காய்க்காத மரம்

bookmark

அவள் தன் பிறந்த வீட்டுக்குப் போகாமலேயே இருந்து விட்டாள். சந்தர்ப்பங்களும், சூழ்நிலையும் அப்படி ஒரு போக முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவள் திடீரென்று பிறந்த வீட்டிற்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.காரணம் அவள் தந்தை உயிர் நீத்ததாக வந்த செய்தியே.

`நான் சலித்து ஒருநாள்கூட என் பிறந்த வீட்டில் போய் நிம்மதியாக இருந்து வரவில்லையே. அப்படி நான் பிறந்தவீடு வந்ததும் உங்கள் சாவுக்குத்தானா?` என்று இறந்த தன் தந்தையை எண்ணி ஒப்பாரி பாடுகிறாள் :

ஏலக்காய் காய்க்கும் மரம்
எளச்சி வந்தா தங்கும் மரம்
ஏலக்காய் காய்க்கலியே
எளச்சி வந்தும் தங்கலியே
ஜாதிக்காய் காய்க்கும் மரம்
சலிச்சு வந்தா தங்கும் மரம்
ஜாதிக்காய் காய்க்கலியே
சலிச்சி வந்தும் தங்கலியே

வட்டார வழக்கு : எளச்சி-இளைத்து ; சலிச்சி-சலித்து.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
--------------