தாலாட்டு: தந்தையும் மாமனும்

bookmark

சிவகிரி ஜாமீனில் வேலை பார்த்து வருகிறார் தந்தை. சிறுவனிடம் அவர் பெருமையைப் பற்றிப் பேசுகிறாள் தாய். அரைக்காசு சம்பளமென்றாலும் அரண்மனை சேவகமல்லவா? கைகட்டி வாய் பொத்தி ஜமீன்தாரிடம் ஊழியம் செய்யும் வேலைக்காரர் மனைவியின் கற்பனையில்,
"கோர்ட்டுத் துறந்து குறிஞ்சிமேல் உட்கார்ந்து,
கேஸை விசாரிக்கும் கவர்னரோ உங்களப்பா"
கவர்னராகி விடுகிறார். அது போலவே அவளது சகோதரன் வில்லைச் சேவகனாக இருந்த போதிலும் அவளுடைய கற்பனையில்,
`தங்க வில்லைச் சேவுகரோ, உங்க மாமா
தரும துரை வைத்தியரோ?
பூமியில் உள்ளவர்க்குப்
பிணிதீர்க்கும் வைத்தியரோ?`
இவ்வாறு உயர்ந்து விடுகிறான். தந்தையும், மாமனும் குழந்தைக்குப் பால் குடிக்க வாங்கும் சங்கு, தேய்த்துக் குளிக்க வாங்கும் எண்ணெய், காது குத்துச் சடங்குக்குக் கொண்டு வரும் வரிசைகள் இவையெல்லாம் அவள் கற்பனைத் திரையில் விரிகின்றன.

"என்னரசே என் கனியே என் ஐயா
இது நாளும் எங்கிருந்தாய்! 
மாசி மறை விருந்தேன் 
மழைமேகம் சூழ்ந்திருந்தேன் 
மாதம் சென்றவுடன் 
மாதாவைப் பார்க்க வந்தேன் 
ஸ்ரீரங்கம் செந்திமலை நீ 
சேவிக்கும் பழனி மலை 
பழனிமலைக் கந்தனோ நீ 
பாதம் பணிந்த வனோ 
சங்கரலிங்கம் என் ஐயா நீ 
தனிக்கோடி இராமலிங்கம்
பூரிலத்து லிங்கத்தை நீ 
பூசை செய்ய வந்தவனோ! 
மான் கண்டேன் உன்னைப் போல் ஒரு 
மயில் கண்டேன் கானலிலே 
தேன் கண்டேன் கூட்டிலே 
உன்னைப் போல் 
ஒரு சிலை கண்டேன் கோயிலே 
தொந்தி குலுங்க 
துடை குலுங்க வேட்டி கட்டி 
அந்தி நடை நடந்து உங்களப்பா 
அதிகாரி வந்திறங்கி 
கோட்டுத் துறந்து 
குறிஞ்சிமேல் உட்கார்ந்து 
கேசை விசாரிக்கும் 
கவர்னரோ உங்களப்பா! 
அரைக்குகந்த துயிலுடுத்தி 
அரண்மனைக்குப் போகையிலே 
துரைக் கிசைந்த வார்த்தை சொல்லும் 
உங்களப்பா ஜோதிக்கிளி வாயாலே. 
வேட்டி நயமோ உங்களப்பாவுக்கு 
வெளுக்க வண்ணான் கை மெதமோ, 
சல்லா மெதமோ உங்களப்பா 
சாமி கெட்டும் துப்புரவோ 
சீராட்டு நோம்பு 
சிவ நோம்பு நாளையிலே 
உனக்குத் தாலாட்ட வாராக 
மதுரைத் தாசிமார் எல்லோரும்

வட்டார வழக்கு: பூரியத்து- பூர்வீகமான.

சேகரித்தவர்: குமாரி P. சொரணம் 
இடம்: சிவகிரி
------------