைவிக்கும் சக்தியுண்டென்பது மந்திரவாதக் கருத்து. கண்பட்டால் நோய் நொடி வரும் என்பது நம்பிக்கை.
காது குத்துவதும் குழந்தை உடலில் ஏதாவது சிறுகாய மொன்றை ஏற்படுத்துவதும் எமனை ஏமாற்றச் செய்யும் தந்திரங்கள். அழகான குழந்தைகளைக் கண்டு எமன் ஆசைப் பட்டு விடுவானாம். அதனால் குழந்தைகள் இறந்துபோகும். எமனை ஏமாற்ற உடலில் சிறுகாயம் ஏற்படுத்திவிட்டால் போதுமாம். இந்த நம்பிக்கை தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், மத்திய ஆசியாவிலும், உலகமெங்கும் நிலவி வந்தது.
குழந்தையின் ஆயுளைப் பாதுகாக்கும் சடங்கு ஆகையால், இதனைப் பெண்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவர். இன்று இவ்வழக்கத்தின் உட்பொருள் நமது தாய்மாருக்குத் தெரியாது.
சீதைக்கும் இராமருக்கும்
சிறந்த கலியாணம்
சீரான மேளம் வரும்
சிதம்பரத்து சங்கு வரும்
காசியிலே மாலைவரும்
கண் குளிர்ந்த இராமருக்கு
பால் போல் நில வடிக்க,
பரமசிவர் பந்தடிக்க
பரமசிவர் பந்தை நீ
பார்த்தடிக்க வந்தவனோ!
ஈக்கி போல் நிலவடிக்க,
இந்திரனார் பந்தடிக்க
இந்திரனார் பந்தை நீ
எதிர்த்தடிக்க வந்தவனோ!
முத்தளக்கும் நாழி!
முதலளக்கும் பொன் நாழி
வச்சளக்கச் சொல்லி
வரிசையிட்டார் தாய்மாமன்
மாம்பிஞ்சு கொண்டு,
மதுரைச் சிமிக்கி கொண்டு
காது குத்த வாராக
கனக முடி உங்களம்மான்
மானா மதுரையிலே
மாட்டையும் மந்தையிலே
மாட்டு விலை கூற வந்த
மன்னன் மருமகனே!
என் அரசன் காது குத்த
என்ன செல்லும் ஆசாரி
பாக்கு பதக்கு
பச்சரிசி முக்குறுணி
எள்ளு இரு நாழி
இளந் தேங்காய் முந்நூறு
அள்ளி விளம்புங்க நான் பெற்ற
அருமை மகன் காதரிசி
சிந்தி விளம்புங்க
செல்ல மகன் குத்த
பச்சை மூங்கில் வெட்டி
பவள மூங்கில் நார் உரித்து
சொச்ச மூங்கில் வெட்டங் குள்ள சுப்பையா
சொன்ன வரம் தந்தாரோ!
ஏறய்யா இராவணா!
இறங்கய்யா மேடவிட்டு
பாரய்யா இராவணா! இராமர்
படை போகிற பாவனையே
பொட்டல்ல பொய்பலவா துரோபதைக்கு
அத்தனையும் சாதிலிங்கம்,
சாதிலிங்கம் மேலிருந்து
துரோபதை தருமர் கதைகேட்டாளோ!
பத்து வருஷமா என் கண்ணே-நீ
பாலனில்லா வாசலிலே!
கை விளக்குக் கொண்டு நீ
கலி தீர்க்க வந்தவனோ!
கண்ணே நீ உறங்கு என் கண்ணே
கான மயில் நீ உறங்கு
கண்ணுக்குக் கண்ணெழுதி-உன்
கடைக் கண்ணுக்கு மையெழுதி
கண்ணான கண்ணுக்கு என் ஐயா!
உனக்குக் கண்ணேறு தையாமல்
சுண்ணாம்பு மஞ்சளும்
கத்தி யெறி சூரியர்க்கு
வட்டார வழக்கு: கண்ணேறு; தையாமல்-கண்பட்டு விடாமல்.
சேகரித்தவர்: குமாரி பி. சொரணம்
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
--------------