சட்டம் பொருந்தாது

முறை மாப்பிள்ளைமார் வயதில் சிறியவர்களாக இருந்தாலும், அவர்களிடம் நெருங்கி விளையாடும் உரிமை முறைப் பெண்களுக்கு உண்டு. அவர்களுடைய பேச்சில் கணவன்-மனைவி உறவுக்குரிய காதல் பேச்சுகள் காணப்படும். மணமான காதலர்களிடையே இப்பேச்சு தாராளமாக இருக்கும். மணமாகிவிட்டால் சிறிதளவு கட்டுப்பாட்டோடு, கேலியும் கிண்டலும் ஊடாடும். இவ்வழக்கம் பண்டையக் குழுமண முறையின் எச்சம் என்று முன்பே குறிப்பிட்டுள்ளேன். முறை மாப்பிள்ளைகள் முறைப் பெண்களை, கொழுந்தி, மதினி, மாமன்கள், அத்தை மகள் என்று குறிப்பிடுவர். முறைப்பெண்கள், மாப்பிள்ளைகளை கொழுந்தன், மச்சான், கொழுந்தப் பிள்ளை என்று அழைப்பார்கள். முறைப் பெண்களும், முறை மாப்பிள்ளைமாரும் கேலியாகப் பேசிக் கொள்ளும் உரையாடல் ஒன்று இப்பாடலில் காணப்படுகிறது.
கொழுந்தி : ஏறாத மலைதனிலே
இலந்தை பழுத்திருக்கு
ஏறி உலுப்புங்களேன்
இளைய கொழுந்தன் மாரே
கொழுந்தன் : ஏறி உலுப்பிடுவேன்
இங்கும் மங்கும் சிதறிடுவேன்
பார்த்துப் பிறக்குங்க
பாசமுள்ள மதினிமாரே
கொழுந்தி : இலந்தைப் பழம் போல
இருபேரும் ஒரு வயது
கொழுத்த புள்ள நான் வாரேன்
கொண்டணைச்சிப் போயிருங்க
கொழுந்தன் : கொண்டும் அணைச்சிருவேன்
கொடுங்கையிலே ஏந்திருவேன்
சரியான கொங்கைக்குச்
சட்டம் பொருந்தாதே
சித்தருவா கொய்யாதோ
சிறு மிளகு உறையாதோ
சிறுவன் கொடுத்த காசு
செல்லாதோ உந்தனுக்கு
கொழுந்தி : செம்மறி வீசக்காரா
செவத்த மச்சான் ஏ கொழுந்தா
செத்த வளர்ந்தி யிண்ணாச்
சேந்திருவேன் உன் மேலே
புதுப்பானை கருப்பழகா
போர்மன்னா தன்னழகா
சிரிப்பாணி ஏ கொழுந்தா
தினம் வருவாய் இந்த வழி
செந்தட்டிக் கொழுந்து போல
சிரிப்பாணி ஏ கொழுந்தா
இன்னும் கொஞ்சம் வளர்ந்தியானா
இறந்தாலும் மறப்பதில்லை
வட்டார வழக்கு : பிறக்குங்க-பொறுக்குங்கள் ; போயிருங்க-போய் விடுங்கள் ; சட்டம்-உடல் ; சித்தறுவா-சிறிய அறிவாள் வளர்ந்தியானா-வளர்ந்தாயானால் (வளர்ந்தாக்கி) என்றும் பேச்சு வழக்கு ; செந்தட்டி-மேலே தேய்த்தால் அரிச்சலை உண்டாக்கும் இலை.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம் : அரூர்.
-----------