முருகன் திருவிளையாடல்

பொது விடங்களிலும், தாமரைக் குளங்களிலும், மெல்லிய தென்றல் தவழும் சோலைகளிலும், வற்றாத நீருடைய ஆறுகளிலும் குன்றுகளிலும் குமாரவேள் உலவுவார்; ஆறு முகங்களோடு குழந்தையாக வருவார்; ஒரு முகத்தோடு காட்சி தருவார்; வாலிபனாய் வருவர்; வேதியர் போலவும் முனிவர் போலவும் தோன்றுவார்; அம்பு தொடுக்கும் வீரரைப் போல எங்கும் திரிவார்.
முருகனின் பெருமையைக் கூறுதல்
கந்தன் செய்த திருவிளையாடலைக் கண்டு சிந்தை மகிழ்ந்த உமையம்மையிடம் ஈசன் அவர் சிறப்பினை உணர்த்தலுற்றார். "மாதே! நமது கண்ணில் தோன்றிய குமரனைக் கங்கை தாங்கிச் சென்று சரவணத்திற் சேர்த்தமையால், அவன் காங்கேயன் என்ற பெயரைப் பெற்றான்; அழகிய சரவணப் பொய்கையில் குழந்தையாக வளர்ந்தமையால் சரவணபவன் ஆயினான்; கார்த்திகைப் பெண்கள் தாயாராக வந்து பாலூட்டிய பான்மையால் கார்த்திகேயன் என்று ஒரு பேர் பெற்றான்; அவனுடைய ஆறு உருவங்களையும் நீ ஒன்றாகத் திரட்டிச் சேர்த்தமையால் கந்தன் என்னும் பெயர் பெற்றான். நம் ஆறுமுகங்களும் கந்தனுடைய முகங்களாய் அமைந்தன. பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துமே இவன் பெயரின் ஆறெழுத்தாகப் பொருந்தின. ஆதலால், ஆறுமுகன் நமது சத்தியேயாம். அவனுக்கும் எமக்கும் வேறு பாடில்லை. நம்மைப்போல் அவனும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளான்; குழந்தை போல் இருப்பினும் யாவையும் உணர்ந்தவன்; தன்னை வழிபடும் அடியார்க்குச் செல்வமும் ஞானமும் சிறப்பும் அருள வல்லவன். இனிமேல் குமரவேள் வேதத்திற் கெல்லாம் மூலமாக உள்ள பிரணவத்தின் பொருள் யாது?" எனப் பிரமதேவனை வினவுவான்; அவன் அறியாமல் விழிப்பான்; அப்போது குமரன் அவன் தலையிற் குட்டிச் சிறைக் கோட்டத்தில் அடைத்துவிட்டுத் தானே பல காலம் படைப்புத் தொழில் புரிவான். அப்பால் தாரகாசுரனையும் சிங்கமுகாசுரனையும் சூரபன்மாவையும், ஏனைய அசுரரையும் அழித்துத் தொலைத்து, தேவர்கள் துயரம் தீர்த்து, அன்னார்க்குப் பேரருள் புரிவான்" என்று பேசினார்,பெருமான்.
முருகன் விளையாட்டைக் கண்டு வானவர் வருந்துதல்
மைந்தனது சிறப்பெல்லாம் கேட்டு உமையவள் மன மகிழ்ந்திருந்தாள். குமரவேள் அரிய திருவிளையாடல் புரியலுற்றார்; எட்டுப் பெருமலைகளையும் ஓரிடத்தில் ஒன்றாகக் கூட்டுவார்; பின்பு அவற்றைத் தலைகீழாக நிறுத்துவர்; நெடுங் கடல்களை ஒன்றாகச் சேர்ப்பார்; பூவுலகத்தைச் சூழ்ந்த சக்கரவாள மலையைப் பாதலத்திற் செல்ல அழுத்துவார்; அகன்ற கங்கை யாற்றை அடைப்பார்; இவ்வாறு மண்ணுலகில் வாழும் உயிர்களும், விண்ணுலகிலுள்ள தேவரும் அச்சம் கொண்டு நடுங்குதலேயன்றி, அழிவுறாத வகையில் அளவற்ற திருவிளையாடல்கள் புரிந்தார், குமரவேள். இங்ஙனம் எல்லாவற்றையும் நிலைகுலையச் செய்த பாலனை இந்திரன் முதலிய வானவரும் திக்குப் பாலகரும் கண்டு, "அந்தோ! மண்ணையும் விண்ணையும் மாறுபடுத்தியவன் இவனே. இவனைச் சிறு பாலன் எனக் கருதலாகாது. இவன் வலிமை கண்டால் கொடிய அசுர குலங்களிலும் இவன் கொடியவன்; மாயவித்தையில் யாரினும் வல்லவன். இவனை வெம்போரில் வெற்றி கொள்வோம்” என்று எண்ணித் துணிந்தார்கள்.
வானவர் தலைவனாகிய இந்திரன், வலிய தந்தங்கள் பெற்ற வெள்ளை யானையின்மீது ஏறி, வச்சிரம்,வாள், குந்தம், சிலை இவற்றைக் கையிலே கொண்டு, போர்க்கோலம் பூண்டு, தேவ சேனையோடு சென்று கந்தப் பெருமானை வளைந்துகொண்டான். அப் பெரும் படையைத் தாக்கினார், முருகவேள். போர்க்களத்தில் விழுந்தார். சில தேவர்; ஆற்றாது தோற்று ஓடினார், சில தேவர்; அப்போது ஊழிக் காலத்தில் எல்லோரையும் அழித்து நின்ற ஈசனை ஒத்தார், முருகன்.
சூரியனும், சந்திரனும், இந்திரனும் எட்டுத் திக்குப் பாலகரும், வெள்ளையானையும் மடிந்து கிடந்த போர்க் களத்திற்குச் சென்றான், விண்ணவர் குருவாகிய வியாழன் என்னும் பிருகஸ்பதி. எல்லா முணர்ந்த வியாழன் ஒவியத்தில் எழுத முடியாத பேரழகு வாய்ந்த பிள்ளைப் பெருமானைத் தொழுது துதித்து நின்று, "கருணையங் கடலே உலகத்தை வருத்தும் அசுரரையன்றோ நீ ஒறுத்திடல் வேண்டும்? இவ் வேழை வானவர் நின் திருவடியை மறவாத அன்பர்கள். இவர் செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தான். அப்பொழுது குமரவேள் புன்னகை கொண்டு, இந்திரன் முதலிய தேவர்களும் யானையும் உயிர் பெற்று எழும்படி திருவருள் புரிந்தார்.
வானவர் முருகனை வழிபடல்
எழுந்த வானவர், முருகவேள் முன்னின்று, "கந்தா போற்றி! முக்கட் பெருமான் அளித்த முருகேசா போற்றி! பன்னிரு புயத்தாய் போற்றி! கடம்ப மலர் அணிந்த கடவுளே போற்றி! ஆறுமுக ஆதியே போற்றி! சோதியே போற்றி! தற்பரனாய் நின்ற் தந்தையே போற்றி! என்றும் இளையாய் போற்றி! பெரும் பெயர்க் குமரா போற்றி!” என்று தொழுதார்கள். அந் நிலையில் எட்டுத் திசை களும் பதினான்கு உலகமும் எட்டு மலையும், சக்கரவாளகிரியும், ஏழு கடலும், பெரும்புறக் கடலும், அண்ட வரிசையும், அனைத் துயிரும், பொருள்களும் ஆகி, அயன் அரி அரன் என்னும் திரிமூர்த்திகளும் தன்னுள்ளே அமைய ஒரு பேருருவம் (விசுவ ரூபம்) கொண்டார் குமார மூர்த்தி. இந்திரன் முதலிய வானவர்கள் அறுமுகப்பெருமான் திருவுருவத்தை அவர் அருளால் அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி, அளவிறந்த அண்டங்களும், அழிவற்ற ஆன்ம கோடிகளும், திரிமூர்த்திகளும் தேவர்களும் அங்கிருப்புக் கண்டு வணங்கித் துதித்தார்கள்; "ஐயனே! எல்லா வுலகமும் நீயே யாகி நின்ற தன்மையை இந் நாள்வரை அறிந்திலோம். இன்று நீ வந்து உணர்த்தலால் உணர்ந்தோம். எம்பெருமானே! உன் திரு வருவேயன்றி வேறு ஒரு பொருளும் காணோம். சிறியவராகிய நாங்கள் உனது தோற்றத்தை அறிய வல்லமோ?திருமாலும் பிரமனும் நெடுங்காலம் அடிமுடி தேடியும் அறியப்படாமல் அனல் உருவாக நின்ற சிவபெருமான் வடிவே போல் நின் திருவுருவும் அமைந்தது. எம்பெருமானது திருவருளை அவர்கள் எம்மைப்போற் பெற்றிருந்தால் அLயும் முடியும் கண்டிருப்பார் அன்றோ? ஆதலால் எம் ஐயனே நீ அருவுருவாகி நின்ற ஆதி நாயகனே ஆகும். அடியேம் செய்த அருந்தவத்தால் எம் துன்பத்தைத் "துடைத்து, சூரனாதிய அசுரகரைக் கொன்று வானுலகத்தில் எம்மை வாழ வைத்தற்காகப் பாலன் வடிவத்தில் வந்தாய்" என்று வணங்கினார்கள்.
அப்போது எம்பெருமான் கருணை கூர்ந்து, வான் அளாவி நின்ற பேருருவத்தை நீத்து, ஆறு முகங்களோடு முன்னைய வடிவத்திலே தோன்றினார். வானவர் கோமான் வணங்கித் துதித்து, "ஐயனே! செருக்கும் தருக்கும் உற்ற சூரன் முதலிய பகைவரை யெல்லாம் அழித்து, வானவரும் யானும் பக்கத்தில் நின்று பணி செய்ய, வானத்தில் உயர்ந்த சுவர்க்க லோகத்தை அடைந்து நீயே என் அரசியலை நடத்தி அருள வேண்டும். இதுவே என் வேண்டுகோள்" என்றான். அன்பினால் வழிபடும் அடியார்க்கு இம்மைச் செல்வமும், மறுமைச் செல்வமும், வீட்டின்பமும் கருணை கூர்ந்து அளிக்கும் அறுமுகப் பெருமானுக்கு இந்திரன் தன் செல்வத்தைக் கொடுப்பதாகக் கூறிய வாசகம், அங்கித் தேவனுக்கு ஒரு தீப்பொறி கொடுப்பேன் என்று ஒருவன் சொல்லும் சொல்லை ஒக்குமன்றோ? அந் நிலையில் இந்திரனை நோக்கிக் குமாரவேள் இளநகை கொண்டு, "நீ நமக்குத் தந்த செல்வத்தை நாம் உனக்குத் தந்தோம். நீங்கள் அனைவரும் சேனைகளாக வருக. நாமே சேனாபதியாகி, அசுரர் குலத்தை யெல்லாம் நாசம் செய்வோம். வருந்த வேண்டா” என்று அருளினார். அப்போது இந்திரனும் வானவரும் தம் மனத்துயர் நீங்கும் வண்ணம் ஐயனை அருச்சனை செய்து அன்புடன் வணங்கித் தொழுதனர். கருணை வள்ளலாகிய குமாரவேள் மறைந்து கயிலாய மலைக்குச் சென்றார்.
வேள்வியில் எழுந்த ஆட்டுக் கடாவை முருகன் அடக்குவித்தல்
நாரத முனிவர் சிவபெருமானை நோக்கி ஒரு வேள்வி செய்யத் தொடங்கினார். சிறந்த முனிவர்களும்,தேவர்களும், தவத்தால் உயர்நத வேதியர்களும் சூழ்ந்திருந்து செய்த அவ்வேள்வித் தீயில் செவ்வானம் போன்ற ஆட்டுக்கடா ஒன்று தோன்றிற்று, "எங்கும் யாகம் செய்பவர்கள் எங்கள் இனமாகிய ஆடுகள் பலவற்றைக் கொல்கின்றார்கள்; ஆதலால், யான் இங்கு வேள்வி செய்பவர்களைக் கொல்வேன்” எனத் துணிந்து அங்கித்தேவனது வாகனமாகிய ஆட்டுக்கடா எழுந்து வந்தாற்போல வந்தது, அத்தகர் கழுத்தில் அணிந்த மணிகள் கலீர், கலீர் என்று ஒலிக்க கிண்கிணியும் சிலம்பும் கால்களிற் புலம்ப, விரைந்து வந்த தகரைக் கண்டு யாகசாலையில் இருந்தவர்கள் அச்சமுற்றுச் சிதறி ஓடினர். இங்ஙனம் அத் தகர் எங்கும் திரிந்து சீற்றத்தோடு உயிர்களைச் சிதைத்து வருகையில், முனிவர்களும் நாரதரும் வானவரும் ஓடிக் கயிலாய மலையை அடைந்தார்கள்; அங்கு முருகவேளைக் கண்டு அடிபணிந்தார்கள். அன்னார் கொண்ட துயர் கண்ட பெருமான், "நீங்கள் மிக வருந்துகின்றீர்கள்; என்ன நேர்ந்தது?” என்று வினவினார்.
”ஐயனே! சீற்றமுற்று எழுந்து ஒரு தகர் அழிவுசெய்து திரிகின்றது. அதன் ஆற்றலை அடக்கி, எமது அச்சம் தீர்த்து, யாகக் குறைவையும் நிறைவேற்றி எங்களைப் பாதுகாத்தல் வேண்டும்" என அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களைக் குமாரவேள் அருளோடு நோக்கி, "அஞ்ச வேண்டா" என்று அபயம் அளித்தார்; தம்மையே தஞ்சமாகக்கொண்டு வணங்கும் பரிசனங்களுள் வீரவாகுவை நோக்கி, "நெருப்பிலே பிறந்து இம் முனிவர் செய்யும் வேள்வியை அழித்து விண்ணிலும் மண்ணிலும் உள்ள உயிர்களைக் கொன்று திரிகின்றதாம் ஒரு தகர். அதனை விரைவிற் சென்று கொண்டுவா” என்று பணித்தார். அப் பணி தலை மேற்கொண்ட வீரவாகு, எல்லோரும் நடுங்கக் கொல்லும் தொழிலைக் கொண்ட அத் தகர் அஞ்சும் வண்ணம் ஆரவாரித்து விரைந்து போந்து, அதன் கொம்புகளைப் பற்றி இழுத்துக்கொண்டு, கயிலாய மலையை அடைந்து முருகவேள் முன்னே விடுத்தார். குற்றமற்ற முனிவரும் தேவரும் மனமகிழ்ந்தார்கள். நாரத முனி வரும் மீண்டும் பூவுலகிற் போந்து வேள்வியை நிறைவேற்றினார். அவர் ஆற்றிய தவத்தால் அன்றுமுதல் முருகவேள் அம் மேடத்தை வாகனமாகக் கொண்டார்.
செருக்குற்ற பிரமனை முருகன் சிறை செய்தல்
இங்ஙனம் மேட மூர்த்தியாகிய முருகவேள் திருக்கயிலாய மலையில் விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் பிரமன் முதலாயினோர் சிவ பெருமான் திருவடிகளைத் தரிசிக்க ஆங்குப் போந்தார்கள். சிவபெருமான் சேவடி பணிந்து மீண்ட வானவர் முதல்வனாகிய பிரமதேவனை முருகவேள் நோக்கி, "இங்கு எம் முன்னே வருக” என்றழைத்தார். பிரமனும் முன்னே சென்று, முருகன் திருவடிகளில் விழுந்து வணங்காமல் அஞ்சலி செய்து நின்றான். அப்போது கந்தவேள் அவன் உள்ளத்தில் அமைந்த கர்வத்தை உணர்ந்து, "போதனே? அமர்க!” என்று கூறி இருக்கச் செய்து, "நாள்தோறும் நீ என்ன தொழில் புரிகின்றாய்? என்று வினவினார். "ஈசன் ஆணையால் எல்லாவற்றையும் படைத்தல் என் தொழில்" என்று மறுமொழி கூறினான், பிரமன், அது கேட்ட முருகவேள், குறுநகை செய்து, "மண்ணிலும் விண்ணிலும் ஆள்ள உயிர்களை எல்லாம் படைத்தல் உன் தொழிலாயின், வேதம் முழுவதும் உனக்கு வருமோ? சொல்லுக” என்றார். அப்போது பிரமன், பிரணவத்தை முன்னே சொல்லி வேதத்தின் அடியெடுத்து ஓதத் தலைப்பட்டான். அது கண்ட முருகவேள், "நில்லு நில்லு நீ முதலிற் சொல்லிய "ஓம்" என்னும் சொல்லின் பொருள் கூறுக” எனப் பணித்தார். பிரணவத்தைத் தம் திருமுகங்களுள் ஒன்றாக உடைய முருகன் இவ்வாறு கூற, அதன் பொருள் அறியாத பிரம்மன் எட்டுக் கண்ணையும் வெறித்து விழித்தான்; வெட்கமுற் றான்; விக்கினான்; திகைத்தான்; இருந்தான். பிரம்மன் ஞான வடிவாகிய பிரணவத்தை ஓதினவனே யன்றிப் பொருள் உண்ர்ந்தவன் அல்லன், ஈசன் அருள் பெற்று அதனை முன்னமே அறிந்தானில்லை. என் செய்வான்? மயங்கினான். அதன் பொருளை யாவ்ரே சொல்ல வல்லார்? மாசற்ற மறைகளுக்கெல்லாம் முதலிலும் முடிவிலும் ஒதப்படுவதாகிய ஓம் என்னும் ஓர் எழுத்தின் உண்மை யுணராது, மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய பிரமதேவன் மயங்கினான் என்றால், நாம் சிலவற்றை அறிந்துள்ளோம் என்பது * நகையாடற்குரிய தன்றோ? கலை ஞானத்தால் அறிய முடியாத பிரணவத்தின் பொருளைக் கூறமாட்டாது மயங்கிய பிரமனை நோக்கி, "இதன் பொருள் உணர்ந்திலையே! இப்படித்தான் நீ படைப்புத் தொழில் செய்வதோ?” என்று நான்கு தலைகளும் குலுங்க அவனைக் குட்டினார், குமாரவேள்; மேலும், அவன் மெய்யில் விலங்கு பூட்டிச் சிறைக்கோட்டத்தில் அடைப்பித்தார். கந்தமாதன கிரியை அடைந்து தாமே எல்லா உயிர்களையும் படைக்கத் திருவுளம் கொண்டார். மன்னுயிர்க்கு உயிராய், பரஞ்சுடர் ஒளியாய், வேதத்தின் எல்லையாய், படைத்தல் முதலிய ஐந்தொழிலுக்கும் மூலமாய் அமைந்த அறுமுகச் செவ்வேள் பிரமதேவனாக அமர்ந்து படைத்ததும் ஓர் அற்புதமோ?
திருமால் முதலியோர் ஈசனிடம் முறையிடல்
இவ்வாறு நெடுங்காலம் கழிந்தது. பிரமதேவனைச் சிறையி னின்றும் விடுவிக்கக் கருதிய திருமால், தேவர்களோடும் முனிவர்களோடும் திருக்கயிலாய மலையை அடைந்து, நந்தி தேவரால் முறைப்படி உள்ளே அனுப்பப்பெற்று, தன் நிகரில்லாத் தலைவன முறை திருவடிகளிலே விழுந்து எழுந்து, "ஆண்டவனே! நின் மகன் இங்கு வந்த பிரமதேவனைப் பிரணவத்தின் பொருள் கேட்டான்; அதனை அறியாத அவனைச் சிறையில் இட்டான்; படைப்புத் தொழிலும் தானே செய்கின்றான். ஐயனே கந்தவேள் போலவே பிரமனும் உமக்குப் பிள்ளையே! அவன் தீவினையால் அளவிறந்த காலம் அருஞ்சிறையில் அகப்பட்டு மனம் நொந்து வாடி வருந்துகின்றான்” என்று விண்ணப்பம் செய்தான்.
ஈசன் பிரமனை விடுவித்தல்
அது கேட்ட சிவபெருமான் மனமிரங்கி, இடபத்தின் மேல் எழுந்தருளி, அறுமுகப் பெருமான் வீற்றிருந்த கோயில் முன்னே வாகனத்தினின்றும் இறங்கி, வானவர் போற்ற உள்ளே சென்றார். கருணையோடு வந்த பெருமானைக் கண்ட முருகவேள், "என் தந்தை வந்தார்" என்று மனமகிழ்ந்து எழுந்து எதிர்கொண்டு அவர் திருவடிகளை வணங்கி, அவரை அழைத்துச் சென்று அழகிய அரியாசனத்தில் எழுந்தருளச்செய்து, "உயிர்க்குயிராகிய கர்த்தனே! இங்குப் போந்த காரியம் யாது?" என்று வினவினார். அப்போது சிவபெருமான், "ஐய! மெல்லிய மலர்க் கோயிலில் வசிக்கும் பிரமனைச் சிறையில் நீ அடைத்து வைத்தாய் அச் சிறையை நீக்கக் கருதித் திருமால் முதலிய தேவருடன் இங்கு வந்தோம். அவனை விட்டுவிடு” என்று கூறினார்.
இங்ஙனம் ஈசன் அன்புடன் பேசிய இனிய மொழிகளைக் கேட்ட முருகவேள், தலையில் அமைந்த அழகிய திருமுடியை அசைத்து, "ஐயனே, எவ்வுயிர்க்கும் உறுதி பயப்பதாகிய பிரணவத்தின் பொருள் அறியாத பிரமன், சதா காலமும் உயிர்களைப் படைக்கின்றான். என்பது பேதைமையே! அவன் வேதங்களை உணர்ந்தான் என்பதும் அத்தன்மையதே, எல்லா உலகங்களையும் படைக்கின்ற பெருந் தொழிலைக் கைக்கொண்டிருத்தலால், பிரமன் யாரையும் எப்பொருளையும் மதிக்கின்றா னல்லன்; நித்தலும் உம்மை வழிபட்டும், தான் என்னும் அகங்காரம் தவிர்ந்தானில்லை. ஆதலால், அவனைச் சிறையினின்று நீக்கமாட்டேன்” என்று கூறினார். அப்போது கருணை வள்ளலாகிய சிவபெருமான், "மைந்தனே! என்ன செயல் செய்கின்றாய்! பிரமனை விடும்படி நந்தியிடம் சொல்லியனுப்பினோம். அவன் சொன்ன சொல்லையும் செவியிற் கொள்ளவில்லை. இங்கு நாமே வந்து சொல்லியும் கேட்கவில்லை; தடுத்துப் பேசுகின்றாய்” என்று கோபிப்பார் போலக் கூறினார். எம்பெருமானது திருவுள்ளக் குறிப்பை உணர்ந்த அறுமுகன், "ஐயனே! உமது சித்தம் இதுவாயின், பிரம தேவனைச் சிறையினின்று விடுவித்து விரைவில் தருவேன்" என்று அன்புடன் பணிந்தார். அவ்வண்ணமே செய்க" என்று பெருமான் அருள்புரிந்தார்.
அந் நிலையில் பூதர்களுள் சிலர் சென்று, ஒரு குகையில் ஒடுங்கியிருந்த பிரமதேவனது விலங்கைத் தறித்து, அவனைக் கொண்டுசென்று குன்றுதோ றாடும் குமரவேள் முன்னே விட்டார்கள். அவர் பிரமதேவன் கையைப் பற்றி அழைத்துச் சென்று எம்பெருமான் முன்னே விட்டார். ஈசனது பாதம் பணிந்து எழுந்து, வெட்கத்தால் குறுகி நின்றான் பிரமன், ஈசன் அவனை நோக்கி, "இருஞ்சிறையில் பல நாள் இருந்து இளைத்தாய் போலும்" என்று கூறியருளினார். இவ்வாறு நாதன் நல்லருள் புரிந்த போது பிரமதேவன், "ஐயனே! குமாரவேள் கொடுத்த தண்டனை குற்றமன்று. அது நல்லறிவு தந்தது; என் அகங் காரத்தை ஒழித்தது; துன்பம் பயக்கும் தீவினைகளை அழித்தது: என்னைப் புனிதன் ஆக்கியது" என்று பேசினான். -
அது கேட்ட மகிழ்வுற்ற ஈசன், அழகிய குமாரனை எடுத்து அணைத்து, உச்சி மோந்து, "பிரமனும் அறியாத "ஓம்" என்னும் சொல்லின் பொருள் உனக்குத் தெரியுமோ? தெரிந்தால் அதனை இப்போதே சொல்” என்று வினவினார்.
"முற்றறிவுடைய முதல்வா! உலகமெல்லாம் ஈன்ற உமாதேவியார்க்கு மற்றையோர் அறியாதவாறு நீர் சொல்லி யருளிய மூலப் பொருளை எல்லோரும் கேட்க இங்குக் கூறலாமோ? என்ற குமாரவேள் சொல்லிய பொழுது, ஈசனார் மனம் குளிர்ந்தார். மீண்டும் மைந்தனை நோக்கி, "எமக்கு மட்டும் அப் பொருளை மறைவாகக் கூறுவாயோ?" என்று தம் திருச்செவியைச் சாய்த்தார், ஈசன், அப்போது முருகன் பிரணவம் என்னும் ஓங்காரத்தின் உட்பொருளை எடுத்துரைத்தார். அவ்வுரை கேட்டு, ஞான நாயகனாகிய ஈசன் அகமகிழ்வடைந்தார்; மைந்தனுக்கு நல்லருள் புரிந்தார்; அங்கேயே தலைமையோடு இருக்கும் வண்ணம் திருவருள் செய்து, முன்போலவே இடப வாகனத்தில் ஏறிச் சென்று எம்பெருமான் கயிலாய மலையை அடைந்தார்.
இந்திரன் ஈசனிடம் முறையிடல்
இவ்வாறு சில நாள் இருந்த குமரவேள், திருவருட் இந்திரன் செயலால், கயிலாய மலையில் வீற்றிருந்தருளும் அம்மையப்பருடைய திருவடிகளை வணங்கத் திருவுளம் கொண்டார். அங்ஙனமே சென்று, அவரைத் தொழுது, கயிலாயத்தில் கந்தவேள் தங்கியிருக்கையில், இந்திரன், தன் நெடிய மனக்கவலையைப் பிரமதேவனிடமும் திருமாலிடமும் முறையிட்டு அவரை முன்னிட்டுக் கயிலாய மலையை வந்தடைந்தான். "அன்பினால் உலகம் காக்கும் அம்மையோடு அமர்ந்து அருளும் ஆண்டவனே அளவற்ற காலமாக அருந்திறல் வாய்ந்த சூரன் முதலிய அசுரர்களால் வன்மையற்று வருந்தினோம்; ஒடுங்கினோம். என் மைந்தனாகிய சயந்தனும், எண்ணிறந்த வானவரும், எல்லையற்ற அழகுடைய அரம்டையரும், கொடுந்தொழில் புரியும் அரக்கர்கோன் ஆளும் நகரத்தில் சிறையிருக்கிறார்கள். எம்பெருமானே! முன்பு யான் தவம் முயன்றபொழுது, நீர் எழுந்தருளி, நம்மிடம் ஒரு குமரன் தோன்றுவான்; அவனைக்கொண்டு அசுரரை அழித்து உமது துயரத்தை ஒழிக்கின்றோம் என்று அருளிச்செய்தீர்! அவ்வாறே திருக்குமாரனும் தோன்றியுள்ளார்; ஆயினும் இன்றளவும் எம் துன்பம் தீர்ந்ததில்லை. மும்மை யுலகும் வணங்கும் எம்மானே! எம்மைப் பற்றி நிற்கும் கொடிய தீவினையின் பயன் இன்னும் தீர்ந்ததில்லையே! சூரனது வலிமையை அழிக்கத் தக்கவர் வேறு யாருமிலர். கங்காதரனே! இங்கே முறை யிடுவதல்லால், வேறு யாரிடம் சொல்லுவோம்? துன்பத்தை ஒழிக்கவும், செல்வத்தை அளிக்கவும், தந்தையரேய்ன்றி மைந்தர்க்கு வேறு யாருள்ளார்? ஆதலின், இனி அடியேங்களைக் காத்தருளல் வேண்டும்” என்று இந்திரன் வணங்கி நின்றான்.
அசுரனை அழிக்க ஈசன் முருகனை அனுப்புதல்
இம்மை மறுமைப் பயன்களை அளித்தருளும் இறைவன் அச் சொற்களைக் கேட்டுக் கருணை கூர்ந்து, "இனி மன வருந்தாதீர்!" என்று அருளிச்செய்து அருகே யிருந்த முருகன் திருமுகத்தை நோக்கி, "உலகத்தை நிலை குலைத்துப் பல உயிர்க்கும் துயர் இழைத்து, வானவர் நகரத்தை அழித்து, தீமையே புரிந்து திறம்பட வாழும் சூரனையும் அசுரர் குலத்தையும். நீ சென்று கொன்று, சுவர்க்கலோகத்தின் ஆட்சியை மீண்டும். இந்திரனுக்குக் கொடுத்து இங்கு வந்து சேர்வாயாக" என்று திருவாய் மலர்ந்தார். பின்னர், பஞ்ச பூதங்களையும் அழிக்க வல்லதும், உயிர்கள் அனைத்தையும் ஒருங்கே நாசம் செய்ய வல்லதும், மாற்றாரது வலிமையையும் வரங்களையும் சிதைத்து உயிருண்ண வல்லதும், கொல்லும் படைக்கலங்களுக் கெல்லாம் தலைமையுற்று விளங்குவதும் ஆகிய ஒப்பற்ற வேலாயுதத்தை ஈசன் குமாரவேள் கையில் கொடுத்தார். அந் நிலையில் உமையம்மை, அருமைத் திருக்குமாரனை அருகில் வைத்து, அருளோடு அணைத்து, உச்சி மோந்து, "அப்பா! நூறாயிரத்து ஒன்பது வீரர்களும் உன்னை நெருங்கிவர, பெருந்திறல் பெற்ற அசுரர் குலத்த்ை வேரறுத்து வானவர் குறையைத் தீர்த்து இங்கே வருக” என்று ஆசி கூறினாள். இவற்றைக் கண்ட திருமாலும், பிரமனும், இந்திரனும், "ஆண்டவனே! எம்மைப் பாதுகாத்தருளினி எங்கள் மனத்தில் இனி ஒரு குறையும் இல்லை; இன்றே பிழைத்தோம், பிழைத்தோம்” என்று அம்மையப்பருடைய திருவடிகளைத் தொழுதார்கள். அப்போது எம்பெருமான், "நீங்களும் நன்மை புரியும் கந்தனோடு செல்வீர்களாக” என விடை கொடுத்தருளினார்.