நல்லவனும் கெட்டவனும்

bookmark

ஊரில் நல்லவர்கள் இருப்பார்கள். பிறர் துன்பம் கண்டு பொறுக்காமல் விரைந்து வந்து உதவி செய்பவர்கள் சிலர். ஊரில் உள்ளவர்களது கஷ்டங்களைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்களும் ஊரிலிருப்பார்கள். முதலில் கூறப்பட்டவர்களைப் புகழ்ந்தும், இரண்டாவது கூறப்பட்டவர்களை இகழ்ந்தும், பாடல்கள் தோன்றும். ஊருக்கு உழைத்தவர்களைப் போற்றும் பண்பு தமிழ்நாட்டுப் பாமர மக்களிடையே சிறப்பாகக் காணப்படுகிறது. பிறரை ஏசுவதைத் தமிழ் பாமர மக்கள் விரும்புவதில்லை. ஆகவே கண்டனம் தெரிவிக்கும் பாடல்கள் ஒன்றிரண்டே காணப்படும். சிவகிரியில் வேலுச்சாமி என்றொருவர் இருந்தார். அவர் நற்பண்புகள் உடையவர். ஊரில் யாருக்கு என்ன ஆபத்து வந்தாலும் அவர் ஓடிவந்து உதவி செய்வார். அவர் இறந்து போய் விட்டார்.

ஊரில் எல்லோரோடும் வம்பு செய்து கொண்டு பிறர் துன்பத்தில் லாபம் கண்டு வாழ்ந்த ஆதினமிளகி, என்றொருவன் சிவகிரியில் வாழ்ந்து வந்தான். நல்லவர் இறந்து விட, ஊருக்கும் நாட்டுக்கும் பொருந்தாத கெட்டவன் வாழ்வதை எண்ணி ஊரார் வருந்துகிறார்கள்.

ஏறுறது வில்லு வண்டி
இறங்குறது காப்பரவு
பாக்கிறது வன்னிய மடம்
பாம்புக் கண்ணு சையலில,
கையில துறவு கோலாம்
காலில் மிதியடியாம்
டானாக் கம்பு புடிச்சுவரும்
தங்கமுடி வேலுச்சாமி
ஈரத்தலை உணத்தி
கிண்ணரி போல் கொண்டை போட்டு
வாரானாம் வேலுச்சாமி
வாச லெல்லாம் பூ மணக்க
நடுவீட்டு வாசலில
லட்ச சனம் கூடி ருக்கும்
வேலுச்சாமி இல்லாம
விரிசீணு இருக்குதய்யா
வாச நிறைஞ் சிருக்கும்
வந்த ஜனம் சூழ்ந்திருக்கும்
நடு வீட்டு வேலில்லாம
நல்லாவும் இல்லையப்பா
கடுமையா உறக்கத்தில
கணக்கான தூக்கத்தில
கூப்பிட்ட சத்தத்தில வேலுச்சாமி
குயிலுப் போல வந்திருவார்
சாஞ்சு நடநடந்து
சைசான கொண்ட போட்டு
போறாராம் வேலுச்சாமி
பொன்னு முடி களஞ்சியமே
ஊருக்கும் பொருந்திருக்கும்
உலகத்துக்கும் ஒத்திருக்கும்
நாட்டுக்கும் பொருந்திருக்கும்
நடுவீட்டு வேலுச்சாமி
ஊருக்கும் பொருந்தாத
ஒட்டச் சளவட்ட
நாட்டுக்கும் பொருந்தாத
நடு வீட்டு ஆதின முளகி

வட்டார வழக்கு: காப்புரவு-தோட்டவெளி; துறவுகோல்-திறவு கோல்; டானாக் கம்பு-வளைந்த கம்பு; கிண்ணரி-ஒரு வகை மேளம்; சைசான-அழகான; சளவட்ட-வீண் பேச்சு பேசுபவன்; ஆதின முளகி-ஒருவரின் பெயர்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி.
-----------