சரவணப் பொய்கை

bookmark

அந் நிலையில் வாயு தேவனையும் அங்கித் தேவனையும் நோக்கி, "நீங்கள் இருவரும் இச் சுடர்களை முறையாகச் சுமந்து சென்று கங்கையாற்றில் சேர்த்துவிடுங்கள். கங்கை அவற்றைச் சரவணப் பொய்கையிற்கொண்டு சேர்ப்பாள். இதுவே நும் பணி” என்றார் ஈசன். அவ்வுரை கேட்ட தேவர் இருவரும் திடுக்கிட்டு, மும்முறை இறைவன் திருவுடியில் விழுந்து எழுந்து, "பெருமானே ! ஒரு நொடிப்பொழுதில் உலகமெல்லாம் பரவிய இந் நெருப்பு, நின் திருவருளாற் குறுகி நின்றது. இதனை அடியேம் தாங்கவல்லமோ? இத் தீப்பொறிகளை நெருங்க நினைத்தாலும் எமது மனம் வெதும்புகின்றது; மேனி முழுதும் வியர்க்கின்றது. இவற்றை எவ்வாறு சுமந்து செல்வோம்?" என்று கூறினார்கள். அது கேட்ட ஈசன், "இப் பொறிகளைத் தாங்கிக் கங்கையளவும் சென்றிட, உங்கள் இருவருக்கும் வேண்டிய வலிமை தருகின்றோம்" என்றருளினார். இருவரும் அப் பணியாற்ற இசைந்தனர். பின்னர், அங்கு நின்ற தேவர்களை நோக்கி, "இப் பொறிகள் சரவணப் பொய்கையை அடைந்து, ஒரு குழந்தையாய் வளர்ந்து, சூரன் குலத்தை அழித்து ஒழிக்கும். இனி நீங்கள் யாவரும் போகலாம்” என ஈசன் விடை கொடுத்தனுப்பினார்.

சிவபிரானுடைய திருவருள் முறைமையைக் கங்கை அறிந்து, தன்பால் வந்து சேர்ந்த பொறிகளைத் தலைமீது தாங்கிச் சென்று, ஒரு நாழிகையில் சரவணம் என்னும் பொய்கையிற் சேர்த்தாள். அங்கு அவை செந்தாமரை போல் விளங்கின. அருவமாகவும் உருவமாகவும், ஆதியாகவும் அநாதியாகவும்,ஒன்றாகவும் பலவாகவும் நின்ற அரும் பெருஞ்சோதியே அனற்பிழம்பாகிய மேனியும் ஆறு முகமும் பன்னிரு கரமும் கொண்டு உலகம் உய்யுமாறு முருகனாகத் தோன்றிற்று. வேறு எவரிடமும் இன்றிச் சிவபெருமானிடம் அமைந்த ஆறு குணங்களும் உருவெடுத்தாற் போன்று, சரவணப் பூம்பொய்கையில் எழுந்தருளிய முருகன் மன்னுயிரைக் காத்தற்பொருட்டு ஆறு முகங்களைக் கொண் டருளினார். மறையாலும், வாக்காலும், மனத்தாலும் அளவிட இயலாது எங்கும் நிறைந்து விளங்கும் ஈசன், கருணை கூர்ந்து அறுமுக உருவாய்த் தோன்றிச் சரவணப் பொய்கையில் நறுமணங்கமழும் தாமரை மலரில் வீற்றிருந் தருளினார். வளமார்ந்த சரவணப் பொய்கையில், இதழ் நெருங்கிப் பூத்த தாமரை மலரில், சராசரங்களையெல்லாம் காத்தருளும் கருணையால், ஒப்பற்ற குமாரக் கடவுள் இளஞ் சிறு குழந்தைபோல இனிது ஆமர்ந்திருந்தார்.

அப்பொழுது, திருமால் முதலிய தேவர்கள், கார்த்திகைப் பெண்களை அழைத்து, "சொல்லுதற்கரிய பெருமை வாய்ந்த சரவணப் பொய்கையில் சண்முகப்பெருமான் ஒரு குழந்தை போலத் தோன்றுகின்றார். நீங்கள் அறுவரும் பாலமுதம் ஊட்டி அவரை வளர்ப்பீராக” என்றனர். அதற்கு இசைந்து அவர்களும் சரவணப் பொய்கையிற் சென்று சேர்ந்தார்கள்; குமாரக் கடவுளைத் துதித்து நின்றார்கள். தம்மை அடைந்தவர்க்கு வேண்டிய எல்லாம் தருபவர் ஆதலாலே, அப் பெருமான், முன்பிருந்த வடிவத்தை விட்டு வெவ்வேறாக ஆறு குழந்தை வடிவம் கொண்டருளினார். 

ஓர் உருவம் மெல்லத் தவழ, ஒர் உருவம் தளர்ந்து நடக்க, ஓர் உருவம் எழுந்து நிற்கமாட்டாமல் விழ, ஓர் உருவம் இருப்பிலே இருக்க, ஒர் உருவம் பொய்கையைக் கலக்கிச் சுற்ற, ஓர் உருவம் தாயிடத்திருக்க. இத்தனை திருவிளையாடலையும் குமரன் ஒருவனே செய்யலுற்றார். 

நவசக்திகள் 
ஈசன் கண்ணினின்றும் எழுந்த பொறிகளின் வெப்பத்தைப் பொறுக்கலாற்றாது உமையம்மை விரைந்தோடிய போது, அவள் பாதச் சிலம்பினின்றும் நவமணிகள் சிதறின. அவ்வாறு சிந்திய மணிகளில், ஈசன், உமையவள் திருவுருவைக் கண்டு "வருக" என்று திருவாய் மலர்ந்தவுடனே, நவமணி உருக்களும் நவசக்திகளாயினர். அந் நவ மாதரும் கருவுற்று, உமையம்மையின் அருளைப் பெற்று, விடை கொண்டு, வீர மைந்தரை ஈன்றனர். மாணிக்கவல்லி வீரவாகுவையும், மற்றைய வல்லிகள் முறையே எட்டு வீரரையும் பெற்றெடுத்தார்கள். இங்ஙனம் தோன்றிய அருந்திறல் வீரர்கள் மாதொரு பாகனது மலரடி பணிந்து எழுந்தார்கள். அப்போது ஈசன் பார்வதியைப் பரிவுடன் நோக்கி, "இவர் மதியுடையார்; வலியுடையார், மானமுடையார்; இன்னோர் நம் மைந்தர்; புதியரல்லர், நந்தி கணத்தைச் சேர்ந்தவர்” என்று நவின்றார்.

முருகனைக் கயிலாயத்திற்கு எடுத்து வருதல் 
இது நிற்க. துன்பமுற்ற பிரமன் முதலிய தேவர்கள் இன்பமுறும் வண்ணம், "நம் கண்ணிலே தோன்றிக் கங்கைப் பொய்கையிலே வளரும் நின் புதல்வனை இம் மலைக்கு அழைத்து வருவோம், "வருக" என உமையிடம் உரைத்தார் ஈசன், அம்மையும் அதற்கிசைய, இருவரும் திருக்கோயிலினின்றும் புறப்பட்டு, கயிலையை விட்டு, மேரு மலையினும் நெடிய இமயமலைப் பக்கம் போந்து, அன்னங்கள் விளையாடும் சரவணப் பொய்கையை வந்தடைந்தார்கள். அங்கு அறுவகை உருவு கொண்டு அமர்ந்த குமரன் தன்மை கண்டு, கருணைகூர்ந்து, பொய்கையின் கரையிலே நின்றார்கள். தாமரை பூத்த தடாகத்தில் ஆறு வேறுருவம் கொண்டு வீற்றிருந்த அரும்பெருங் குமரனும், அண்டர் நாயகனோடு அகில மீன்ற அன்னையைக் கண்டு முக மலர்ந்து மனமகிழ்ந்தார்.

அந் நிலையில் உமையம்மை சரவணப் பொய்கையில் இறங்கித் தன் மைந்தனுடைய ஆறு உருவங்களையும், அன்புடன் அணைத்தெடுத்து, ஆறு முகங்களும் பன்னிரு தோள்களும் உடைய ஒரு திருவுருவமாகச் செய்தருளினாள். உயிர்கள் எல்லாம் ஒடுங்கும் ஊழிக் காலத்தில் எம்பெருமானுடைய சக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேரும் தன்மைபோல், அந்தமற்ற ஆறு உருவமும் ஒன்றாகவே, கந்தன் என்று பேர் பெற்றார், குமரன். அப் பொய்கையில் தொழுது நின்ற கார்த்திகைப் பெண்களை நோக்கி, ஈசன், "நீங்கள் கந்தனை எடுத்து வளர்த்த முறைமையால் இவன் உங்கள் மைந்தன் என்னும் பெயர் பெற்றுக் கார்த்திகேயன் ஆகுக. உங்களுக்கு உரிய நாளாகிய கார்த்திகையில் கந்தனது திரு வடியை வழிபடுவோரது குறை தீர்த்து அவர்க்குப் பரகதியும் தருவோம்” எனப் பகர்ந்தார்.